சாதனை படைத்து வரும் 'கயல்' ஆனந்தியின் 'மங்கை' பட முன்னோட்டம்

22 Feb, 2024 | 04:20 PM
image

திருமணம் செய்து கொண்ட பின்னரும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகை பவனி வரும் நடிகை 'கயல்' ஆனந்தி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'மங்கை' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இதனை இயக்குநர்கள் ரோஹன், லெனின் பாரதி, ஹலீதா ஷமீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயன்முறை மருத்துவராக இருந்து பதினைந்து ஆண்டு காலம் கடுமையாக உழைத்து இயக்குநராக அறிமுகமாகி இருக்கும்  குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மங்கை' எனும் திரைப்படத்தில் குணச்சித்திர நடிகர் ஜெயப்பிரகாஷின் மகனான துஷி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை 'கயல்' ஆனந்தி நடித்திருக்கிறார். 

இவர்களுடன் பிக் பொஸ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். ஜே. ஸ்டார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீஸன் இசையமைத்திருக்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே எஸ் எம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஆர். ஜாபர் சாதிக் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஒன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

முன்னோட்டத்தில் ஒரு பயணத்தின் போது நாயகனும் நாயகியும் அறிமுகமாகிறார்கள். அந்த பயணத்தின் போது எதிர்பாராமல் நடைபெறும் விபத்து... கதாபாத்திரங்களின் எதிர்பார்ப்புகளுக்கும், லட்சியங்களுக்கும் பாரிய தடையை ஏற்படுத்துகிறது. இதன் பிறகு உச்சகட்ட காட்சியில் கதையின் நாயகியான 'மங்கை' எம்மாதிரியான முடிவினை மேற்கொள்கிறார் என்பதுதான் யூகிக்க முடியாத சுவாரசியமான முடிச்சு..! என அவதானிக்கப்படுகிறது.

படத்தின் நாயகனான துஷியை பற்றி அவரது தந்தையும், நடிகருமான ஜெயபிரகாஷ் பேசுகையில், '' எம்முடைய இரண்டு மகன்களும் திரைத்துறையில் பணியாற்ற விருப்பமில்லாதவர்கள் என்று தான் முதலில் நினைத்திருந்தேன்.

நான் நடிகரான பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தருமாறு பலமுறை கேட்டும் அவர்கள் அது போரடிக்கும் விடயம் என மறுத்துவிட்டார்கள். ஆனால் இயக்குநர் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் எனது மகனை 'ஈசன்' படத்தில் நடிக்க வைத்தனர். இதற்காக டிரையல் சூட் நடைபெற்ற போது, 'சொதப்புவான்' என்று நான் பதற்றமடைந்தேன்.

ஆனால் துஷி எந்தவித பதட்டமும் இல்லாமல் இயல்பாக நடித்தான்.  இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு அவருடைய கதை தேர்வும், சூழலும் பொருத்தமாக அமையவில்லை. தற்போது 'மங்கை' படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தினை தயாரிப்பாளர் சிறந்த முறையில் அனைத்து தளங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறார். இந்தத் திரைப்படம் வெளியான பிறகு இயக்குநரும், கதாநாயகி 'கயல்' ஆனந்தியும் பேசப்படுவது போல்... துஷியும் கவனிக்கப்படுவார் என்றே நம்புகிறேன். நடிகராகிவிட்ட துஷிக்கு ஒரு தந்தையாக சில அறிவுரைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவை அனைத்தையும் எமக்காக எம்முடைய தாயார் சொல்லியவை. அதை அவனுக்கு சொல்லி இருக்கிறேன். அதனால் அவனும் வெற்றி பெறுவான் என ஆவலுடன் காத்திருக்கிறேன். '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்