(நா.தனுஜா)
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையானது அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், அனைத்து உறுப்புநாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்களைப் பிரதிபலிப்பதாகவும் அமையவேண்டுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற 78 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தின் பக்க நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜி-77 நாடுகளின் 47 ஆவது வருடாந்த அமைச்சர் மட்டக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தென்பிராந்திய நாடுகளின் கூட்டிணைந்த பொருளாதார நாட்டத்தை மேம்படுத்தல் மற்றும் முக்கிய சர்வதேச பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆற்றலை வலுப்படுத்தல் ஆகிய ஜி-77 நாடுகளின் ஸ்தாபக இலக்கு என்றுமில்லாதவகையில் மிகமுக்கியத்துவம் பெற்றிருக்கும் வேளையில் நாம் சந்திக்கின்றோம்.
உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட கரிசனைக்குரிய மற்றும் சவாலான விடயங்களைக் கையாள்வதற்கு ஐக்கிய நாடுகள் பிரகடனம் மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றின் கோட்பாடுகளையும் நோக்கங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான தமது கடப்பாட்டை சர்வதேச நாடுகள் மீளுறுதிப்படுத்தவேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
நாமனைவரும் நிதித்துறை உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் பல்வேறுபட்ட விவகாரங்கள் தொடர்பான எமது பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்துவதற்கும் கூட்டிணைந்த பொருளாதார நாட்டத்தை மேம்படுத்திக்கொள்வதற்குமான அக்கறையுடன்கூடிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளாக இருக்கின்றோம்.
உலகளாவிய பொருளாதாரக்கட்டமைப்பு மறுசீரமைப்பை முன்னிறுத்தி ஜி-77 நாடுகள் இயங்கிவந்தாலும், நாம் புதிய உலகளாவிய நிதியியல் கட்டமைப்புக்கான வலுவான செயற்திட்டமொன்றை வடிவமைக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பான ஜி-77 நாடுகளின் நிலைப்பாடானது காலத்துக்குக்காலம் மாறிவந்திருப்பதுடன், உறுப்புநாடுகளின் தனிப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் முன்னுரிமைக்குரிய விடயங்களின் அடிப்படையிலும் அவை வேறுபடுகின்றன.
எதுஎவ்வாறெனினும் உலகளாவிய நிதியியல் கட்டமைப்புடன் தொடர்புடைய சில முக்கிய விடயங்களை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களை மறுசீரமைத்தல், கடன்சலுகை மற்றும் நிலைபேறான நிதிவழங்கல், ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை வலுப்படுத்தல் என்பனவே அவையாகும்.
குறிப்பாக சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையானது அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், அனைத்து உறுப்புநாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்களைப் பிரதிபலிப்பதாகவும் அமையவேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.
அதேபோன்று வெளியகக் கடன்சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்குப் பொருத்தமானதும் நிலைபேறானதுமான கடன்சலுகைகள் வழங்கப்படவேண்டும். அதுமாத்திரமன்றி சர்வதேச ரீதியில் நிதியியல் நெருக்கடிகள் மற்றும் ஸ்திரமற்றதன்மை தோன்றுவதைத் தவிர்ப்பதற்கு உலகளாவிய நிதியியல் சந்தைசார் ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணிப்பு என்பன வலுப்படுத்தப்படவேண்டும்.
நாம் மேலும் நீண்டகாலம் காத்திருக்கமுடியாது. மற்றுமொரு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, நிலைத்திருக்கமுடியாது. தற்போதைய உலகளாவிய நெருக்கடியானது சர்வதேச நிதியியல் கட்டமைப்பை மீள்பகுப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றது. அத்தோடு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பரந்துபட்ட கூட்டணி என்ற ரீதியில் இவ்வமைப்பானது உறுப்புநாடுகளுக்கு இடையில் ஆழமான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான தளத்தை வழங்குகின்றது.
மேலும் இலங்கையின் பொருளாதார மீட்சி செயன்முறையின்போது குறிப்பிடத்தக்களவிலான கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டத்தின்கீழ் வலுவான கட்டமைப்பு மாற்றங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி 2030 ஆம் ஆண்டில் நிறைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகளில் எவ்வித பின்னடைவும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தும் அதேவேளை, பொருளாதார மீட்சி, கடன் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை அடைந்துகொள்வதில் இலங்கை அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM