(நெவில் அன்தனி)
உலக மரதன் ஓட்டப் போட்டியில் சாதனை நாயகனான கென்ய வீரர் கெல்வின் கிப்டம் கார் விபத்தில் பலியான சம்பவம் மெய்வல்லுநர் உலகத்தை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கென்யாவின் மேற்கு பகுதியில் 24 வயதான கிப்டம் செலுத்திக்கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி எறியப்பட்டு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கிப்டமின் பயிற்றுநர் ருவாண்டா தேசத்தைச் சேர்ந்த ஜேர்வாய்ஸ் ஹக்கிஸிமானாவும் பலியானார்.
கிப்டம், ஹக்கிஸிமானா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர்களுடன் காரில் பயணித்த பெண் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சிக்காகோ மரதனை 2 மணித்தியாலங்கள், 35 செக்கன்களில் நிறைவு செய்து புதிய உலக சாதனையை கிப்டம் நிலைநாட்டியிருந்தார்.
சக நாட்டவரான எலியுட் கிப்சோகேவுக்கு சொந்தமாக இருந்த முன்னைய சாதனையை 34 செக்கன்கள் வித்தியாசத்தில் கிப்டம் முறியடித்தே புதிய உலக சாதனையை நிலைநாட்டினார்.
செபெஸ்டியன் கோ ஆழ்ந்த அனுதாபம்
கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்றுநர் கெர்வைஸ் ஹக்கிசிமானா ஆகியோரின் திடீர் இழப்பை அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளதாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் சங்கம்) தலைவர் செபெஸ்டின் கோ தெரிவித்துள்ளார்.
'அனைத்து உலக மெய்வல்லுநர்களின் சார்பாக அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், அணியினர் மற்றும் கென்ய நாட்டிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
'சிக்காகோ மரதன் ஓட்டப் போட்டியில் கெல்வின் நிலைநாட்டிய அசாத்திய உலக சாதனையை இந்த வார தொடக்கத்தில் தான், என்னால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க முடிந்தது.
'நினைத்துப்பார்க்க முடியாத ஆற்றல்களைக் கொண்ட மெய்வல்லுநரான கிப்டம், நம்பமுடியாத வரலாற்றை விட்டுச் செல்கிறார். அவரது மறைவு பெரிழப்பாகும்' என தனது இரங்கல் செய்தியில் செபெஸ்டியன் கோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்னும் பல உலக மெய்வல்லுநர் அதிகாரிகள், கிப்டமின் நெருங்கிய விளையாட்டுத்துறை நண்பர்கள் அவரது மறைவு குறித்து கவலை வெளியிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM