வட, கிழக்கில் தடைகளைத் தாண்டி உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் : கொடிகள் பொலிஸாரால் அறுப்பு !

27 Nov, 2023 | 10:16 PM
image

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னிவிளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதேவேளை, இறுதி நிமிடத்தில் உட்புகுந்த பொலிஸாரின் அராஜகத்துக்கு மத்தியில் மட்டக்களப்பு தரவையில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அங்கு நுழைந்த பொலிஸார் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக்கொடிகளை அறுத்தெறிந்தனர்.

யாழ்ப்பாணம் - கோப்பாய்

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

கோப்பாய்  மாவீரர் துயிலும் இல்லம்  இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நினைவேந்தல் இடம்பெற்றது.

கொடிகாமம்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில்  மாவீரர் தின நிகழ்வுகள் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டன.

அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மேஜர் வண்ணன் ஆகியோரின் தாயாரும் மற்றும் மாவீரர் குமரர் மற்றும் சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்,சகோதரர்கள்,உறவுகள்,சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்  இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

பிரதான ஈகைச் சுடரினை கடற்கரும்புலி மாவீரர் தமிழினியின் தந்தையார் முத்துலிங்கம் சிவப்பிரகாசம்  ஏற்றிவைத்தார்.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்

யாழ்ப்பாணம் - தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது.

ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து பொது ஈகைச்சுடர் முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால் ஏற்றப்பட்டது.

முல்லைத்தீவு 

இரட்டைவாய்க்கால்

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான தனபாலசிங்கம்  ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு கடற்கரை

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு கடற்கரையில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை கடற்கரும்புலி மேஜர் நிதர்சன் அவர்களின் தாயார் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடலான தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன பேழைகளே எனும் பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தார்கள்.

வவுனியா

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

வவுனியாவில் பிரதான மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள ஈச்சங்குளம் பகுதியில் 561 ஆவது இராணுவ தலைமையகம் அமைந்திருப்பதால் அதற்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நினைவேந்தல்கள் இடம்பெற்றது.

இதன் போது மணி ஒலிக்கப்பட்டு, ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தின் பிரதான ஈகைச்சுடரினை மேஜர் உமாசங்கர் மற்றும் கப்டன் கஜலக்சுமி ஆகியோரின் தாயார் வள்ளிப்பிள்ளையால் ஏற்றி வைக்கப்பட்டது.

இதனையடுத்து நினைவேந்தலில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் மல்க, மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த வீரர்களுக்கு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதில் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

மட்டக்களப்பு

மாவடிமுன்மாரி

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் திங்கட்கிழமை (27.11.2023) மாலை 6.05 மணிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி சொலுத்தினர்.

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தைச் சூழ பொலிசார் அவர்களது கடமையில் ஈடுபட்டிருந்துடன் அவ்வப்போது நிகழ்வை குழப்பும் வகையில் ஏற்பாட்டாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் பொலிசார் அவர்களது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

எனினும் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடவோ, கார்த்திகை பூ சின்னங்கள் காட்சிப்படுத்தவோ அங்கு பொலிசார் அனுமதியளித்திருக்கவில்லை. மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள கற்பாறையில் ஏற்கனவே கார்த்திகை பூ ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதனையும் அகற்றுமாறும் பொலிசார் கோரினர். ஆனாலும் அதனை ஏற்பாட்டாளர்கள் கருத்திற் கொள்ளவில்லை.

மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளாத்திருக்க மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு பொலிசார் நீதிமன்றத்தினூடாக ஞாயிற்றுக்கிழமை தடைஉத்தரைவைப் பிறப்பித்திருந்தனர். 

ஆனாலும் திங்கட்கிழமை நீதிமன்றிற்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் அவர்களது  சட்டத்தரணிகளுடாக தமக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை விலக்கக் கோரி முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்கு  இந்நிகழ்வில் பயங்கரவாத செயற்பாடுகளை தூண்டும் வகையிலான எதுவித செயற்பாடுகளையும் மேற்கொள்ளாது கலந்து கொள்வதற்கு அனுமதியளித்திருந்தது.

அதற்கிணங்க இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மற்றும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு - வாகரை

மட்டக்களப்பு வாகரையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

மன்னார் 

மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்களின் நினைவாக,கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப் பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தாயகம் கோரிய உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது..

அந்த வகையில் மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட   மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி யுள்ளனர்..

 பொதுச் சுடர் ஏற்றப்பட்ட பின் மாவீரர்களின் உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதன் போது மாவீரர்களின் உறவுகள் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,அரசியல் பிரதி நிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு   கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆட்காட்டிவெளி

மாவீரர் தினத்தையொட்டி மன்னார்   ஆட்காட்டிவெளி   மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு,மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வு பூர்வமாக மாவீரர்  நினைவு   தினம் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது.  

தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது.

அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர்  துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு  இன்று திங்கட்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது .

தமிழ் தேசிய விடுதலைக்காக தனது மகனை கரும்புலியாக வழங்கிய தந்தை பொதுச் சுடரை  ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார் .

ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,  என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க   உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதே நேரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை

திருகோணமலை மாவட்டம் சம்பூர்  ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால்  தடுக்கப்பட்ட நிலையில்,  சம்பூர் பத்திரகாளி கோவில் முன்றலில் அனுஷ்டிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45