(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் சீன கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட கழிவு உரம் தொடர்பாகவும் அதனை திருப்பி அனுப்பியதன் பின்னர் அதற்காக 6.7 மில்லியன் டொலர் செலுத்தியமை தொடர்பாக விசாரணை நடத்தி, அதற்கு சம்பந்தமானவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக குழு நியமிப்பது தொடர்பாக சபையில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது தயாசிறி ஜயசேகர கழிவு உரக்கப்பல் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டது.
தயாசிறி ஜயசேகர தனது கேள்வியின்போது, கழிவு உரக்கப்பல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், அது கழிவு என உறுதியான பின்னர் குறித்த கப்பலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேநேரம் குறித்த நிறுவனத்துக்கு 6.7 மில்லியன் டொலரும் செலுத்தப்பட்டுள்ளது. ஏன் இந்த பணம் செலுத்தப்பட்டது என்று விசாரணை மேற்கொண்டுள்ளதா என கேட்டார்.
அதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளிக்கையில்,
கழிவு உரக்கப்பல் எனது காலத்தில் கொண்டுவரப்பட்டதல்ல. என்றாலும் தற்போது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இதற்கு முன்னர் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அதனால் இது தொடர்பாக ஆராய்ந்து, இதன் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கும் விசாரணைக் குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.
அதற்கான உறுப்பினர்கள் நியமனம் இன்றைய தினத்துக்குள் இடம்பெறும். நீதிபதி ஒருவரின் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட இருக்கிறது என்றார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில்,
இந்த உரம் தொடர்பாக கோப் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதனை விசாரணைக்கு எடுக்காமல் மறைத்து வருகின்றனர்.
மீண்டும் நீதிபதி ஒருவரின் கீழ் விசாரணைக் குழு அமைக்க நடவடிக்கை எடுப்பது இந்த விடயத்தை மறைப்பதற்காகும். இதனால் இது தொடர்பாக விசாரணை நடத்திக்கொண்டிருக்க தேவையில்லை.
கோப் குழுவுக்கு கையளித்திருக்கும் அறிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கி விசாரணை செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் அமரவீர பதிலளிக்கையில்,
குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அதேநேரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. என்றாலும் இது தொடர்பாக சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தவே நீதிபதி ஒருவரின் தலைமையில் குழு அமைக்க நடவடிக்கை எடுத்தேன். அத்துடன் இது தொடர்பாக கோப் குழுவினால் எனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் எழுந்த கிரியெல்ல எம்.பி. உரம் தொடர்பான விசாரணை அறிக்கையானது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தே கோப் குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது தெரியாதா என்றார்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். அதனால் இதற்கு என்ன செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர் கருத்து சொன்னால் அதன் பிரகாரம் செயற்படுத்த தயார் என்றார்.
அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில்,
உங்களது காலத்தில் இந்த சம்பவம் இடம்பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் நீங்கள் இது தொடர்பாக மந்த கதியிலேயே செயற்பட்டு வருகிறீர்கள் என்பதையும் கவலையோடு தெரிவிக்கிறேன்.
நீங்கள் யாரையாவது பாதுகாக்க முயற்சிக்கிறீர்களா என தெரியாது. கணக்காய்வாளர் நாயகம் கோப் குழுவுக்கு வழங்கியிருக்கும் அறிக்கை தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்கள்? அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உங்களுக்கு முடியும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, எழுந்த அநுரகுமார திஸாநாயக்க,
எமக்கு எந்த பொருளும் கிடைக்காமல் திறைசேரியினால் 6.7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டிருக்கிறது. அதனால் இங்கு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பது தொடர்பில் பாரிய விசாரணை தேவையில்லை. ஆனால், இதற்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என்பதையே தேட வேண்டும். அதேநேரம் இதற்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே தெரிவிக்கிறேன் என்றார்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
கோப் குழு அறிக்கையில் இந்த விடயத்துக்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என குறிப்பிட்டிருக்கவில்லை. சில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறது. அந்த அதிகாரிகள் தற்போது எனது அமைச்சில் இல்லை. அதனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. ஆனால், அந்த அதிகாரிகளின் பெயர்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியும்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் எழுந்த கிரியெல்ல எம்.பி. இதற்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என கோப் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
அதற்கு அமைச்சர் குறிப்பிடுகையில்,
பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த பெயர்களை வெளியிட முடியும். அவர்கள் எனது அமைச்சில் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு இல்லாமல் வேறு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை எதிர்க்கட்சி தலைவர் சொன்னால், அதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்கையில்,
கணக்காய்வு அறிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொடுத்து விசாரணை நடத்துமாறு தெரிவிக்க முடியும். அதேநேரம் கணக்காய்வு அறிக்கையை சட்டமா அதிபருக்கு வழங்கி இது தொடர்பாக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உங்களால் அறிவிக்க முடியும். அதனை செய்யுங்கள் என்றார்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த பிரகாரம் நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM