புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக டெல்லி நோக்கிச் சென்ற பஞ்சாப் விவசாயிகள், ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசினர். தண்ணீரை பீச்சி அடித்தனர். ஹரியாணாவின் கானவுரி என்ற இடத்தில் விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தன. அதற்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் பேரணியை பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கினர். இப்பேரணி பஞ்சாப் - ஹரியாணா, ஹரியாணா - டெல்லி எல்லைகளைக் கடந்து தேசிய தலைநகரை அடைய வேண்டும்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பஞ்சாப் அரசு, அவர்களை ராஜ்புரா புறவழிச்சாலையை கடக்க அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து தங்களின் டெல்லி பயணத்தின் வழியிலுள்ள ஹரியாணாவின் ஆம்பலா எல்லையை விவசாயிகள் அடைந்தனர். விவசாயிகளின் பேரணியை எல்லையிலேயே தடுப்பதற்காக ஏற்கெனவே அங்கே சிமென்ட் தடுப்புகள், முள்வேலிகள் வைக்கப்பட்டிருந்தன. ஹரியாணாவின் ஷம்பு பகுதியை விவசாயிகள் அடைந்ததும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் டிராக்டர்கள் மூலமாக தடுப்புகளை உடைக்க முயன்றனர். இதனால் அங்கே பதற்றம் உருவானது. விவசாயிகள் போலீஸாரின் பலத்த தடையை மீறி செல்ல முயன்றனர். சிலர் தடுப்புகளை அகற்றினர். இதனைத் தொடர்ந்து ஹரியாணா போலீஸார், விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். கண்ணீர்க் புகை குண்டுகளை வீச ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. விவசாயிகளைக் கலைக்க இயந்திரங்கள் மூலம் தண்ணீ்ர் பீய்ச்சப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவசாயிகள் கற்களை வீசினர்.
காங்கிரஸ் எம்எல்ஏ சக்பால் கைரா ஷம்பு பகுதிக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தார். ஹரியாணாவின் ஜிந்த் பகுதியிலுள்ள கானவுரி என்ற இடத்தில் பஞ்சாப் விவசாயிகளுக்கு போலீஸாருக்கும் இடையை மோதல் ஏற்பட்டது. போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசியதுடன் தடியடியும் நடத்தினர், இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக குருகிராம் - டெல்லி எல்லையில் உள்ள ஷிர்கவுல் அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை 48-ல், குறைந்தது 15 மணலுடன் கூடிய டிம்பர்கள், 200 தடுப்புகள், ட்ரோன்கள், முள்வேலிகள், கலவரத்தடுப்பு உபரகணங்களுடன் 150 - 200 வரையிலான போலீஸார் ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, டெல்லி நோக்கிச் செல்லும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழகத்தின் திருச்சியில் இருந்து விவசாயிகள் சென்று பேரணியில் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் மண்டை ஓடுகளுடன் சாலையில் படுத்ததும் சிலர் செல்போன் கோபுரம் மீது ஏறியும் நின்று போரட்டம் நடத்தி ஆதரவளித்தனர்.
மத்திய டெல்லியில் துணை ராணுவம் மற்றும் போலீஸார் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி செங்கோட்டை திடீரென பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டது. மீண்டும் திறப்பதற்கு பாதுகாப்பான சூழல் இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் கருதும் வரையில் இது மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM