(நா.தனுஜா)
இந்து சமுத்திரம் என்பது வெறுமனே நீர்ப்பரப்பு மாத்திரமல்ல. மாறாக அது இப்பிராந்தியத்திலும், இதற்கு அப்பாலும் உள்ள நாடுகளின் அபிவிருத்தியிலும் சுபீட்சத்திலும் மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் இராஜதந்திர வலயமாகும். அதன்படி சட்ட அடிப்படையிலான சர்வதேச செயலொழுங்குக்கு, சட்டவாட்சி, நிலைபேறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான உட்கட்டமைப்புசார் முதலீடுகள், சுதந்திரமான கடல் மற்றும் ஆகாய மார்க்கப் போக்குவரத்து, இறையாண்மைக்கான மீயுயர் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான இந்திய - பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவதே இந்தியாவின் பரந்துபட்ட இலக்காகும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் (Indian Ocean Rim Association) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நேற்று புதன்கிழமை (11) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 2023 - 2025 ஆம் ஆண்டு வரை இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பிரதித்தலைமை நாடான இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இதற்கு முன்னரான காலப்பகுதியில் தலைமைப்பொறுப்பை வகித்த பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே.அப்துல் மொமீன், இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி சல்மான் அல் ஃபாரிஸி மற்றும் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரின் பங்கேற்புடனான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று பி.ப 2.30 மணிக்கு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட எஸ்.ஜெய்சங்கர் மேலும் கூறியதாவது:
இந்தியா பிரதித்தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இம்முறை மீண்டும் கொழும்புக்கு வருகைதந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். 2023 - 2025 வரையான காலப்பகுதிக்கான இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் இலங்கைக்கும், இதுவரையான காலமும் தலைமைப்பொறுப்பை வகித்த பங்களாதேஷுக்கும் வாழ்த்துக் கூறுகின்றேன். இப்பிராந்தியத்தில் சுபீட்சத்தைக் கட்டியெழுப்புவதும், சுதந்திரமானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான இந்து சமுத்திரப்பிராந்தியத்தை உறுதி செய்வதுமே எமது பொதுவான நோக்கமாகும்.
முதலாவதாக உதவியையும், பாதுகாப்பையும் வழங்குவதுடன் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைந்திருக்கும் நாடுகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கும் நாடு என்ற ரீதியில் இந்தியாவானது 'அயலகத்துக்கு முதலிடம்' என்ற கொள்கையைப் பின்பற்றிவருகின்றது. சட்ட அடிப்படையிலான சர்வதேச செயலொழுங்குக்கு, சட்டத்தின் ஆட்சி, நிலைபேறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான உட்கட்டமைப்புசார் முதலீடுகள், சுதந்திரமான கடற்போக்குவரத்து, இறையாண்மைக்கான மீயுயர் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான இந்திய - பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவது என்பது எமது பரந்துபட்ட இலக்காகும்.
இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் இந்து - பசுபிக் பிராந்திய திட்டம் கடந்த 22 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் எதிர்வரும் நாட்களில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இந்து சமுத்திரம் என்பது வெறுமனே நீர்ப்பரப்பு மாத்திரமல்ல. மாறாக அது இப்பிராந்தியத்திலும், இதற்கு அப்பாலும் உள்ள நாடுகளின் அபிவிருத்தியிலும் சுபீட்சத்திலும் மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் இராஜதந்திர வலயமாகும்.
அதன்படி அனைவருக்கும் நன்மையளிக்கக்கூடியவகையில் இப்பிராந்தியத்தின் உச்சபட்ச இயலுமையைக் கூட்டாகப் பயன்படுத்துவதை இலக்காகக்கொண்டு இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் கீழ் இந்தியா உள்ளடங்கலாக 23 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. அதன்பிரகாரம் இப்பிராந்தியத்தில் கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தியா முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது. அதேபோன்று இவ்வமைப்பு சார்ந்த இந்தியாவின் கடப்பாடானது அமைதியான நிலைத்திருப்பு, பகிரப்பட்ட சுபீட்சம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது.
மேலும் இவ்வமைப்பின் உறுப்புநாடுகள் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை அடைந்துகொள்வதற்கு அபிவிருத்திசார் சவால்கள் செயற்திறன்மிக்கவகையில் உரியவாறு கையாளப்படவேண்டும். குறிப்பாக சமுத்திர பொருளாதாரம், வளப்பயன்பாடு, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நிலைபேறான அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி, சுபீட்சம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கானதொரு கட்டமைப்பாகவே இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பை இந்தியா கருதுகின்றது. அதன்படி இவ்வமைப்பின் உறுப்புநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும், பிராந்திய வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இந்தியா தொடர்ந்து செயலாற்றும் என்று அவர் உறுதியளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM