தமிழர்களின் மொழி, கலை, வணிகம், நிர்மாணம் உள்ளிட்ட பல துறைகளின் மேன்மை இன்றைய நாளளவிலும் பேசப்படும் ஒரு விடயம்.
அவ்வாறு பேசப்படும் முக்கிய நிர்மாணம்தான் ‘செட்டிநாடு’! புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களின் சுமார் 1700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள 78 கிராமங்களே ‘செட்டிநாடு’ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய பகுதிகளில் வாழும் செட்டியார்கள் 'நகரத்தார்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
நகரத்தார் தங்கள் வீட்டை முன்பகுதி, மையப்பகுதி, பின்பகுதி என மூன்று பகுதிகளாக அமைக்கிறார்கள். முன்பகுதியில் அமையும் முன் அறை, முற்றம், தாழ்வாரம் போன்றவற்றை ஆண்களும் பின்பகுதியில் அமைந்துள்ள முற்றம், தாழ்வாரம், களஞ்சியம், சமையல் அறை, பின்கட்டு, கிணறு போன்றவற்றை பெண்களும் பயன்படுத்துகிறார்கள்.
மையப்பகுதியில் கல்யாண கொட்டகை போஜன சாலை, வெளியறை, உள்ளறை, முற்றம் என்பவற்றை அமைத்து சடங்கு சம்பிரதாயங்கள் நடத்த பயன்படுத்துகிறார்கள்.
பெரும்பாலான நகரத்தார் வீடுகளில் ‘பந்தி அறை’ என்ற ஒரு அறை இருக்கும். இதில், ஒரே நேரத்தில் ஐம்பது முதல் நூறு பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம்.
காரைக்குடியில் 'ஆயிரம் ஜன்னல் வீடு' என்ற அதிசயமான வீடு இருக்கிறது. வெளியிலிருந்து பார்க்கும்போது அதன் பிரம்மாண்டமும் நுட்பமும் புரியாது. ஆனால், உள்ளே சென்று பார்க்கும்போது தான் நகரத்தார்களின் கட்டடக்கலை அறிவு நம்மை வியக்க வைக்கிறது.
உள்ளே நுழைந்ததும் மிகப்பெரிய முற்றம் நம்மை வரவேற்கிறது. திறந்தவெளி முற்றத்தின் மேற்புறம் இரும்புக் கம்பிகளால் ஆன க்ரில் அமைக்கப்பட்டுள்ளது.
விசாலமாக காற்றோட்டம் மிக்கதாய் ஒவ்வொரு வீடும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம். செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ள ஆத்தங்குடி அன்று முதல் இன்று வரை தரை ஓடுகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.
செட்டிநாட்டு வீடுகளில் ஆத்தங்குடி ஓடுகளே பதிக்கப்பட்டுள்ளன. அதில் காலை வைத்ததும் குளிர்ச்சியை உணரலாம்.
தரைதளம், முதல் தளம் என இரண்டு தளங்களைக் கொண்ட இந்த வீடு சுமார் 20,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. செட்டியார் ஒருவரால் 1941ஆம் ஆண்டில் இந்த வீடானது சுமார் ஒன்றேகால் லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
இந்த வீட்டில் 24 அறைகளும் 6 பெரிய மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஜன்னல் வீடு என்று பெயர் பெற்றிருந்தாலும் இந்த வீட்டில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் என மொத்தம் சேர்த்து 200 எண்ணிக்கையில் அமைந்துள்ளது.
மேலும் இந்த கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள முகம் பார்க்கும் கண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்து வரவழைக்கப்பட்டவை. அலங்கார விளக்குகள் ஸ்பெயின் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவை. முற்றிலும் தேக்கு மரங்களைக் கொண்டு அனைத்து மர வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வீட்டிலுள்ள கதவுகளில் முகம் தெரியுமளவுக்கு பளபளப்பாக காணப்படுகிறது.
மாடியிலுள்ள ஓர் அறையினுள் நிறைய முகம் பார்க்கும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. நிறைய ஜன்னல்களும் அலங்கார விளக்குகளும் மின்விசிறிகளும் நிறைந்திருக்கின்றன. சுமார் 50 பேர் வரை தாராளமாக அமர்ந்து உணவருந்தலாம். செட்டிநாட்டில் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது என்பதை இந்த அறை பறைசாற்றுகிறது.
நகரத்தார் வணிகம் மற்றும் கட்டடக்கலையில் மட்டுமின்றி சமையலிலும் கைதேர்ந்தவர்களாக விளங்குகிறார்கள். செட்டிநாடு சமையல் என்பது உலகப் பிரசித்தம்.
செட்டிநாட்டவர்கள் சைவம், அசைவம் என இரண்டு வகையான சமையல்களிலும் சிறந்து விளங்குகிறார்கள். செட்டிநாடு பகுதிகளில் கவுனி அரிசி மற்றும் வேங்கரிசி மா என இரண்டும் பிரபலம். திருநெல்வேலி அல்வா போல செட்டிநாட்டில் செய்யும் சீப்பு சீடை மிகவும் புகழ்பெற்றது. பணியாரம், அப்பம் கொழுக்கட்டை, சீடை வகைகளும் மிகவும் பிரசித்தி பெற்றன.
- ஆர்.வீ.பதி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM