(அ.நிவேதா)
அஸ்வெசும நிவாரணத்திட்டத்துக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. எனவே முதற்கட்ட நிவாரணத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்களும் விண்ணப்பித்த போதிலும் கியூ.ஆர் குறியீடு கிடைக்கப்பெறாதவர்களும் மாத்திரமே இம்முறை விண்ணப்பிக்க வேண்டும் என நலன்புரி நன்மைகள் சபையின் சமூகப் பாதுகாப்பு கருத்திட்டத்தின் பிரதித் திட்ட பணிப்பாளர் எஸ்.யூ.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வீரகேசரிக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நலன்புரி நன்மைகள் சபையினால் முன்னெடுக்கப்படும் அஸ்வெசும நிவாரணத்திட்டத்துக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்படவுள்ள நிலையில் இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் போதிய தெளிவின்மை தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இந்த நிவாரணத்திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பயனாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் இலக்கு. அதனடிப்படையில் முதற்கட்ட நிவாரணத்துக்காக 35 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. இதில் முதற்கட்டமாக 14 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் 5 இலட்சம் பேரின் மேன்முறையீடுகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ள அதேவேளை எஞ்சிய ஒரு இலட்சம் பேரின் மேன்முறையீடுகள் தொடர்பான மீள்பரிசீலனை எதிர்வரும் வாரங்களில் நிறைவு செய்யப்படும். எனவே தமது விபரங்கள் ஏற்கனவே தரவு சேகரிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
துரதிர்ஷ்டவசமாக முதற்கட்டத்தின்போது விண்ணப்பிக்க தவறியவர்களும் விண்ணப்பித்தபோதிலும் எண்ணீட்டாளர்களால் தரவுகள் சரிபார்த்த பின்னர், வழங்கப்படும் கியூ.ஆர் குறியீடு கிடைக்கப்பெறாதவர்களும் மாத்திரமே இம்முறை விண்ணப்பிக்க முடியும். சில பகுதிகளில் சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள் விண்ணப்பிக்கவில்லை. எனவே, இம்முறை சமுர்த்தி பயனாளி ஒருவர் தான் இந்த நிவாரணத்தை பெறுவதற்கு தகுதியுடையவர் என்றால் அவரும் விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் இம்முறை விண்ணப்பதார்களின் அடையாள அட்டை இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தமது அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி : முதற்கட்ட நிவாரணத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்களில் அதிகமானோர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்?
பதில் : முதற்கட்ட நிவாரணத்துக்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின்படி, துரதிர்ஷ்டவசமாக தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் மூன்று மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. அதன்படி நுவரெலியா, பதுளை, கேகாலை ஆகிய மாவட்டங்களும் பொலன்னறுவை உள்ளடங்களாக 4 மாவட்டத்திலிருந்து குறைந்தளவான விண்ணப்பங்களே கிடைத்துள்ளன.
குறிப்பாக நுவரெலியாவில் 146,327 விண்ண ப்பங்களும் பதுளையில் 176,408 விண்ணப்பங்களும் கேகாலை மாவட்டத்தில் 151,358 விண்ணப்பங்கள் மாத்திரமே கிடைக்கப்பெற்றன. எனவே இம்முறை விசேட கவனம் செலுத்தி, கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இது தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் ஸ்ரீனிவாசன் கிரிதரன் தெரிவிக்கையில்,
முதற்கட்ட நிவாரணம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளில் 5 இலட்சம் பயனாளிகளின் விபரங்கள் எமது சபையின் ஊடாக மீள்பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு இலட்சம் பேரின் மேன்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே மேன்முறையீட்டின் ஊடாக தெரிவாகப்போகும் பயனாளர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நிவாரணத்தொகை வழங்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாக குறித்த பயனாளர்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக தரப்படும் கடிதத்தை பெற்றுக்கொண்டு பிரதானமாக 5 வங்கிகளில் அஸ்வெசும கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும். அதாவது இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் அமானா வங்கி ஆகியவற்றில் தமது கணக்குகளை ஆரம்பிக்க முடியும். ஏற்கனவே மேற்குறிப்பிடப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதே வங்கிகளில் பிரதேச செயலகத்தினால் தரப்பட்ட கடிதத்தை காட்டி, இதற்கென பிரத்தியேகமாக புதிய கணக்கொன்றை திறக்க முடியும்.
அதேபோன்று இரண்டாம் கட்டத்துக்கு தெரிவாகப்போகும் பயனாளர்களும் தாம் தெரிவு செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே புதிய அஸ்வெசும கணக்கை திறக்க வேண்டும். எனவே, இந்த நிவாரணத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கப்போகும் பயனாளர்கள் தமது குடும்ப அங்கத்தவர்களின் அடையாள அட்டைகளை தயார்ப்படுத்திக்கொள்வது கட்டாயம்.
கேள்வி : இம்முறை பயனாளர்களை தெரிவு செய்யும் பொறிமுறையில் மாற்றம் உண்டா?
பதில் : கடந்த முறை விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு எண்ணீட்டாளர்களாக செல்வதற்கு கிராம சேவகர்களும், சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு மறுப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டமையால் பிரதேச இளைஞர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதனால் சில நடைமுறை சிக்கல்களும் ஏற்பட்டன. ஆனால், இம்முறை கிராம உத்தியோகத்தர்களும் சமூர்த்தி உத்தியோகத்தர்களும் களத்துக்கு செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தெளிவூட்டல்கள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக நாடளாவிய ரீதியில் வழங்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM