கற்பனை கேரக்டர்!

Published By: Nanthini

11 Dec, 2023 | 03:06 PM
image

து என் தோழியின் டயரிக் குறிப்பு... வாசித்ததும் ஏதோ மனதில் தட்டுப்பட, அதை உங்களிடம் கொட்டிவிடுகிறேன்....

இதுதான் விஷயம்.

"சிறந்த புத்தகம், நல்ல நண்பனாமே... ஏன், 'நண்பி'யாக - தோழியாக இருக்கக்கூடாதா?

எல்லார் போலவும் என் 'தோழி' எனக்கு நிழல் மாதிரின்னு நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா, நிழல் வெளிச்சம் இருக்கிறபோது தானே கூட நிற்கும். மையிருட்டில் நிழல் ஏது?

நிழலல்ல.... உசுரான என்னுடைய இந்த 'தோழி' என் கைக்குள்ளயும் கைப்பைக்குள்ளயும் என் மண்டைக்குள்ளயும் மூளைக்குள்ளயும்...... எப்பவுமே என்னோடுதான் இருப்பாள்.

சில சமயங்களில் பேன்ட் பொக்கெட்டுக்குள்ளயும் தூங்குவாள்....

பொக்கெட் நாவல் வாசிக்கிறது, என் ரொம்ப நாள் பழக்கம்.

அதிலும் துப்பறியும் கதைகள், திகில் கதைகள்னா உளவு பார்க்கிற ஒரு துப்பறிவாளரை - அழகும் அறிவும் நிறைந்த கதாநாயகனை என்னுடைய நடை, உடை, பாவனையோடு பொருத்திக்கொண்டு, 'அது நான்தான்' என்கிற கற்பனையில் மிதப்பேன்.

கதையின் கடைசிக் கட்டத்தில் ஒரு டுவிஸ்ட்டு....

கடுமையான விசாரணைகளுக்கு பிறகு ஒரு உண்மை தெரியவரும்.

ஆரம்பத்திலிருந்து நடக்கிற எல்லா மோசடி, கொலை, கொள்ளைக்கும் அந்த துப்பறிவாளர் தான் பிரதான சூத்திரதாரியாக இருப்பார்...

கதை சூடுபிடிக்கிறபோது திடீரென அந்த கேரக்டர் மாறும். அதுவரை ஹீரோயிசம் காட்டித் திரிந்தவன் சைலன்ட் வில்லனாக, வில்லாதி வில்லனாக சுயரூபம் எடுப்பான்.

ஆஹா! இவனுக்குள் இப்படியொரு அரக்கனா?  

கதையை எழுதியவர் புகழின் உச்சிக்கே போய்விடுவார்.

ஆனால், ஒரு கற்பனை கதாபாத்திரத்தை நம்பி, என் கேரக்டரை ஒருசில நிமிடங்களில் நானே  சிதைத்துவிட்டதில் உண்டான அழுக்கை  யாருக்கும் தெரியாமல், நானே துடைத்துக்கொள்கிறபோது, என் பொக்கெட் தோழி எனக்கு பாடம் சொல்லும் கைங்கரியத்தை தாமதமாகவே உணர்ந்துகொள்வேன்....."

குறிப்பை வாசித்து முடித்தேன்.

விட்ட இடத்தில் இருந்து என் மனசு பயணிக்க ஆரம்பித்தது.

உண்மைதான் தோழி! நீங்களாவது கற்பனையிலிருந்து விலகி, தாமதமாகவாவது நிஜத்துக்கு வந்துவிடுகிறீர்கள்.

நானெல்லாம் வாசிக்க கையில் புத்தகத்தை எடுத்தால், கதையில் வருகிற ஒரு கேரக்டர் என்னை நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும். கனவிலும் வந்து இம்சை செய்யும்.

கதையில் செய்த அத்தனை அட்டூழியங்களையும், அதை விட இன்னும் கொடுமையாக கனவில் எனக்கு செய்துவிட்டுத்தான் போகும்....!  

கதைப் புத்தகமென்ன..... சில சினிமா படங்களை பார்த்தாலுமே உடம்பு நடுங்கிப்போகுது....

ஒரு முறை ஜெயம் ரவி நடித்த 'மிருதன்' படத்தை முழுசா பார்த்த பிறகு, அந்த இரண்டு மூன்று நாட்களாக இரத்த வெறி பிடித்த சோம்பிகளின் உருவம் கண்முன் வந்து மறைவது போல் ஒரு பிரம்மை.

வீட்டுக்குள், வீட்டு வாசலில், வீதியில் போக வர்ற இருந்த நிறைய பேர் சோம்பிகள் மாதிரியே தெரிந்தார்கள்.

இது என்ன வகை நோயாக இருக்கும்?!

- நந்தினி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்