சிறிதரனின் தெரிவு : வடக்கு - கிழக்கு கூறிய செய்தியை தெற்கு தெளிவாக விளங்கிக்கொள்கிறதா?

03 Feb, 2024 | 10:33 PM
image

லின் ஒக்கேர்ஸ் 

இலங்கையில் தேர்தல்கள் பற்றி பரபரப்பாக பேசப்படும் நிலையில், யார் அதிகாரத்துக்கு வருவார் அல்லது எந்த கட்சி அல்லது எந்த கூட்டணி அதிகாரத்துக்கு வரும் என்பதே அவப்பெயரைச் சம்பாதித்திருக்கும் அரசியல் வர்க்கத்தின் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி.

ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் இவ்வருடத்தில் எப்போதாவது நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிலங்கையின் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் சக்திகளுக்கும் சுயநலனும் அதிகாரமும் பணமும் பதவி அந்தஸ்துமே பிரதான அக்கறைக்குரிய விடயங்களாகும்.

தெற்கில் தற்போதைய பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளுக்கு இந்த காரணிகளே தூண்டுதல் அளிப்பவையாக இருக்கின்றன. ஆனால், தெற்கு பெருமளவுக்கு கவலைப்பட வேண்டியது தமிழ் அரசியலில் மிகவும் அண்மையில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்தேயாகும். 

கடுமையான தமிழ் தேசியவாதி என்று பெயரெடுத்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலில் அவருடன் போட்டியிட்டவரையும் விட  கணிசமானளவு பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் சாதக பாதகங்களை தென்னிலங்கை ஆளுமைகளும்  அரசியல் சக்திகள் எடை போடுமாக இருந்தால், அவை மிகுந்த தொலை நோக்குடன் நடந்துகொள்வதில் அக்கறை காட்டும்.

இந்த கட்டுரையாளருக்கு தமிழ் தேசியவாதத்துடனோ அல்லது தமிழ் தேசியவாதிகளுடனோ எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சிறிதரனை தெரிவு செய்ததன் ஊடாக வடக்கு கிழக்கில் இருந்து தெற்குக்கு  அனுப்பப்பட்டிருக்கும் 'செய்தி' அவசியமான தெளிவுடனும் நுண்ணோக்குடனும் கவனத்துக்கு  எடுக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்கவேண்டியிருக்கிறது.

சிறிதரனின் தெரிவை வடக்கு கிழக்கில் பிரிவினைவாத உணர்வு பெரியளவில் புத்தெழுச்சி பெறுகிறது என்ற ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றாலும், வடக்கு கிழக்கு சனத்தொகையில் கணிசமான பிரிவுகள் நாட்டின் மத்திய அதிகாரத்தினால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கொண்டிருக்கும் தொடர்ச்சியான உணர்வின் அடையாளமாக அதைப் பார்க்கவேண்டியது அவசியமாகும். மிகவும் எளிய வார்த்தைகளில் கூறுவதானால், வடக்கு கிழக்கு மக்களின் முக்கியமான தேவைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கணிசமான காலம் கடந்துவிட்டபோதிலும், தங்களது வாழ்க்கை நிலைமை குறித்து வடக்கு கிழக்கு மக்கள் மகிழ்ச்சியடைவதற்கு காரணம் எதுவுமில்லை. ஆனால், இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தைக் கூட நடைமுறைப்படுத்துவதற்கு மறுக்கும் மத்திய அரசாங்கங்களிடம் இருந்து எதை எதிர்பார்க்க முடியும்? 

வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கும் உறுதிமொழிகளை அரசாங்கங்கள் காப்பாற்றாமல் விடுவதே வழமையாக இருக்கிறது. அதனால் மத்திய அரசாங்கங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தமிழ்ச் சமூகம் வெறுப்படைவதற்கு காரணங்களை வழங்குகின்றன. இது விரக்தியுற்று கிளர்ச்சி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. தமிழர் பிரச்சினையின் வரலாறு இதற்கு சான்று பகர்கிறது. அழிவுச் சக்கரத்துக்கு மீண்டும் இலங்கை திரும்பாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.

அதனால், தமிழ் அரசு கட்சியின் தலைவராக சிறிதரனின் தெரிவை விழித்தெழுவதற்கான அழைப்பாகவே அரசாங்கத்தினால் நோக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை அவற்றின் உண்மையான அர்த்தத்தில் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அல்லாவிட்டால், அந்த பிராந்தியத்தில் அடையாள அரசியல் சமாளிக்க முடியாத அளவுக்கு வளர்வதற்கு அனுமதிப்பதாகவே முடியும். நீதி பகிரப்படாதமையே அடையாள அரசியல் மேலெழுவதற்கும் பிரிவினைவாதத்துக்கும் வழிவகுக்கிறது என்பதை 30 வருடங்களாக இலங்கை அனுபவித்த அவலங்கள் உணர்த்தியிருக்க வேண்டும்.

தெற்கில் அதிகாரச் சண்டைகளில் தற்போது ஈடுபட்டிருக்கும் தரப்புகள் இந்த விடயங்கள் குறித்து ஒரு கணம் சிந்திக்க வேண்டும். எளிதில் பாதிக்கப்படக்கூடிய களமாக தொடர்ந்து விளங்கும் வடக்கு கிழக்கை இனிமேலும் அலட்சியம் செய்யமுடியாது.

இலங்கை அரசியல் சமுதாயத்தின் ஏனைய பாகத்துடன் வடக்கு கிழக்கு முழுமையாக ஒருங்கிணைக்கப்படாவிட்டால் தெற்கின் அபிவிருத்தி அபிலாசைகளும் திட்டங்களும் பூச்சியத்துக்கு வந்துவிடும்.

சகல சமூகங்களும் பயனடையக்கூடியதாக ஒப்புரவான வளர்ச்சி இல்லாவிட்டால் இலங்கைக்கு எதிர்காலமே இல்லை. இந்த கருத்துக் கோணத்தில் பார்க்கும்போது தென்னிலங்கையின் தற்போதைய அதிகாரச் சண்டைகள் வீணான கவனத் திசை திருப்பல்களே அன்றி வேறு ஒன்றுமில்லை.

(த ஐலண்ட்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் முதலீட்டு பொறிமுறையில் நிலவும் நடைமுறை...

2026-08-14 14:30:35
news-image

ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வெளிநாட்டு...

2026-08-14 14:29:42
news-image

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பெருந்தோட்ட சமூகம்

2026-08-14 14:29:13
news-image

நவீன கல்வி அமைப்பில் மாணவர்களின் பள்ளி...

2026-08-14 12:00:27
news-image

ஒவ்வொரு உயிரும் முக்கியம் : வட...

2026-08-14 11:03:26
news-image

சர்வதேச நாணய உதவித் திட்டத்தின் முடிவுக்கு...

2026-08-14 10:07:00
news-image

22 வது திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தையும்...

2026-08-14 09:51:05
news-image

ஜனாதிபதி அநுரவின் காலத்தில் அமைச்சு மாற்றங்கள்...

2026-08-11 18:55:27
news-image

வியட்நாமின் பொருளாதார சீர்த்திருத்தக்கொள்கை இலங்கைக்கு ஓர்...

2026-08-11 15:47:46
news-image

இந்தியாவின் வளர்ச்சிப் பாய்ச்சலை இலங்கை எப்படி...

2026-08-11 13:15:30
news-image

கர்தினால் ரஞ்சித் மற்றும் சமநீதிக்கான கேள்வி...

2026-08-11 12:05:18
news-image

 இந்தியா, சீனா போன்ற பிராந்திய பொருளாதார ...

2026-08-10 20:25:32