பல்கலைக்கழகம் செல்லச் சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்கள் நாடகமும் அரங்கியலும் பயின்று அதன் மூலம் பல்கலைக்கழகம் செல்லும் வகையில் டவர் அரங்கம் தமிழிலும் சிங்களத்திலும் ஒரு பாடநெறி நடத்திவருகிறது.
அந்நெறி ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. சிங்கள மாணவர்களுக்கான பயிற்சி நெறிகள் கொழும்பிலும் தமிழ் மாணவர்களுக்கான பயிற்சி நெறிகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்று வருகின்றன. இந்த இரு இன மாணவர்களைக் காணவும் அவர்களோடு உரையாடவும் எனக்குச் சந்தர்ப்பம் வாயத்தது மிகத் திறன் வாய்ந்த மாணவர்களை அங்கு நான் சந்தித்தேன். அவர்கள் எனது புதிய நண்பர்களும் ஆனார்கள்.
தமிழ்ப் பிரிவில் முதலாம் வருடத்தில் 45 மாணவர்களும் இரண்டாம் வருடத்தில் 60 மாணவர்களுமாக ஏறத்தாழ 100க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் இப்போது அங்கே கல்வி பயிலுகிறார்கள். தமிழ்ப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கலாநிதி ஜெயபிரகாஷ் சர்மா அவர்கள். அவர் இதனை வடிவமைத்ததுடன் பலரின் உதவிகளையும் பெற்று யாழ்ப்பாணத்தில் இதனை நடத்தியும்வருகிறார்.
அவருக்கு அங்குள்ள நாடக- அரங்கியல் ஆசிரியர்கள் பலர் பெரும் உதவியாக இருக்கிறார்கள். தாங்கள் இதுவரை கற்றவற்றை மாணவர்கள் இந்த நாடக விழாவில் வெளிப்படுத்துகின்றனர் என அறிகிறோம். அந்த வெளிப்பாட்டினை நாடக விழாவாக இம்மாதம் 25 26 27 ஆம் தேதிகளில் வெளிக்கொணருகின்றனர். இந்த நாடக விழாவிலே மூன்று விதமான நாடகங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்தன.
1. பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் தாங்களே தயாரித்த நாடகங்கள்
2. இம்மாணவரைக் கொண்டு மற்றையோர் தயாரித்த நாடகங்கள்
3. யாழ்ப்பாணத்து நாடகக் கலைஞர்களின் நாடகங்கள்
இப் பயிற்சி நெறியை இலங்கையின் நானாவித பக்கங்களிலுமிருந்து வந்த மாணவர்கள் பெறுவதால் இந்தப்பயிற்சி நெறி அனைவரையும் ஒன்றிணைக்கும் பயிற்சி நெறியாகவும் அமைந்திருப்பது ஓர் சிறப்பம்சம். தமிழ் பிரதேசத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் சில காலம் ஒன்றாய் ஓரிடத்தில் இருப்பதும் மகிழ்ச்சிக்குரியது அனைவரையும் இணைப்பது நாடகத்தின் ஒரு பண்பல்லவா? தம் பண்பாடுகளை பகிர்ந்து கொள்ளவும் மற்றவர்களிடமிருந்து அவர்களின் பண்பாடுகளைக் கற்றுக் கொள்ளவுமான இரு வழிப்பாதை வாய்ப்பினை இது தருகிறது.
இந்தப் பரிமாற்றமே இன்று வேண்டப்படுவதும் ஆகும். அண்மையில் இந்த டவர் அரங்க நிறுவனத்தால் நடத்தப்பட்ட நாடகப் போட்டிக்கு வந்த பத்து நாடகங்களையும் ஒரு பார்வையாளராக கொழும்பு டவர் அரங்கில் காலை முதல் இரவு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்றைய நாடகப் போக்கின் ஒரு வெட்டு முகத் தோற்றம் அதனால் கிடைத்தது. அவற்றில் பல நாடகங்கள் நம்பிக்கை ஊட்டுவனவாக அமைந்திருந்தன. சில மிகத் திறமாகவும் இருந்தன.
நம் உள்ளூர் இளைஞர்களின் அசாத்திய திறன்களை அதிலே நான் அவதானித்தேன். இவ்வகையில் இலங்கைத் தமிழ் நாடக நந்தவனத்தில் இன்னொரு பூச்செடியாக மலர்கிறது டவர் அரங்கம் நடத்தும் நாடக விழா. ஆயிரம் பூக்கள் மலரட்டும் மணம் வீசும் பூக்களை மக்கள் இனம் கண்டு கொள்வார்கள். டவர் அரங்க நிர்வாகிகளுக்கும் பனிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள். இந்நாடக விழாவுக்கு இம்முறை இராவணேசனைத் தயாரித்துத் தருமாறு நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
எல்லாவற்றையும் திட்டமிட்டு இருந்தேன் சகல ஒழுங்குகளும் செய்தாகியும்விட்டது. இன்னொரு விதமாக இராவணேசனை இம்முறை தயாரிக்கவும் எண்ணி இருந்தேன். ஆனால் என்னால் செல்ல முடியாத நிலை எனினும் அது தயாரிக்கப்பட்டு மேடையிடப்படுவதாக அறிகிறேன். அவர்களுக்கான ஆட்ட பயிற்சிகள் சில ஏலவே அவர்களுக்கு அளிக்கப்பட்டும் உள்ளன. இதனை மற்றவர்களின் உதவியுடன் அங்கு பயிலும் மாணவர்களே தயாரிக்கிறார்கள். இன்னொரு வயதினரான மிக இளையதலை முறை ஒன்று இராவணசனைக் கையேற்றுக் கொள்வது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
பேராசிரியர் சி.மௌனகுரு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM