'நகர லயம்' : நகர மேடை, கொஞ்சம் பச்சை வாடை!

11 Dec, 2023 | 11:26 PM
image

"எது நம் இயலாமை என யார் சொல்வது?

இது என் பாட்டன் எனது அப்பன் என யான் நீள்வதும்,

நாளை ஒரு விடியல் புதிதாய் பிறப்பதும்

இன்றே எனக்குள் எரியும் அனலாய் கொதித்திடும்

நகர மேடை, கொஞ்சம் பச்சை வாடை

மிருகங்கள் மனிதனாய், மனிதர்கள் மிருகமாய்

யாரை யார் ஆள்வது?

இறுதியில் யார் ஒருத்தன் இங்கே வெல்வது?

அரசன் என்பவன் ஆண்டவன் மட்டுமல்ல

அடிமை காணாதவனும் தான்...

இது அரசியல் அல்ல, வாழ்க்கை..."

தென்னிந்தியாவில் மையம் கொண்டிருந்த தமிழ் திரைப் புயலானது தற்சமயம் இலங்கையில் ஆதிக்கத்தை செலுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.

இத்தனை காலமும் தென்னிந்திய சினிமாவை பார்த்து ரசித்த நம் இலங்கை தமிழ் மக்களுக்கு தற்போது நம் மண் வாசம் கூடிய திரைப்படங்களை நுகர்வதற்கான வாய்ப்புகளை நமது கலைஞர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள்.

இலங்கை தமிழ் திரை உலகிலும் எமது கலைஞர்களின் புதிய புதிய படைப்புகள் வெளிவந்த வகையில் உள்ளமையும் எமக்கு பெருமை தரும் விடயமாக அமைந்துள்ளது.

அந்த வரிசையில், நமது இலங்கை தமிழ் சினிமாவில் மற்றுமொரு புதிய படைப்பான இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜாவின் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள 'நகர லயம்' திரைப்படம் கடந்த சனிக்கிழமை (02) திரைக்கு வந்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

குறும் திரைப்படமாக படைக்கப்பட்டுள்ள இந்த படைப்பின் மையக் கருத்தினை மேற்கண்ட கவிதை வரியின் மூலமாக விவரித்துள்ளார், இயக்குநர் பிரவீன்.

இந்த திரைப்படம் அவரது 2 ஆவது படைப்பு ஆகும். இதில், சச்சின் செந்தில்குமாரன், வேணுகா இரத்தினம் உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.

ஒரு சமூகம் ஓரங்கட்டப்படுவதையும், அந்த சமூகத்தின் மத்தியில் குடும்ப சுமையுடன் வாழ்க்கை எனும் ஓடத்தை கடப்பதற்கு ஓர் இளைஞன் சந்திக்கும் அவமானங்கள், போராட்டங்களையும் இந்த திரைப்படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்துக்கு எதிரான அடக்கு முறையினை ஒரு குறும்படமாக படைத்துள்ளார் இயக்குநர்.

ரகு, அமுதா, சங்கு, முதலாளி மற்றும் அப்பா போன்ற கதாப்பாத்திரங்கள் கதைக் கருவில் உயிரோட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

குறிப்பாக திரைப்படத்தின் நாயகன் சச்சின் (ரகு) கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளதுடன், கிடைக்கும் தருணம் எல்லாம் தனது பெயரை ரசிகர்கள் மனதில் பதிய வைத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக இளம் இசையமைப்பாளராக தற்சமயம் உருவெடுத்துள்ள அனுஷன் நாகேந்திரனின் இசையும் படத்துக்கு உயிரோட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காட்சி அமைப்புகள், எடிட்டிங் உட்பட தொழில்நுட்ப பணிகளும் படத்தின் வெற்றிக்கு கைகொடுத்துள்ளது எனலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right