உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள புதிய பாணியிலான போராட்டமொன்று அவசியமாகும் - ரில்வின் சில்வா

19 Feb, 2024 | 09:38 PM
image

ஜனாதிபதி தேர்தலை பிற்போடவோ தவிர்த்துப் பயணிக்கவோ முடியாது. அவ்வாறு தவிர்த்துப் பயணிக்க எவர் இடமளித்தாலும் நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். தவிர்த்துப் பயணிக்க முயற்சி செய்தால் வீதியில் இறங்கி அவர்களை விரட்டியடித்திட பெண்கள் ஒரே மூச்சுடன்  முன்னணி வகிப்பர் என்பது திண்ணமென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பெண்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு‍கையில்,

எமது நாட்டின் 76 வருடகால சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒட்டுமொத்த சக்திகளையும் ஒன்றுசேர்த்து வருகிற வேளையில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று ரீதியாக பெண்களை ஒரு சக்தியாக சேர்த்துக்கொண்டது.

பெண்கள் வெறுமனே வாக்குகளை அளிக்கின்ற ஒரு பிரிவினர் அல்ல. அரசாங்கங்களை அமைக்கின்ற, அந்த அரசாங்கங்களுடன் ஒன்றுசேர்ந்து நாட்டை கட்டியெழுப்புகின்ற கௌரவமான ஒரு குழுவாகவே ஒன்றுசேர்ந்து வருகின்றனர்.

அவர்கள் தற்போது ஒரு வரலாற்று ரீதியான  சக்தியாக இயங்கி வருகிறார்கள். இன்னும் ஏறக்குறைய எட்டு மாதங்களில் எமது யுகம் நிர்மாணிக்கப்படுகின்ற தொடக்க நிலையாக ஜனாதிபதி தேர்தல் வருகிறது. 

ஜனாதிபதி தேர்தலை பிற்போடவோ தவிர்த்துப் பயணிக்கவோ முடியாது. அவ்வாறு தவிர்த்துப் பயணிக்க எவர் இடமளித்தாலும், நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். தவிர்த்துப் பயணிக்க முயற்சி செய்தால் வீதியில் இறங்கி அவர்களை விரட்டியடித்திட பெண்கள் ஒரே மூச்சுடன்  முன்னணி வகிப்பர் என்பது திண்ணம்.

இயலாத நிலையிலும் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருவது புலனாகிறது. பாராளுமன்ற அமர்வு நிறுத்தத்துக்குப் பின்னர் சபாநாயகரின் அக்கிராசனத்தில் அமர்ந்து உரை நிகழ்த்துவதை ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார். 

பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துகையில் 2048இல் நாட்டை கட்டியெழுப்ப வாய்ப்பளிக்குமாறு கோரினார். ரணில் விக்கிரமசிங்கவின் பிரதம சீடரான வஜிர அபேவர்தன 2048இல் நாடு சீரடைந்து, ஐரோப்பாவின் வெள்ளைக்காரப் பெண்கள் இங்கு மனைப்பெண்களாக சேவையாற்ற வருவார்களென கூறினார். காணி உறுதிகளை வழங்குவதாக கூறி ஜனாதிபதி தேர்தலுக்கு வருவதற்காகவே நாடு முழுவதிலும் உள்ளவர்களை தம்புள்ளைக்கு திரட்டினார்.

மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இங்கு ஆயிரக்கணக்கில் குழுமியிருப்பது உறுதிகளை பெற்றுக்கொள்வதற்காக அல்ல. நாட்டை வீழ்த்தியவர்களை விரட்டியடித்து நாட்டை கட்டியெழுப்ப தயாராகுங்கள் எனும் செய்தியை கொடுப்பதற்காகவே இங்கு வந்துள்ளார்கள். 

