தேசிய சமாதானப் பேரவையினால் "நல்லிணக்கத்துக்கு மதங்கள் ; சகல தரப்புகளையும் அரவணைக்கும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல்" (Religions to Reconcile ; Strengthening Inclusive Reconciliation) என்ற தொனிப்பொருளில் கொழும்பில் ஏற்பாடு செயயப்பட்டிருந்த தேசிய கருத்தரங்கில் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு மற்றும் தேசிய நல்லிணக்கத்தைச் சாதிப்பதற்கு அரசியல் கருத்தொருமிப்பின் தேவை உணரப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
வடக்கு, கிழக்கு உட்பட 17 மாவட்டங்களில் இருந்து பல்வேறு மதங்களின் தலைவர்களும் மதங்களுக்கு இடையிலான குழுக்களைச் சேர்ந்த சமுதாய அடிமட்டத் தலைவர்களுமாக 300க்கும் அதிகமானவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
முன்னெடுக்கப்படவேண்டிய அவசியமான நடவடிக்கைகள், நிறுவப்படவேண்டிய புதிய பொறிமுறைகள் மற்றும் உகந்த சூழ்நிலையை உருவாக்கவேண்டிய தேவை குறித்து கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசாங்க மற்றும் எதிரணி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதன்போது, தனது நல்லிணக்கத் திட்டத்தை விளக்கிப் பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு நல்லிணக்கச் செயன்முறையின் இறுதிக்கட்டங்களில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
சிறைக்கைதிகள், காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் அமைக்கப்படவிருக்கும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஊடாக அவற்றுக்கு தீர்வுகளை காண்பது, காணிப் பிரச்சினைகளை கையாள்வதற்கு நடைமுறைப்படுத்தப்படவேண்டிய காணி ஆணைக்குழு சட்டத்தை நிறைவேற்றுதல், பொதுப்பட்டியல் ஊடாக மாகாண சபைகளை பலப்படுத்துதல் குறித்து அவர் விளக்கமளித்தார்.
இவை தொடர்பில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வினை காண்பதற்கு முன்னெடுக்கப்படவிருக்கும் ஒருமித்த யோசனைகளை உள்ளடக்கிய 'இமாலயப் பிரகடனத்தை' சில பௌத்த மதகுருமாரும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களும் கையளித்திருக்கிறார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.
ஜனநாயக செயன்முறைகளைப் பின்பற்றுதல், தேர்தல்களை நடத்துதல் மற்றும் நிறுவனங்களின் சுயாதீனத்தை உறுதி செய்தல் உட்பட உகந்த சூழ்நிலையை உருவாக்கவேண்டிய தேவை மீது கவனத்தைச் செலுத்தி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் உகந்த சூழ்நிலையை உருவாக்குவதில் சிவில் சமூகத்தினால் முன்னெடுக்கப்படக்கூடிய பணிகளை பொறுத்தவரையில் அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களை பதிவுசெய்வதற்கும் கண்காணிப்பதற்கும் கொண்டுவரப்படவிருக்கும் புதிய சட்டம் பெரிய பின்னடைவாக இருக்கும் என்று தேசிய சமாதானப் பேரவை கருத்தை முன்வைத்தது.
எதிர்க்கட்சி தலைலர் சஜித் பிரேமதாச கருத்தரங்குக்கு அனுப்பிவைத்த செய்தி பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தது.
"சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கு தங்களை அர்ப்பணித்திருக்கும் அமைப்புக்கள் குறைந்தபட்ச சட்டக் கட்டுப்பாடுகளுடன் அவற்றின் பணிகளை முன்னெடுப்பதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதில் எந்த அரசாங்கத்துக்கும் இருக்கும் கடப்பாடு பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது என்று நாம் நம்புகிறோம்" என்று சஜித் பிரேமதாச செய்தியில் கூறியிருந்தார்.
இனநெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கும் தேசிய நல்லிணக்கத்தை கொண்டுவருவதற்கும் கருத்தொருமிப்பு எந்தளவுக்கு தேவையோ அதேயளவுக்கு ஜனநாயக மற்றும் மனித உரிமைகளையும் சிவில் சமூகத்தின் சுதந்திரங்களையும் பாதுகாப்பது தொடர்பிலும் கருத்தொருமிப்பு அவசியம் என்று நாம் நம்புகிறோம்.
அரச பொறிமுறைகள் நம்பகத்தன்மையுடன் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு சிவில் சமூக சுதந்திரங்கள் பாதுகாக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படவேண்டியது அவசியம்.
அரசு தங்களுக்கு பாதுகாப்பு அளித்து பேணி வளர்க்கிறது என்று சகல மக்களும் உணர்கின்ற சூழ்நிலையே நேர்மறையான சமாதானம் என்று காலஞ்சென்ற பேராசிரியர் ஜெஹான் கல்ருங் கூறினார். அத்தகைய சமாதானத்தை கருத்தொருமிப்பு ஒன்றினால் மாத்திரமே கொண்டுவர முடியும். மாறாக, வெறுமனே போர் இல்லாத சூழ்நிலை எதிர்மறையான சமாதானமே ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM