(எம்.மனோசித்ரா)
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு செலவுத் திட்டத்தில் தீர்க்க முடியாது. நெருக்கடிக்கு ஏற்ப தீர்வு காணும் வழிகள் மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.
முதலில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி அதன் பிறகு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் பிடிப்பு பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2024 வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாறிவரும் சூழலில் மாற்றம் மூலம் நெருக்கடிக்கு வெற்றிகரமான தீர்வுகளைக் கண்டறிதல் சாத்தியமானது. இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அந்த முறை மிகவும் முக்கியமானது. புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையாக நலன்புரி நன்மைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான பின்னணியை இம்முறை வரவு - செலவு திட்டம் தயார்படுத்துகிறது. வெளிப்புற காரணிகளைப் பொறுத்து மதிப்பீடுகள் மாறுபடக் கூடும். ஏனெனில் காஸாவின் தற்போதைய மோதல் சூழ்நிலையும் கூட எதிர்காலத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கலாம். அந்த நிலை இலங்கைக்கு மட்டுமே ஏற்படும் எனக்கூற முடியாது. இது உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் காரணியாகும். உலக வல்லரசுகள் ஒன்று கூடி போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். பின்னர் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். நான் இரண்டு வரவு - செலவு திட்டங்களை சமர்ப்பித்திருக்கின்றேன். எனது முதலாவது வரவு - செலவு திட்டத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. அடுத்த வருடத்துக்கான ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரே பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்கு வைத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சில தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் அது தேர்தலுக்கான பட்ஜெட் அல்ல. பொருளாதார அணுகுமுறையை உருவாக்க முன்வைக்கப்பட்ட பட்ஜெட்டாக, அரச ஊழியர்களின் ஊதிய உயர்வு, தனியார் துறை மாற்றங்கள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட சகல துறைகளையும் உள்ளடக்கியதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் இணைந்து தனியார் முதலீட்டு திட்டங்களை ஊக்குவித்தல், கல்வி சீர்திருத்தங்கள், நவீன பொருளாதாரம் உள்ளிட்ட பல திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களையும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும் சமாளிக்க தனியார் துறை, வெளிநாட்டு உதவி மற்றும் நிபுணர்களுடனான ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்பு இல்லாமல், அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து எதையும் செய்ய முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM