நுண்கடனால் பல பெண்கள் பாலியல் இலஞ்சம் வழங்கும் நிலைக்குள்ளாகியுள்ளனர் - சஜித்

Published By: Vishnu

01 Dec, 2023 | 11:56 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கிராமப்புறங்களில் பெண்களை வீட்டுத் தலைவியாகக் கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் முறைசாரா நுண்நிதி கடன் நிறுவனங்களிடம் சிக்கொண்டுள்ளன.

இந்தக் கடனை அடைக்க முடியாத போது பாலியல் இலஞ்சம் பெறும் நிலைக்கு ஆளாகுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆய்வுகளின் பிரகாரம் கிராமப்புற மக்களில் பெண்களை வீட்டுத் தலைவியாகக் கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் முறைசாரா நுண்நிதி கடன்களுடன் தொடர்புடைய கடன் சுமை காரணமாக காதணிகளைக் கூட அடகு வைத்து வருகின்றனர்.

நாட்டில் தற்போது 11,000 நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. கிராமங்களில் 'படுக்கைக் கடன்' என்று அழைக்கப்படும் இந்தக் கடனை அடைக்க முடியாத போது,பாலியல் இலஞ்சம் பெறும் நிலை காணப்படுகிறது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளதன் பிரகாரம்,கடந்த மாதம் 15 வயதுக்குட்பட்ட 169 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதோடு,அதில் 26 சிறுவர்கள் கர்ப்பமடைந்துள்ளனர்.

அத்துடன் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்கள் தடுப்பு பணியகத்தின் அறிக்கையின் படி, கடந்த 9 மாதங்களில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 1086 பாலியல் வன்கொடுமைகள்,கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் 425 பதிவாகியுள்ளன. இந்நிலையில் இருந்து சிறுவர் தலைமுறையை பாதுகாக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் இதுவரை 2000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு 533858 பேர் வேலை இழந்துள்ளனர். 20 சதவீத ஆடைத் தொழிற்சாலைகள் மூன்று மாதங்களுக்குள் மூடப்பட்டுள்ளன. இதில் 10 நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்கி ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.இதனால் அவர்களது குடும்ப நலன் நடவடிக்கைகள் கூட முடங்கியுள்ளன.  வேலையிழந்ததால் பெண்கள் வேறு வழிகளில் பணத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பொருளாதார நெருக்கடியை படிப்படியாக தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும்,சாதாரண மக்களைப் பார்க்கும் போது அவர்களின் பரிதாப நிலை குறையவில்லை. பொருளாதார நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுவர்களே நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2023 மே மாதத்திற்குள் 39 இலட்சம் பேர் மிதமான உணவுப் பாதுகாப்பின்றிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷாவில் கூட அப்ளாடோக்சின் என்ற நச்சு இரசாயனம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அண்மையில் சுகாதார அமைச்சு,”தேசிய போஷாக்குக் கொள்கை 2021-2030” பத்தாண்டு கொள்கையை வெளியிட்டது. இதனை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் என்ன என கேட்கிறோம். ,2023 இல் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தால் வெளியிடப்பட்ட Understanding Multidimensional Vulnerability Impact on People of Sri Lanka குறியீட்டின் பிரகாரம், இலங்கை 0.026A தரப்படுத்தல் நிலையில் உள்ளது,10 பேரில் 6 பேர் பன்முக ஆபத்தில் உள்ளனர். இது மொத்த சனத்தொகையில் 55.7 வீதமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04
news-image

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-03-25 17:01:14
news-image

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30...

2025-03-25 16:57:39
news-image

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து...

2025-03-25 16:16:22
news-image

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின...

2025-03-25 17:11:15