(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், இது குறித்து ஆய்வுகள் நடத்தப்படாமல் வெளியிடப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் நாடு தவிர்க்க முடியாத முக்கிய தேர்தல்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், உபாயங்களை மாற்றியமைத்து, தேர்தல் வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதையே நாம் பார்க்கிறோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையில் நாடு வங்குரோத்து நிலைக்கு வழிவகுத்த போக்கை அப்பட்டமாக கூறியிருந்தார். இன்று, நமது நீதிமன்றம், நமது நாடு வங்குரோத்தாவதற்கான உடனடி காரணங்களை வெளிப்படுத்தும் வரலாற்றுத் தீர்ப்பின் பின்னணியில் இந்த வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது.
நீதிமன்றத் தீர்ப்பு இலங்கையின் அரசியல் நோக்கு நிலையில், பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன். அத்துடன், இந்த தீர்ப்பு அரசியல் நடத்தையின் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
அத்துடன், எந்த அறிவியல் ஆய்வும் இன்றி எடுக்கப்பட்ட முடிவுகளால், நாட்டின் தேசிய வருமானத்தில் பெரும் சதவீதத்தை இழந்து, மக்கள் மிகவும் வேதனையான சூழலையும், உலகத்தின் முன் அவமானகரமான சூழலையும் அனுபவிக்க நேரிட்டுள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் தலை நிமிர வேண்டுமாயின், நாட்டை சரியான பாதைக்கு வழிநடத்த வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கோஷங்கள் மற்றும் விசித்திரக் கதைகளை உள்ளடக்கிய வழமையான, பாரம்பரியமான வரவு செலவுத் திட்ட உரைகளையே இலங்கையில் நாம் இன்னும் பார்க்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக வரவு செலவு திட்ட உரைகள் அதிக இலக்குகளைப் பற்றி பேசுகின்றன. என்றாலும், நாம் செயல்களையும் முடிவுகளையும் கவனிக்கும்போது, அந்த இலக்குகளை அடைவதில் தோல்வியைத் தொடர்ந்து காண்கிறோம். வரவு செலவு திட்ட பற்றாக்குறை இடைவெளியை எடுத்துக்கொண்டாலும், அரசின் வருமானத்தை எடுத்துக்கொண்டாலும், அரச செலவினங்களை எடுத்துக்கொண்டாலும், வரவு செலவுத் திட்ட ஆவணங்களில் கூறப்பட்டுள்ள இலக்குகள் எட்டப்படவில்லை என்பதே யதார்த்தம்.
2023 வரவு செலவு திட்டத்தில் 2022ஐ விட 65% வருவாய் அதிகரிப்பை எட்டுவது குறித்து அரசாங்கம் பேசியது. ஆனால், அந்த இலக்கை நெருங்க முடியவில்லை. இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2023ஐ விட 45% வருமான அதிகரிப்பு குறித்து பேசுகிறது. அதாவது வருவாயை 4 டிரில்லியனாக அதிகரிப்பது என்பது ஒரு இலக்காகும்.
வரவு செலவுத் திட்ட உரைகளில் முன்வைக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை என்ற கதையுடன், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும்போது, நடைமுறைப்படுத்தப்படாத பல பிரேரணைகளின் கதையையும் நாம் தெளிவாகக் காணலாம்.
அத்துடன் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் கைதட்டல்களுக்கு மத்தியில் நிதியமைச்சர், “ருஹுணு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களுக்கு பட்ட பின்படிப்பு கற்கைகள் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும். இதற்காக 60 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்” என்றார்.
இது குறித்து அந்த பல்கலைக்கழக சமூகத்திடம் வினவினேன். பின்னர், பாராளுமன்ற ஆய்வுப் பிரிவு சம்பந்தப்பட்ட அமைச்சிடம் இந்த முன்மொழிவின் முன்னேற்றம் குறித்து வினவியபோது, ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும், இதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனால் இந்த முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், இந்த முன்மொழிவுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்படாமல், தயார்ப்படுத்தாமல் அறிக்கைகள் வெளியிடப்படுகிறதா என்ற கேள்வி தெளிவாக எழுகிறது.
நாடு தவிர்க்க முடியாத முக்கியத் தேர்தல்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், உபாயங்களை மாற்றியமைத்து, தேர்தல் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதையே நாம் பார்க்கிறோம்.
ஆனால் பண பலத்தாலும், ஆட்சி பலத்தாலும், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், எந்த ஒரு போலி செய்தியை வெளியிட்டாலும் இந்த சபையில் இருந்துகொண்டு என்ன மாய உலகங்களை உருவாக்கினாலும் இறுதித் தீர்ப்பை மக்களே வழங்க வேண்டும்.
மக்களின் அறிவுத்திறனை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து அரசியல் சக்திகளின் நிலையை இந்நாட்டு மக்கள் தற்போது நன்கு புரிந்துகொண்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் ஏமாந்த மக்கள் இப்போது உரிய சந்தர்ப்பம் வரும் வரை காத்திருக்கிறார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM