எம்.எஸ்.தீன்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலம், முஸ்லிம் கட்சிகளின் நடவடிக்கைகளினால் சிதைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மத்தியில், முஸ்லிம் காங்கிரஸ் என்பது தனித்துமான கட்சியாக இருந்த போது பேரம் பேசும் சக்தியாகவும், அரசாங்கத்தை தீர்மானிக்கும் கட்சியாகவும் திகழ்ந்தது. அதனால்தான் தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், தொழில் வாய்ப்புக்கள் போன்ற பலவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
ஆனால், அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர் இந்தப் பேரம் பேசும் சக்தி முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களினாலேயே சிதைக்கப்பட்டது. தலைமைத்துவ பதவிக்கு ஏற்பட்ட போட்டி நிலை, கட்சியின் முக்கியஸ்தர்களை ஓரங்கட்டுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதியவர்களை நம்பி கட்சியின் தூணாக செயற்பட்டவர்களை தூரமாக்கிக் கொண்டமை.
தலைவரும், அவரைச் சூழ்ந்து இருந்தவர்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பு, அமைச்சர் பதவிக்காக ஏற்பட்ட போட்டி நிலை, கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்ப்பதற்கு சரியான அணுகு முறைகளை கையாளாமை, கட்சியிலிருந்து பிரிந்தவர்களும், விலக்கப்பட்டவர்களும் இணைந்து புதிய கட்சிகளை தோற்றுவித்தமை, ஆட்சியாளர்களின் திட்டமிட்ட செயற்பாடுகள் போன்ற பல காரணங்களினால் முஸ்லிம்களின் அரசியல் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. இதனால், முஸ்லிம்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதற்கு கூட ஆட்சியாளர்கள் தயாரில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று முஸ்லிம்களிடையே முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் உள்ளன. ஆயினும் எந்தவொரு கட்சியும் பலம் வாய்ந்த நிலையில் இல்லை. இருக்கின்ற கட்சிகளுக்குள் முஸ்லிம் காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகம் என்று சொல்லலாமேயன்றி, அக்கட்சிதான் முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற கட்சியென்று சொல்ல முடியாது. முஸ்லிம் காங்கிரஸாருக்கு இது கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மையாகும்.
முஸ்லிம்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டுள்ள இன்றைய அரசியல் சூழலில் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் அங்கத்துவம் பெற்றுள்ள கட்சியை பாராளுமன்றம் செல்வதற்குரிய ஒரு கருவியாக மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் முடிந்ததும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி, தமக்கும் கட்சிக்கும் எந்த தொடர்புமில்லை போன்று பாராளுமன்ற உறுப்பினர் முதல் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்வரை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் முஸ்லிம் கட்சிகள் யாவும் மேலும் பின்னடைவுகளையே கண்டுள்ளன.
இதனால், முஸ்லிம்களின் அரசியல் பலத்தை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒரு கூட்டமைப்பாக உருவாக்கம் பெற வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இவரது இக்கருத்துக்களின் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸிற்கு மிகப் பெரிய அரசியல் ஆதாயம் இருக்கின்றது. ஆயினும், முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தியாக வேண்டும்.
முஸ்லிம் கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக ஒற்றுமைப்படும் போது அம்பாறை மாவட்டத்தில் 4 பாராளுமன்ற உறுப்பினர்களையும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 3 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும், முஸ்லிம்களின் அரசியல் பலத்தை அதிகரித்துக் கொள்ளலாமென்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
முஸ்லிம்களின் அரசியல் பலத்தை தீர்மானிக்கும் சக்தியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அமைந்திருந்தாலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்து முஸ்லிம்களின் அரசியல் பலத்தை அதிகரிக்க முடியாது. இதுவே கடந்த கால அனுபவமாகும். மிகவும் இறுக்கான உடன்படிக்கைகளும், கட்டுப்பாடுகளும், பாகுபாடற்ற நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்.
மர்ஹும் அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் 10 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டது. ஆனால், அதனால் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்காளி என்று இருந்ததோடு மட்டுமல்லாது பலர் அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டனர்.
கட்சியின் தலைமையோடு முரண்பட்டுக் கொண்டு புதிய கட்சிகளை ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களின் வாக்குகளை பங்கு போட்டுக் கொண்டார்கள். முஸ்லிம் காங்கிரஸினால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு கூட தைரியம் இருக்கவில்லை.
ஆகவே, அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வது என்பதற்கு அப்பால், சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். கட்சிகளுக்கு இடையே செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைள் வெளிப்படைத் தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
வாக்களிக்கும் மக்கள் அது பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதை மீறும் போது பாராளுமன்ற உறுப்புரிமை பறி போய்விடும் என்ற அச்சம் இருக்க வேண்டும். உடன்படிக்கைளை அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து செய்யக் கூடாது. முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் முன்னிலையில் செய்யப்பட வேண்டும். அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அந்த சிவில் அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், ஆட்சியாளர்களிடம் பேரம் பேசவும் முடியும்.
பேரம் பேசுவதைக் கூட அரசியல் கட்சிகள் செய்யக் கூடாது, அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் சிவில் அமைப்பே செய்ய வேண்டும். இதனைச் செய்வதற்கு அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை பொருத்தம் என்பதே பொதுவான கருத்து. இதனை விட வேறு பொருத்தமான சிவில் அமைப்புக்களும் இந்த வேலையை செய்யலாம். சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பும் இதனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யலாம்.
இவ்வாறான ஓர் ஏற்பாட்டை செய்யாது. தேர்தலில் மாத்திரம் போட்டியிடுவதற்கு ஒரு முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கிவிட்டு, தேர்தலின் பின்னர் தனித்தனியே செயற்பட அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை பயன்படுத்தி அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் அரசியல் கட்சி ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டு அமைச்சர் பதவிகளைக் பெற்றுக் கொள்வர். இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த நன்மைகளும் கிடைக்காது.
தேர்தலில் பிரிந்து செயற்படுவதற்கு அனுமதி இருக்குமாயின் முஸ்லிம் காங்கிரஸ் அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும். அதனால் முஸ்லிம் கூட்டமைப்பின் நோக்கம் ஒரு தேர்தலின் பின்னர் சிதைந்துவிடும். முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்காக இருக்க வேண்டுமே அல்லாது முஸ்லிம் கட்சிகள் பயன் பெறுவதற்கும் மாத்திரம் அமைந்து விடக் கூடாது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM