(நெவில் அன்தனி)
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்த இலங்கை 72 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியம்வாய்ந்த முதுலாவது ரி20 கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்து தொடரைக் தனதாக்கிக்கொண்டது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா ஸத்ரானின் விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்த்த வனிந்து ஹசரங்க தனது 63ஆவது போட்டியில் 100ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார். மேலும் ஒரு விக்கெட்டை இந்தப் போட்டியில் கைப்பற்றிய அவர் 101 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியுள்ளார்.
ஆப்கன் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ரஷீத் கானுக்கு அடுத்ததாக அதிவேகமாக (குறைந்த போட்டிகள்) 100 விக்கெட்களை வீழ்த்தியவர் ஹசரங்க ஆவார். ரஷீத் கான் 53 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.
அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் லசித் மாலிங்கவுக்கு அடுத்ததாக 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்த இரண்டாவது இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க ஆவார். சர்வதேச ரி20 அரங்கில் 100 விக்கெட்களைக் கைப்பற்றிய 11ஆவது வீரராவார்.
இன்றைய போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸின் சகலதுறை ஆட்டம், சதீர சமரவிக்ரம நிதானமாக குவித்த அரைச் சதம், பினுர பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரண ஆகியோரின் துல்லியமான பந்துவீச்ச என்பன இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின.
இன்றைய போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றிய மதீஷ பத்திரண இதுவரை மொத்தமாக 6 விக்கெட்களைக் கைப்பற்றி இந்தத் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் முன்னிலையில் இருக்கிறார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைக் குவித்தது.
சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் கடைசி ஓவர்களில் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டங்களே இலங்கைக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையை பெற்றுக்கொடுத்தன.
பெத்தும் நிஸ்ஸன்க (25), குசல் மெண்டிஸ் (23) ஆகிய இருவரும் 23 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
அடுத்து ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வாவும் சதீர சமரவிக்ரமவும் 3ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தனஞ்சய 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
முதலாவது போட்டியில் அதிரடியாக அரைச் சதம் குவித்த வனிந்து ஹசரங்க இந்தப் போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 பந்துகளில் 22 ஓட்டங்களை விளாசி ஆட்டம் இழந்தார். (110 - 4 விக்.)
அடுத்து களம் புகுந்த சரித் அசலன்க (4) நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை.
இந் நிலையில் சதீர சமரவிக்ரமவுடன் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ் நிதானத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தார்.
முதல் 12 பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற்ற அவர் அதன் பின்னர் 10 பந்துகளில் 30 ஓட்டங்களை விளாசி 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 4 சிக்ஸ்களையும் 2 பவுண்டறிகளை அடித்தார்.
மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 42 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் மொஹமத் நய்ப் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
188 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 17 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் தவறான அடி தெரிவுகளால் விக்கெட்களைத் தாரை வார்த்தனர்.
கரிம் ஜனாத் (28), மொஹமத் நபி (27) ஆகிய இருவரே ஆப்கானிஸ்தான் சார்பாக 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
ஏஞ்சலோ மெத்யூஸ் தனது முதல் இரண்டு ஓவர்களை மிகவும் துல்லியமாக வீசி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைப் கைப்ற்றி ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடியைக் கொடுத்தார்.
அவரை விட பினுர பெர்னாண்டோ 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஏஞ்சலோ மெத்யூஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM