(நெவில் அன்தனி)
சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஸெஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹங்ஸோ நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டு விழா வண்ணமயமான தொடக்கவிழா வைபவத்துடன் சனிக்கிழமை (23) ஆரம்பமானது.
ஆசியாவின் 45 நாடுகளினதும் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரப்போகும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் சம்பிரதாயவூர்வமாக தொடக்கி வைத்தார்.
அணி வகுப்பில் இலங்கை தேசிய கொடியை கோல்வ் வீரர் அநுர ரோஹனவும் மத்திய தூர ஓட்ட வீராங்கனை கயன்திகா அபேசேகரவும் கூட்டாக ஏந்திச் சென்றனர்.
எதிர்காலத்தில் இதயத்திற்கு இதயம் என்ற கருப்பொருளில் நடத்தப்படும் ஹங்ஸோ 2022 ஆசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப விழாவுக்கு முன்பதாக கலைஞர்களின் இசை நடனம் இடம்பெற்றது.
மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க நாள், சீனாவின் 24 சூரிய சொற் தொகுதிகளில் ஒன்றான இலையுதிர் உத்தராயணத்துடன் ஒத்துப் போகிறது. இது சீன கலாசாரத்தில் அறுவடை மற்றும் மீள் இணைவை குறிக்கிறது.
கோரோனா - 19 காரணமாக ஒரு வருடத்தால் பிற்போடப்பட்ட ஆசிய விளையாட்டு விழா, ஹங்ஸோ 2022 ஆசிய விளையாட்டு விழா என்ற அதே பெயரில் இவ் வருடம் அரங்கேறுகிறது.
ஹங்ஸோ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஆரம்ப விழாவில் வழமைபோல் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் அணிவகுப்பு, ஆசிய விளையாட்டு விழா தீபம் ஏற்றல் உட்பட 15 வகையான கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
ஆசிய விளையாட்டு விழா தீபம் டிஜிட்டல் முறையில் ஏற்றி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
ஆப்கானிஸ்தான் அணிவகுப்பை ஆரம்பித்து வைத்ததுடன் யேமனைத் தொடர்ந்து வரவேற்பு நாடான சீனா அணிவகுப்பை முடித்து வைத்தது.
அணி வகுப்பில் இலங்கை தேசிய கொடியை கோல்வ் வீரர் அநுர ரோஹனவும் மத்திய தூர ஓட்ட வீராங்கனை கயன்திகா அபேசேகரவும் கூட்டாக ஏந்திச் சென்றனர்.
விசேடமாக அமைக்கப்பட்ட இரண்டு வாயில்களில் ஒன்றின் வழியாக வீரர்கள் அரங்கினுள் நுழைந்து அணிவகுத்துச் சென்று அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட 5000 ஆசனங்களில் அமர்ந்து கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.
செப்டெம்பர் 23ஆம் திகதி முதல் அக்டோபர் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் 45 நாடுகளினதும் தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சேர்ந்த வீரர்களும் அதிகாரிகளும் தமது பதிவுகளைப் பூர்த்தி செய்துள்ள வீரர்கள் கிராமத்தில் தங்கியுள்ளதாக ஹங்ஸோ ஆசிய விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
எவ்வாறாயினும் இலங்கை குழுவினர் கட்டம் கட்டமாகவே ஹங்ஸோ செல்லவுள்ளனர். கிரிக்கெட் வீர, வீராங்கனைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளதுடன் ஏனைய வீர, வீராங்கனைகள் வீரர்கள் கிராமத்தில் தங்குவர் என இலங்கை குழுவின் தலைமை அதிகாரி நிஷான்த பியசேன தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து மகளிர் கிரிக்கெட் அணியினர், படகோட்டிகள், கடற்கரை கரப்பந்தாட்ட வீராங்கனைகள் ஏற்கனவே சீனா சென்று முன்னோடி போட்டிகளில் கலந்துகொண்டனர்.
படகோட்டம் மற்றும் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் பங்குபற்றிய இலங்கையர்கள் முதல் சுற்றுகளில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
மகளிர் இருபது 20 கிரிக்கெட் கால் இறுதிப் போட்டியில் தாய்லாந்தை 8 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அரை இறதியில் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.
19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர், வில்வித்தை, நீச்சல், பெட்மின்டன், குத்துச்சண்டை, சதுரங்கம், ஈ ஸ்போர்ட்ஸ், ஜூடோ, கராத்தே, ஸ்கொஷ், டய்க்வொண்டோ, பழுதூக்கல், மல்யுத்தம், வூஷு, படகோட்டம், துடுப்புப் படகோட்டம், கோல்வ், கடற்கரை கரப்பந்தாட்டம், றக்பி, கிரிக்கெட் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய 20 வகையான விளையாட்டுக்களில் இலங்கை சார்பாக 95 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.
இம்முறை ஹங்ஸோ ஆசிய விளையாட்டு விழாவில் சுமார் 12,500 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இவ்வளவு பெருந்தொகை பங்குபற்றுவது ஒரு சாதனையாகும்.
இந்தோனேசியாவில் 2018இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் சுமார் 11,300 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
ஆசிய ஒலிம்பிக் பேரவை வீரர்கள் செயற்குழு
ஆசிய ஒலிம்பிக் பேரவை வரலாற்றில் முதல் தடவையாக 10 பேர் கொண்ட வீரர்கள் செயற்குழு, வீரர்களின் வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளது.
இதுவரை 1100 வீரர்கள் வாக்களித்துள்ளதாகவும் இன்னும் 92 வீதமானவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆசிய ஒலிம்பிக் பேரவையின் பதில் பணிப்பாளர் நாயகம் விநோத் குமார் திவாரி தெரிவித்தார்.
உணவறையில் இருக்கும்போது வீரர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் எனவும் அக்டோபர் 6ஆம் திகதிவரை வாக்களிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM