மனதைக் கடந்துவிட உதவும் பிரமிட் தியானம்

21 Nov, 2023 | 04:23 PM
image

பிரமிட் வடிவம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். சாதாரணமாகவே, கோபுரங்களின் அமைப்பும் பிரமிடின் வடிவத்துக்குச் சற்று ஒப்பானதுதான்.

பிரபஞ்ச சக்தியை வெகுவாக ஈர்த்து, அதனுள் இருக்கும் வஸ்துக்களுக்கு பிரபஞ்ச சக்தியை வாரி வழங்குவதே பிரமிட் அல்லது கோபுரங்களின் இயல்பாகும்.

இதேவிதமாக, பிரமிட் தியானம் செய்யும்போது, உங்கள் மனோபலம் மற்றும் உடல்பலத்துக்கு ஆரோக்கியமான அதிர்வுகள் வெகுவாகக் கிடைக்கும்.

பிரமிட் வடிவ அமைப்பு ஒன்றை அருகில் வைத்தபடி அல்லது 6 அடி உயர பிரமிட் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, அதில் அமர்ந்து தியானிப்பதே பிரமிட் தியானம் எனப்படுகிறது. தியானத்துக்கு ஏற்ற பொழுதுகளான அதிகாலை, மற்றும் அந்தி சாயும் மாலை நேரத்தில், இந்தப் பிரமிடினுள், வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்ய, மனம் சற்று விரைவாகவே கட்டுக்குள் வரும். 

பிரமிட் தியானத்தின்போது விழிப்புணர்வு அதிகரிக்கும். இதனால், மனம் ஒடுங்கும். மனம் ஒடுங்கினாலே பேரமைதி தானே?! 

உடல், மனம், ஆன்மா மூன்றையும் அடுத்த நிலைக்கு உயர்த்தும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள தியானமே சிறந்த வழி. மனித வாழ்க்கை திருப்தியானதாக அமைவதற்கு, இதயசுத்தியும் மனம் சார்ந்த சக்தியும் அவசியம். இவற்றைப் பெறுவதற்கு தியானமே சிறந்த வழி. தியானத்தில் சீக்கிரம் விழிப்பு நிலை பெற, இந்த பிரமிட் தியானம் சிறந்தது.

பிரமிடின் கோணங்கள் ஒவ்வொன்றும் அமைதியையும் ஆற்றலையும் சுட்டுகின்றன. ஆக, பிரமிட் தியானம் செய்யும்போது, ஒவ்வொருவரும் புது அனுபவம் பெற முடியும். குறிப்பாக, இக லோக வாழ்க்கையை நடத்துவதற்கான ஆவலின் அடிப்படையில், இயந்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் இருந்து வேறுபட்டு, அமைதியும் திருப்தியும் மட்டுமே உள்ள ஆன்மீக வாழ்க்கைக்கு தியானம் இட்டுச் செல்கிறது.

இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால், எப்போதும் புற உலகையே காண்பவர், தியானத்தின் மூலம் முதன் முறையாக தன்னுள் இருக்கும் உலகத்தைக் காண ஆரம்பிக்கிறார். அதாவது, காண்பவரே, காணப்படுபவராகவும் இருக்கிறார்.

ஆழ்ந்த உறக்கத்துக்கும் அப்பால் விழிப்புணர்ச்சி இருந்தால் எப்படியிருக்கும்? அதாவது, தூக்கத்தையும் தாண்டி உங்கள் அகம் விழித்திருந்தால் எப்படியிருக்கும்? அதுதான் தியானம்.

கூடியவரையில், ஒரே இடத்தில் தியானம் பயிலுங்கள். அப்போதுதான் அது உங்களுடைய அதிர்வுகளை உறிஞ்சி, மீண்டும் நீங்கள் வந்து தியானிக்கும்போது, உங்கள் மீது வெளியேற்றும். இது உடலுக்கும் மனதுக்கும் மிகுந்த ஆரோக்கியமளிக்கும்.

மனமற்ற அல்லது மனதைக் கடந்த நிலையே தியானம். எந்த விதமான தியானம் செய்தாலும் மனமற்ற நிலையையே வந்து சேரும். இந்த நிலைதான் பரவச நிலை எனப்படுகிறது. இந்தப் பரவச நிலையை வேறெந்தப் புறவுலகப் பொருளோ மகிழ்ச்சியோ தந்துவிட முடியாது. மனதைக் கடந்துவிட்டால், காலத்தையும் கடந்துவிடலாம்

- வேல்முருகன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right