ஈழ ஏதிலிகளாக நடிக்கும் சசிகுமார் - லிஜோ மோள் ஜோஸ்

12 Feb, 2024 | 05:58 PM
image

இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் தயாராகி வரும் 'ஃப்ரீடம்' எனும் திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை லிஜோ மோள் ஜோஸ் என இருவரும் ஈழ ஏதிலிகளாக நடித்திருக்கிறார்கள் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'கழுகு' என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'ஃப்ரீடம்'. இதில் சசிகுமார், லிஜோ மோள் ஜோஸ், சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், மூ. ராமசாமி, சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை விஜய கணபதிஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''  1990 களில் தமிழகத்தில் நடைபெற்ற சிறைச்சாலை தொடர்பான உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் நாயகன் சசிகுமார், நாயகி லிஜோவும் ஈழ ஏதிலிகளாக நடித்திருக்கிறார்கள். 'கழுகு' திரைப்படத்திற்குப் பிறகு இந்த திரைப்படத்தை மிகவும் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறேன் என நம்புகிறேன். 'ஜெய் பீம்' படத்தை பார்த்த பிறகு இந்த கதாபாத்திரத்திற்கு லிஜோ மோள் ஜோஸ் பொருத்தமாக இருப்பார் என அவரிடம் கதையை சொல்லி அவரை நடிக்க வைத்திருக்கிறோம். இத்திரைப்படத்தின் கதையை சசிகுமாரிடம் சொன்னவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். படம் விரைவில் திரைக்கு வருகிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right