ஒரு பை அரிசியை கொடுத்தும் வாக்குகளை சேகரிக்க ரணில் முயற்சி செய்கிறார். அரிசிப் பைக்காக, தகரத் தகட்டுக்காக வாக்குகளை அளித்து அரசாங்கங்களை அமைத்த யுகம் முற்றுப்பெற்றுவிட்டது என்பதை நாங்கள் அவருக்கு கூறவேண்டும். இது ஒரு புது யுகம், திசைகாட்டியின் யுகம். அரிசியல்ல, தங்கத்தை பகிர்ந்தளித்தாலும் இந்த நாட்டின் பெண்கள் திசைகாட்டியை வெற்றிபெறச் செய்விக்க தயார் எனும் முடிவினை எடுத்துவிட்டார்கள்.

எம் எதிரில் நிலவுகின்ற சவால் கொஞ்ச நஞ்சமல்ல. நல்லதொன்று இருக்கின்ற இடத்துக்கு நல்லதொன்றைக் கொடுப்பது சிரமமான வேலையல்ல. தீய ஒன்று இருக்கின்ற இடத்துக்கு ஊக்கமுள்ள மனிதர்களால் மாத்திரமே நல்லதொன்றை கொடுக்க முடியும். மிகவும் கெட்ட ஒரு நாட்டுக்குப் பதிலாக நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக பெண்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

உற்பத்தி வழிவகைகளை சீரழித்து, தொழில் முயற்சிகளை சீரழித்து, எமக்கு உயிர் வாழ்வதற்கான வருமான வழிவகைகளை ஈட்டிக்கொள்ள முடியாத, வங்குரோத்து அடையச் செய்வித்த ஒரு நாடுதான் இருக்கின்றது. 

கடன் வாங்கி, திருடித் தின்று, கடன் செலுத்த முடியாது என்பதை உலகம் கூறிய ஒரு நாட்டிலேயே நாங்கள் வசிக்கிறோம். 

1948இல் சுதந்திரம் பெறும்போது ஆசியாவின் இரண்டாவது பலம் பொருந்திய பொருளாதாரம் நிலவிய நாட்டைத்தான் கடைசி இடத்துக்கு தள்ளியுள்ளார்கள். பலம் பொருந்திய உற்பத்திப் பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக ஒட்டுமொத்த மக்களையும் தொடர்புபடுத்திக்கொண்ட பாரிய செயற்பொறுப்பு இருக்கிறது. இன்றும் கூட ஏற்றுமதி பொருளாதாரத்தின் பெரும்பங்கினை வகிப்பது தேயிலை மற்றும் ஆடை தொழிற்றுறையைச் சேர்ந்த பெண்களாவர். 

வெளிநாட்டுத் தொழில்களிலிருந்து அதிகளவான டொலர்களை அனுப்பிவைப்பவர்கள் பெண்களே. எனினும் எவருமே பெண்களை பொருட்படுத்துவதில்லை. பலம் பொருந்திய உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்பி ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மைகளை வழங்குகின்ற வேலைத்திட்டமொன்றை நாங்கள்  அமுலாக்குவோம். அதனூடக கல்விக்கு, சுகாதாரத்துக்கு போதியளவிலான பணத்தை ஒதுக்கி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை  பெற்றுக்கொடுக்க வேண்டும். அதைப் போலவே அழுகிப்போன ஒரு சமூகத்துக்குப் பதிலாக மனிதம் நிலவுகின்ற சமூகமொன்றை உருவாக்கிட வேண்டும். அதற்காக மக்களின் செல்வத்தை மோசடியால், ஊழலால் திருடித் தின்றவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்குவோம்.

காசுக்காக பிள்ளைகளுக்கு போதைப்பொருள் விற்கின்ற ஒரு சமூகத்திலேயே நாங்கள் சீவிக்கிறோம். பெண்களை மதிக்காமல், அநியாயம் செய்கின்ற ஒரு நாடுதான் இருக்கிறது. ஒருவரையொருவர் மதிக்காத எம் எவருக்கும் உயிர் வாழ முடியாத ஒரு சமூகமே இருக்கின்றது. மொழிகளுக்கிடையில் முரண்பாடுகள், மதங்களுக்கிடையில் முரண்பாடுகள், உடுக்கின்ற உடைகளுக்கிடையில் நிலவுகின்ற முரண்பாடுகளுக்குப் பதிலாக ஒத்துணர்வும் மனிதமும் நிலவுகின்ற ஒரு நாடுதான் எமக்குத் தேவை. அன்பு நிலவுகின்ற ஒரு நாடுதான் எமக்குத் தேவை. பிள்ளைகள் மீது அன்பு செலுத்துகின்ற, பெண்களை மதிக்கின்ற, ஒத்துணர்வுள்ள சமூகமொன்றை நாங்கள் உருவாக்கிட வேண்டும். மிகவும் சாதகமான சமூகமொன்றை அமைத்திட நாங்கள் அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும்.

சுதந்திரம் என கூறி கடலுக்கு பீரங்கி வேட்டுகளை தீர்த்து, மீன்களை அச்சுறுத்தி, தேசிய கொடியை ஏற்றிவிட்டோம் என்பதற்காக சுதந்திரம் இருக்கின்றதா? 

எமது நாட்டின் நிதிக் கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். எமது நாட்டின் சுயாதீனத்தன்மை, எமது நாட்டின் உரிமை எமக்கில்லை. நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதாகக் கூறி தம்புள்ளைக்கு வரவழைக்கின்ற அதேவேளை அரசாங்கத்துக்குச் சொந்தமாக பால் பண்ணைகளை அமூல் கம்பெனிக்கு விற்கிறார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகத்தின் முனையங்கள்,  எண்ணெய்க் குதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

எனவே நாடு சுதந்திரமானதா? இந்த நிலைமைக்கு எதிராக உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள புதிய பாணியிலான சுதந்திரப் போராட்டமொன்று எமக்குத் தேவை. ஏதேனும் வசதி படைத்த, நாட்டை விட்டுச் செல்லக்கூடிய அனைவருமே நாட்டை விட்டுச் செல்கிறார்கள். அதற்குப் பதிலாக, நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் ஊக்கமுள்ள மனிதர்களை நாங்கள் விழித்தெழச் செய்விக்கவேண்டும். அதேவேளை,   திராணியுள்ள பெண்கள் ஒருமூச்சுடன் ஒன்றுசேர்ந்து நாட்டை சீராக்குவோம் என்ற செய்தியை கொடுக்கவே நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். 

தேசிய மக்கள் சக்தி தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்கி கைத்தொழில்களை கட்டியெழுப்பி, தொழில் முயற்சிகளைக் கட்டியெழுப்பி உண்மையான சுதந்திரத்தை வென்றெடுத்து நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியை மேற்கொள்கிறது. 

அதைப் போலவே சிங்கள, தமிழ், முஸ்லிமாக உள்ள நாம் அனைவரும் ஒரு தேசிய நோக்கத்துக்காக உழைக்க வேண்டும். அதிகாரத்துக்காக இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் மக்களை மத ரீதியாக, இனத்துவ ரீதியாக பிரித்தாண்ட யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம். முன்னேற்றமடைந்த கலாசார சமூகமொன்றை கொண்ட மனிதர்களை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.  எல்லாவற்றினதும் விலையை அறிந்த, ஆனால் பெறுமதியை அறியாத நிலையிலுள்ள இந்த முறைமையை மாற்றியமைப்பதன் மூலமாகவே இந்த படுமோசமான சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.

எம் எதிரில் இருப்பது பாரிய பணியாகும். அனைத்தையும் மீள் உருவாக்குவதற்காகவே தேசிய மக்கள் சக்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தமக்கு தனிப்பட்ட முறையில் எதனையும் எதிர்பார்க்காமல் தொண்டு அடிப்படையில்   பணிபுரிகின்ற பிரமாண்டமான இயக்கமொன்று கட்டி வளர்க்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரத்தில் இருந்தவர்கள் வாக்குகளைப் பெற்றதும் மற்றைய பக்கத்துக்கு தாவியதும் அமைச்சுப் பதவிகளை  பெற்றுக்கொள்வதற்காகவே ஆகும். இந்த நிலைமையை மாற்றி அமைத்திட பெண்கள் ஒரே மூச்சில் அதிகாரத்தை பெறுவதற்கு முன்னர்  ஒன்றுசேர்ந்து இவ்விதமாக ஒழுங்கமைவார்களாயின், அதிகாரத்தை பெற்றுக்கொண்டு நாட்டை சீராக்க தலைமைத்துவம் வழங்குகின்ற பெரும்பாலானோர் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதுவரை அதிகாரத்தைப் பெற்ற குழுக்கள் மக்களை அர்ப்பணிக்குமாறு கூறிக்கொண்டு அவர்கள் திருடி வந்தார்கள். அந்த பழைய அரசியலை முற்றாகவே மாற்றியமைத்திட இந்த அனைவரும் தயார். 

ஆசிரியைகளால் பிள்ளைகளுக்கும் கிராமத்தில் உள்ள பெண்களால் சமூகத்துக்கும் இதுவரை பயணித்த தவறான, அழிவுமிக்க பாதை பற்றிய விடயங்களை தெளிவுபடுத்திக் கொடுக்க முடியும். 

76 வருடகால வரலாற்றினை மாற்றியமைத்து  இந்த வருடத்திலேயே புதிதாக எழுதத் தொடங்குகிறோம். பெண்களை சீக்கிரமாக ஏமாற்ற முடியுமென ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அரிசி பையைக் கொடுத்து வென்றெடுக்க முடியுமென நினைக்கிறார்கள். இந்த அவமானத்தில் இருந்து பெண்களை உங்கள் அனைவராலுமே விடுவித்துக்கொள்ள முடியும். அரிசி பைக்காக, வாக்குறுதிக்காக மாறிவிடாமல், மக்களின் ஆட்சிக்காக நின்றுவிடாமல் பயணிக்கின்ற சக்தி பெண்களே என்பதை நிரூபிக்க வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பணியின் பிரதான பங்காளிகள் பெண்களே என்பதை நிரூபிக்க வேண்டும். 

எவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய  சமூகமொன்றைக் கட்டியெழுப்புகின்ற பிரதான பங்காளிகளாக மாறுகின்ற மகிழ்ச்சி உங்கள் அனைவரிடமும் இருக்கிறது. ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய எந்த தேர்தலை கொண்டுவந்தாலும் அவர்களை அரியாசனத்திலிருந்து இறக்கி புதிய நாட்டை உருவாக்கத் தயார் எனும் செய்தியைத்தான் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அன்புக்குரிய சகோதரிகளே, எமது பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை இல்லாதொழித்த, பொருளாதாரத்தை நாசமாக்கிய, எமது மகிழ்ச்சியை இல்லாதொழித்த 76 வருடகால சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க பெண்கள் தயார் என்பதை ஊர் ஊராகச் சென்று கூறுங்கள்.  

மீண்டும் எவராலும் பெண்களை ஏமாற்ற முடியாதென்பதை வீடு வீடாகச் சென்று பெண்களுக்கு விளக்கிக் கூறுங்கள். கிடைக்கின்ற முதலாவது வாய்ப்பிலேயே கொடிய ஆட்சிக்கு முடிவுகட்டி வெற்றியை அடையும் வரை நின்றுவிடாமல் முன்நோக்கி நகர்வோம் என்பதை உறுதிப்படுத்துங்கள். எதிரிகளை விரட்டியடித்து மக்களின் வெற்றி, தாய்நாட்டின் வெற்றி, பிள்ளைகளின் எதிர்கால வெற்றியை பெற்றுக்கொள்ளாமல் நின்றுவிடப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். புதிய சுதந்திரப் போராட்டம் மூலமாக தாய்நாட்டை கட்டியெழுப்பும் வரை ஒட்டுமொத்த மக்களுடன் அணி திரண்டு வெற்றியடைவோம் என்பதை வரலாற்றில் குறிப்புப் பதிவீராக என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40