பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 30 வருடங்களுக்கும் அதிகமான சிறைத்தண்டனையை ஆர்க்டிக் பிராந்தியத்தின் தொலைதூர சிறையில் அனுபவித்துக்கொண்டிருந்த அலெக்சி நவால்னி யின் மரணம் விளாடிமிர் புட்டின் கட்டியெழுப்பிய அரசில் எதிர்ப்பியக்கத்தினதும் மாறுபட்ட கருத்துக்களினதும் இன்றைய அந்தஸ்தை அதிர்ச்சிக்குரிய வகையில் நினைவூட்டுவதாக இருக்கிறது.
பல வருடங்களாக கிரெம்ளினின் முக்கியமான எதிர்ப்பாளராக நவால்னி விளங்கிவந்திருக்கிறார். 2020ஆம் ஆண்டில் அவருக்கு நஞ்சூட்டிக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்றில் உயிர்தப்பிய அவர் சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார். 'சுதந்திரத்துக்காக போராடுவதற்காக' திரும்பிவந்த அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவரது மரணத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் தெரியவில்லை.
நச்சுத் தாக்குதலுக்கு நவால்னிக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. சிறையில் அவருக்கு உகந்த சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் அதனால் உண்ணாவிரதம் இருந்ததாகவும் அவரது வழக்கறிஞர்கள் முறையிட்டிருந்தார்கள்.
தனது கணவரைப் புட்டின் கொலை செய்துவிட்டார் என்று கூறியிருக்கும் நவால்னியின் மனைவி ஜூலியா நவால்னாயா அவரது போராட்டத்தைத் தொடரப்போவதாகச் சூளுரைத்திருக்கிறார்.
நவால்னியின் மரணத்துக்கு காரணம் எதுவாக இருந்தாலும், இந்த துன்பியல் நிகழ்வுக்கான பழியில் இருந்து ரஷ்ய அரசு தப்பமுடியாது. நவால்னி கட்டியெழுப்பிய அரசியல் எதிர்ப்பியக்கத்தை நிர்மூலம் செய்வதில் ரஷ்ய அரசு உறுதியாக இருந்தது. ரஷ்யாவில் கட்டுப்பாடான முறையில் கையாளப்படும் ஆட்சி முறைமையில் கிரெம்ளினால் சகித்துக்கொள்ளப்படும் எதிர்க்கட்சிகளும் அரசினால் எதிரிகளாக நடத்தப்படும் எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்.
ஒரு வலதுசாரி இனத்துவ தேசியவாதியாக தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்த நவால்னி அரசினால் எதிரிகளாக நடத்தப்படும் எதி்ப்பாளர்கள் வகைக்குள் இருந்தார்.இதே வகைக்குள் வரும் இன்னொரு எதிரணி அரசியல்வாதியான போறிஸ் நெம்ட்சோவ் 2015 ஆண்டு மாஸ்கோவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ரஷ்யாவை 24 வருடங்களாக ஆட்சி செய்துவரும் புட்டின் இவ்வருடத்தைய தேர்தல் மூலமாக மேலும் ஆறு வருடங்களுக்கு தனது ஆட்சியை நீடிக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கிறார். நவால்னியிடம் இருந்து எந்தவொரு பெரிய அரசியல் அச்சுறுத்தலையும் புட்டின் எதிர்நோக்கவில்லை.
லெவாடா நிலையம் போன்ற சுயாதீனமான அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் புட்டினின் செல்வாக்கு உயர்ந்த மட்டத்திலேயே இருக்கிறது. தேர்தல்கள் மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. உக்ரெய்ன் போரை கடுமையாக கண்டித்த இரு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடைசெய்யப்பட்டிருக்கும் அதேவேளை, புட்டினின் எதிராளிகளும் அவரின் தலைமைத்துவத்தை மெச்சும் விசித்திரமான நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது.
நவால்னி பல தசாப்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பியக்கங்களுக்கு வாய்ப்பு இருக்கவில்லை. என்றாலும் நிவால்னி சிறையில் மரணமடைய வேண்டியிருந்த நிலைமை எதிர்ப்புக் குரல்களுக்கு அரசு எந்தளவுக்கு அஞ்சுகிறது என்பதைக் காட்டுகிறது. நவால்னியின் மூன்று வழக்கறிஞர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதேவேளை வேறு இரு வழக்கறிஞர்கள் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் செய்கிறார்கள்.
நவால்னியை சிறையில் அடைத்து வைத்திருந்ததன் மூலம் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு செய்தியைக் கூறுவதற்கு அரசு விரும்பியது. 'வழிக்கு வாருங்கள் அல்லது விளைவுகளுக்கு முகங்கொடுங்கள்' என்பதே அந்த செய்தியாகும்.
நச்சுத் தாக்குதலையடுத்து சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கூட்டிச்செல்லப்பட்ட பிறகு மீண்டும் ரஷ்யா திரும்பிவருவதற்கு விரும்பிய நவால்னி தனது அரசியல் செயற்பாட்டுக்கான உச்சவிலையைச் செலுத்தியிருக்கிறார்.
கிரெம்ளின் அதன் கைகளில் மேலும் மேலும் அதிகாரங்களைக் குவித்துக்கொண்டிருக்கின்ற அதேவேளை ரஷ்யா வெளிநாட்டில் நீண்ட போர் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது. எந்த விமர்சனக்குரலையோ அல்லது எதிர்பியக்கத்தையோ அரசு விரும்பவில்லை.
பயமுறுத்துவதன் மூலமாக இதுவரையில் ஒழுங்கொன்றை அரசு நிலைநிறுத்தியிருக்கக்கூடும். ஆனால், அது நிலைபேறான ஆட்சிமுறையின் ஒரு வகைமாதிரி அல்ல என்பதை ரஷ்யாவின் சொந்த வரலாறே உணர்த்தி நிற்கிறது.
(தி இந்து)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM