தமிழ்த் தேசிய அர­சியல் செல்லாக் காசா ?

Published By: Vishnu

09 Oct, 2023 | 11:26 AM
image

கபில்

தமிழ்த் தேசிய அர­சியல் பரப்பில், இரண்டு முக்­கி­ய­மான விட­யங்­கள் அண்­மையில் அதிக கவ­னிப்பை பெற்­றி­ருக்­கி­ன்றன. முத­லா­வது தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­களின் அணி­தி­ரள்வு.

இரண்­டா­வது, ஆயுதப் போராட்­டத்தைக் கைவிட்­டது தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற கவலை.

நீதி­பதி சர­வ­ண­ரா­ஜா­வுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்டு, அவர் நாட்டை விட்டு வெளி­யேறும் நிலை ஏற்­பட்­டுத்­தப்­பட்­டதைக் கண்­டித்து, தமிழ்த் தேசியக் கட்­சி­களின் ஏற்­பாட்டில் யாழ்ப்­பா­ணத்தில் மனித சங்­கிலிப் போராட்டம் ஒன்று கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்­றது.

யாழ். நகரில் இருந்து மரு­த­னார்­மடம் வரையில்  மனிதச் சங்­கிலிப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

இந்தப் போராட்டம், குறிப்­பிட்ட கால இடை­வெ­ளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கட்­சி­களை ஒன்­று­பட வைத்­தி­ருக்­கி­றது.

நீதி­பதி சர­வ­ண­ரா­ஜா­வுக்கு விடுக்­கப்­பட்ட அச்­சு­றுத்தல் சாதா­ர­ண­மா­ன­தல்ல.

அதற்கு எதி­ராக காத்­தி­ர­மான போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும், அதனைக் கவ­ன­மாக ஒன்­றி­ணைக்க வேண்டும் என்ற கருத்து தமிழ் மக்கள் மத்­தியில் பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது.

தமிழ் மக்கள் தங்­களின் உயிர்­களைக் கொடுத்தும் கூட நீதியை - சுதந்­தி­ரத்தை, உரி­மையை அடைய முடி­யாமல் இருக்­கின்­றனர்.

இதற்­கென பாரிய விலை­களை அவர்கள் செலுத்­தி­யி­ருக்­கி­றார்கள். ஆனாலும், இந்த இழப்­பு­க­ளுக்கு எல்லாம் நீதி கிடைக்­க­வில்லை. தமி­ழர்கள் தங்­களின்  உரி­மை­களை அடைய முடி­ய­வில்லை.

அதற்கு பூகோள அர­சியல் முக்­கி­ய­மா­னது. இலங்­கையில் தமி­ழர்­களின் போராட்ட நியா­யங்­களை விட ஒப்­பீட்­ட­ளவில் பல­வீ­ன­மான போராட்­டங்­களை நடத்­திய இனக்­கு­ழுக்கள் கூட தாங்கள் எதிர்­பார்த்த தீர்வை எட்­டி­யி­ருக்­கி­றார்கள்.

ஆனால்.  பூகோள அர­சியல் சக்­திக்குள் சிக்கிக் கொண்­டுள்­ளதால், தமி­ழர்­க­ளுக்­கான நீதியும், உரி­மையும், இன்று வரை கைக்கு வராத நிலையே நீடிக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில் இலங்­கையில் தமி­ழர்கள் எதிர்­கொண்­டுள்ள அச்­சு­றுத்­தலை- தமி­ழர்­களின் தாய­கத்­தில் இடம்­பெறு­கின்ற ஆக்­கி­ர­மிப்­பு­களை நீதி­பதி சர­வ­ண­ரா­ஜா­வுக்கு ஏற்­பட்ட அச்­சு­றுத்­தலும், அவ­ரது வெளி­யேற்­றமும், அச்­சொட்­டாக வெளி­யு­ல­கத்­துக்கு வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இந்த நிலையைக் கண்­டிப்­பதும், இதற்­கெ­தி­ராக போராட்டம் நடத்­து­வதும் மாத்­திரம் முக்­கி­ய­மல்ல. கிடைத்த சந்­தர்ப்­பங்­களைப் பயன்­ப­டுத்திக் கொள்­வதும் தான் முக்­கி­ய­மா­னது.

இலங்­கையில் பேரி­ன­வாத மேலா­திக்கம், அதனால் தமி­ழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி, தமிழ் நீதி­ப­தி­க­ளுக்கும் கூட இருக்­கின்ற பாது­காப்­பற்ற நிலையை சர­வ­ண­ரா­ஜாவின் வெளி­யேற்றம் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­வதன் மூலம் தமி­ழர்­க­ளுக்­கான நீதியை எட்­டு­வ­தற்கு முயற்­சிக்க முடியும். அதற்­கான கதவை தட்டித் திறக்க முடியும்.

அதனால் தான் மனித சங்­கிலிப் போராட்டம் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­பட்­டது. எனினும், இந்த விவ­கா­ரத்தில் சர்­வ­தேச நீதியைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கட்­சி­களின் முயற்­சிகள் அவ­சி­ய­மா­னது.

தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் கடந்த பல மாதங்­க­ளா­கவே ஒன்­றுடன் ஒன்று முட்டி மோதிச் சிதைந்து போய்க் கிடக்­கின்­றன.

ஓர­ள­வுக்கு பல­மாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உடைந்து, தமிழ் அரசுக் கட்சி தனி­யா­கவும், ஏனைய பங்­கா­ளிகள் ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­டணி என்ற பெய­ரிலும் அணி திரண்­டுள்­ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி தனி வழியில் செல்­கி­றது. தமிழ் மக்கள் கூட்­ட­ணியும் அவ்­வா­றா­ன­தொரு நிலையில் தான் காணப்­பட்­டது.

முன்­ன­தாக, தியாகி திலீபன் நினை­வேந்தல் போன்ற தமிழ்த் தேசிய நினைவு நாட்­களில் தமிழ்த் தேசியக் கட்­சிகள் ஒன்­று­பட்டு செயற்­பட்­டன.

அண்மைக் காலத்தில் அத்­த­கைய நிகழ்­வு­க­ளிலும் முரண்­பா­டுகள் தலை­தூக்கி, தனித்­த­னி­யாக நினை­வேந்­தல்­களை நடத்தும் நிலை தோன்று விட்­டது.

தமிழ்த் தேசிய அர­சியல் வலுப்­பட வேண்டும் என்று எதிர்­பார்த்­தி­ருந்த தமிழ் மக்கள் பெரும் ஏமாற்­றத்­துக்கு உள்­ளா­கினர்.

அவ்­வா­றான நிலைக்கு ஒரு கட்­சி­யையோ ஓரிரு தலை­வர்­க­ளையோ குறை கூறிப் பய­னில்லை. எல்லாத் தரப்­பு­க­ளிலும் தவ­றுகள் இருந்­தன.

அந்த தவ­று­களைத் திருத்திக் கொள்ள அவர்­களும் தயா­ராக இருக்­க­வில்லை.

அத்­த­கைய தவ­று­களை சுட்­டிக்­காட்டி தட்டிக் கேட்­கவோ, ஆலோ­சனை கூறக்­கூ­டிய செல்­வாக்­கு­மிக்க ஆளு­மை­களும் தமிழ்த் தேசிய பரப்பில் குறைந்து விட்­டது.

அண்­மைக்­ கா­லத்தில் தமிழ்த் தேசிய அர­சி­யலின் செல்­நெறி குறித்து தமிழ் மக்கள் ஆழ­மான அதி­ருப்­தி­யையும், வெறுப்­பையும் கொண்­டி­ருந்­தனர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தான் நீதி­பதி சர­வ­ண­ராஜா அச்­சு­றுத்­தப்­பட்டு அவர் நாட்டை விட்டு வெளி­யேறும் நிலை தோற்­று­விக்­கப்­பட்­டது.

இந்தச் சம்­பவம் தான் தமிழ்க் கட்­சி­களை ஓர­ணியில் திரளும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஆனால், தமிழ்க் கட்­சி­களின் இந்தப் போராட்டம் வெற்­றி­க­ர­மா­னது எனக் குறிப்­பிட முடி­யாது.

இதனை விடவும் வலு­வா­ன­தொரு எதிர்ப்பு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். காத்­தி­ர­மான முறையில் அர­சாங்­கத்­துக்கு செய்தி சொல்­லப்­பட்­டி­ருக்க வேண்டும்.

தமிழ்க்­கட்­சிகள் தங்­க­ளுக்­கி­டையில் முட்டிக் கொண்டு வெளி­யிட்ட கருத்­துக்­களால், தமிழ் மக்கள் சோர்­வ­டைந்­தி­ருக்­கி­றார்கள்.

இந்தப் போராட்­டத்தை ஒழுங்­க­மைப்­பதில் போதிய ஆயத்­தங்கள் இல்­லாமை, மனித சங்­கிலிப் போராட்­டத்தை ஒரு வரை­ய­றைக்குள்  மட்­டுப்­ப­டுத்தி விட்­டது.

எவ்­வா­றா­யினும் தமிழ் மக்­களின் பொது­வான பிரச்­சி­னை­க­ளுக்­காக தமிழ்த் தேசிய கட்­சிகள் இன்­னமும் ஒன்­றாக செயற்­படக் கூடிய ஒரு மெல்­லிய வாய்ப்பு இருப்­பதை இது உணர்த்­தி­யி­ருக்­கி­றது.

காலம் உணர்த்­திய இந்த விட­யத்தை சரி­யாக பயன்­ப­டுத்திக் கொண்டால் தான், தமிழ்க் கட்­சி­களும் பிழைத்துக் கொள்­ளலாம், தமிழ் மக்­களும் பிழைத்துக் கொள்­ளலாம்.

அடுத்து, ரெலோ தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கோவிந்தம் கரு­ணா­க­ரனின் 60ஆவது பிறந்த நாளை முன்­னிட்டு மட்­டக்­க­ளப்பில் இடம்­பெற்ற நிகழ்வில் ஆற்­றிய உரை பல­ரது கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கி­றது.

அதில் அவர், ஆயுதப் போராட்­டத்தைக் கைவிட்­ட­தற்­காக வருத்தம் தெரி­வித்­தி­ருக்­கிறார். மீண்டும் ஆயுதப் போராட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற மன­நிலை தோன்­று­வ­தாக அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அவர் இப்­படிக் கூறி­ய­தற்கு காரணம், ரெலோ ஆயுதப் போராட்­டத்தைக் கைவிட்ட பின்னர், இடம்­பெற்ற இனப்­ப­டு­கொ­லை­களோ, தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­களோ அல்ல.

தற்­போது இடம்­பெற்று வரும் பௌத்த மய­மாக்­கலும், பௌத்த பிக்­கு­களின் அடா­வ­டித்­த­னங்­களும், ஆக்­கி­ர­மிப்­பு­களும் தான் தம்மைச் சோர்­வ­டைய வைத்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­யி­ருக்­கிறார்.

1986இல் விடு­தலைப் புலிகள், ரெலோவின் செயற்­பாட்­டுக்குத் தடை­வி­தித்­தி­ருந்­தாலும், 1987இல் இந்­திய- - இலங்கை ஒப்­பந்­தத்தை ஏற்றுக் கொண்டு ஆயுதப் போராட்­டத்தைக் கைவி­டு­வ­தாக ரெலோ அறி­வித்­தி­ருந்­தது.

அதற்குப் பின்­னரும் ரெலோ­விடம் ஆயுதம் இருந்­ததும், இந்­தி­யப்­படை மற்றும் இலங்கைப் படை­க­ளுடன் சேர்ந்து ஆயுதக் குழு­வாக இயங்­கி­யதும் பழைய வர­லாறு.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கத்­துக்குப் பின்னர், ரெலோ அர­சியல் வழியில் மட்டும் செயற்­ப­டு­கி­றது.

ஆனாலும், பௌத்த ஆக்­கி­ர­மிப்­பு­களை, பௌத்த பிக்­கு­களின் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நின்று பிடிக்க முடி­யாமல் சோர்ந்து விட்டார் செல்வம் அடைக்­க­ல­நாதன்.

தமி­ழர்­களின் வர­லாற்றுத் தாய­கத்தில் பௌத்த மய­மாக்கல் இன்று முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது.

இவ்­வா­றான தரு­ணத்தில் தான் செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆயுதப் போராட்­டத்தைக் கைவிட்­ட­தற்­காக வருத்தம் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அது சரி­யான முடிவா- தவ­றான முடிவா என்­பது வேறு விடயம். ஆனால், மீண்டும் ஆயுதம் ஏந்­து­வது பற்றி அவர் சிலா­கித்துக் கூறி­யி­ருக்­கின்ற கருத்து முக்­கி­ய­மா­னது.

அவ­ரது இந்தக் கருத்து யாரையும் தவ­றாக வழி­ந­டத்­து­வ­தற்கோ, தமிழ் மக்­க­ளுக்கு இழப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கோ கார­ண­மாக அமைந்து விடக்­கூ­டாது.

ஏனென்றால், ஒரு சரி­யான தலை­மைத்­துவம் எடுக்­கின்ற பிழை­யான முடி­வுகள் கூட, சில வேளை­களில் சரி­யான விளை­வு­களைத் தரக் கூடும்.

ஆனால், தவறான தலைமைத்துவம் சரியான முடிவை எடுத்தாலும் கூட, அது தவறாகிப் போய் விடும்.

இந்த இடத்தில் செல்வம் அடைக்கலநாதன் சரியான தலைவரா இல்லையா என்ற விவாதத்துக்குள் செல்வதல்ல இந்தப் பத்தியின் நோக்கம்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில்,  அவர் பகிரங்கமாக ஒரு விடயத்தை அறிவித்திருந்தார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் (2013) இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை முன்வைக்காது போனால், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அப்போது அறிவித்திருந்தார்.

அவர் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்து 10 ஆண்டுகள் கழித்தும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு வரவும் இல்லை. செல்வம் அடைக்கலநாதன் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கவுமில்லை.

உண்ணாவிரதப் போராட்டத்தையே முன்னெடுக்காத அவரா ஆயுதப் போராட்டம் நடத்தப் போகிறார்?

வரவர, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தங்களைத் தாங்களே திரைக் கோமாளிகள் போல ஆக்கிக் கொள்கின்றனரோ என்று தான் இப்போது கருத தோன்றுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right