பிரபஞ்சத்தையே அறியத் தரும் சம்சய தியானம்

18 Nov, 2023 | 12:03 PM
image

நீங்கள் பல்வேறு தியான வகைகளைப் பற்றி அறிந்திருக்கலாம். அவற்றுள் ஒன்றுதான் சம்சய தியானம். இது, யோக முனி பதஞ்சலி அருளிய ஒரு வகை தியானமாகும்.

இந்த தியானத்தில் ஈடுபடும் சாதகர் ஒரே பொருளைப் பகுத்து, அவற்றின் இயல்பைப் பற்றி தியானம் செய்வார். உதாரணமாக, ஒரு மாங்கனியை தியானிக்கும் சம்சய சாதகர் ஒருவர், முதலில், மாம்பழத்தின் தோற்றம், பிறகு அதன் தோல், அதன் மணம், அதன் சுவை என்று இறுதியில் மாம்பழத்தின் உட்கட்டமைப்பை தியானிப்பது வரை இந்த தியானம் நீளும். இதன் மூலம் ஒரு பொருளை, 'உள்ளது உள்ளபடியே' மனதின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

இதுவே ஒரு விளக்கினை எடுத்துக்கொண்டால், அதன் சுடரின் மஞ்சள்‌ நிறத்தை, பின்பு அதன்‌ நுனியில் ‌உள்ள கறுப்பு நிறத்தை பின்பு அதன்‌ நடுவில் ‌உள்ள நீல நிறத்தை, பின்பு அதன் ‌ஒட்டுமொத்த ஒளியை, பிறகு அதன் ‌உஷ்ணத்தை என்று ஒவ்வோர் அம்சமாக தனித்தனியே எடுத்து தியானிப்பார்.

இந்த சம்சய தியானத்தின் மூலம் எதை தியானிக்கிறோமோ, அதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.

இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், சம்சய தியானத்தில் கரைகண்டவர் எதை நினைத்து தியானித்தாலும், அதன் அணுக்கட்டமைப்பு வரை அவரால் அணுகிப் பார்க்கவும் விளங்கிக்கொள்ளவும் முடியும். இதனால், ஒன்றை இன்னொன்றாக மாற்றிப் பார்க்கும் ஞானமும் சித்திக்கும்.

தொண்டைக்‌குழி எனப்படும் விசுக்தி சக்கரத்தை நினைந்து ஒருவர் ‌சம்சய தியானம்‌ செய்தால்‌, அவர் தம் பசியையும் தாகத்தையும் வென்றுவிட முடியும்.

அதுபோலவே, விளக்கின் ஒளியை மையப்படுத்தி சம்சய தியானம் பயின்றால், தொலைவில் ‌உள்ள பொருட்களைக் காணும் ஆற்றலை பெற முடியும்.

இதையே சாதகர் தன்னை நினைந்து தியானம் செய்து கரை கண்டால், மற்றவர் கண்களுக்குத் தன்னைக் காணாமற்செய்துவிடும் வல்லமை பெறுவார்.

சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள்‌ மீது சம்சய தியானம்‌ செய்தால்‌ அவை‌ பற்றிய முழு அறிவையும் பெற இயலும்‌.

ராஜ ரிஷி விசுவாமித்திரர் கூட, ஆகாயத்தை சம்சய தியானம் மூலம் வசப்படுத்தி, அதில் ஏற்படும் இயற்கை ஒலிக் கூறுகளை பகுத்து அறிந்தே காயத்ரி மந்திரத்தை அருளினார்.

இதுபோன்றே தான் எழுதா மறைகள் என்று சொல்லப்படும் வேதங்களையும் ரிஷி புங்கவர்கள் தொகுத்துத் தந்துள்ளனர்.

இந்த சம்சய தியானத்தின் ‌மூலமே பல்வேறு பொருட்களையும் பண்புகளையும் பகுதி பகுதியாக பல காலம் ‌ஆராய்ந்து, 5000 - 7000 ஆண்டுகளுக்கு முன்பே சூரியன்‌, நிலவு, கோள்கள்‌, கிரகங்கள்‌, இவற்றின் ‌நிறம்‌, வடிவம்‌, சுற்று வட்ட, இயக்கப் பாதை, கிரகணம், அதன் நேரம்,‌ அதன்‌ அளவு, வால்‌ நட்சத்திரத்தின்‌ வருகை, பருவ காலங்களில்‌ மழை கணிப்பு, பஞ்சம்‌, செழிப்பு என பல்வேறு அரிய மர்ம விஞ்ஞான குறிப்புகளை நம்‌ ரிஷிகள் ‌மனித குலத்துக்கு பஞ்சாங்கம் ‌என்னும் ‌விஞ்‌ஞானமாகத் தந்திருக்கின்றனர்.

- உதயதீபன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right