கதாநாயகனா ? வில்லனா ? : குழப்பத்தில் தவிக்கும் அர்ஜுன் தாஸ்

15 Feb, 2024 | 03:17 PM
image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கைதி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வில்லனாக அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவருடைய நடிப்புடன் தனித்துவமிக்க அவரது குரலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

அந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் 'மாஸ்டர்', உலக நாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' ஆகிய வெற்றி பெற்ற படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். 

தமிழ் திரையுலகில் ரகுவரனுக்குப் பிறகு தனித்துவமான குரலுடன் அறிமுகமான அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்து புகழின் உச்சத்துக்கு செல்வார் என அனைவரும் எதிர்பார்க்க, அவர் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான 'அநீதி' என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகி கதாநாயகனாக வலம் வர விரும்பினார். 

தொடர்ந்து, இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் 'போர்' என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் மலையாளத்தில் 'மதுரம்', 'ஜூன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமத் கபீர் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத மலையாள திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

அர்ஜுன் தாஸ் இதன் மூலம் அவர் மலையாள திரையுலகிலும் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் பிரபலமான அர்ஜுன் தாஸ் தொடர்ந்து தமிழில் வில்லனாகவோ அல்லது நாயகனாகவோ வெற்றி பெறுவதற்கு முயற்சிக்காமல், மலையாளத்தில் நாயகனாக அறிமுகமாவது அவர் கதாநாயகனாக தொடர்வதா? அல்லது வில்லனாக தொடர்வதா? என்ற குழப்பத்தில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

இருப்பினும், எம்.ஆர். ராதா, ரகுவரன் போன்ற திறமைமிகு நட்சத்திரங்களுக்குப் பிறகு பிரத்யேகமான குரலுக்கு சொந்தக்காரரான அர்ஜுன் தாஸின் கலைப்பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right