(நெவில் அன்தனி)
சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹங்ஜவ் நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு விழா கோலாகல தொடக்கவிழா வைபவத்துடன் இன்று சனிக்கிழமை (23) ஆரம்பமாகிறது.
இன்று முதல் அக்டோபர் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,500 விளையாட்டு வீர, வீராங்கனைகள் தத்தமது அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி புகழேணியின் உச்சிக்கு செல்ல முயற்சிக்கவுள்ளனர்.
ஹங்ஜவ் 2022 ஆசிய விளையாட்டு விழா என பெயரிடப்பட்ட இவ் விளையாட்டு விழா கொவிட் - 19 காரணமாக ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டு அதே பெயரில் இந்த வருடம் நடத்தப்படுகிறது.
இவ் விளையாட்டு விழாவில் 48 வகையான விளையாட்டுக்களில் 61 அம்சங்களில் 481 தங்கப் பதக்கங்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
கிரிக்கெட், துடுப்புப் படகோட்டம் போன்ற சில விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இவ் வருட ஆசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர், வில்வித்தை, நீச்சல், பெட்மின்டன், குத்துச்சண்டை, சதுரங்கம், ஈ ஸ்போர்ட்ஸ், ஜூடோ, கராத்தே, ஸ்கொஷ், டைக்வொண்டோ, பளுதூக்குதல், மல்யுத்தம், வூஷு, படகோட்டம், துடுப்புப் படகோட்டம், கோல்வ், கடற்கரை கரப்பந்தாட்டம், றக்பி, கிரிக்கெட் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய 20 வகையான விளையாட்டுக்களில் இலங்கை சார்பாக 95 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.
ஆரம்ப விழா அணிவகுப்பில் இலங்கையின் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் பாக்கியம் கயனதிகா அபேரத்ன, கோல்வ் வீரர் அநுர ரோஹன ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
தென் கொரியாவில் நடைபெற்ற புசான் 2002 ஆசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அநுர ரோஹன, ஆசிய விளையாட்டு விழாவின் 72 வருட வரலாற்றில் அதிகூடிய வயதில் தேசிய கொடியை ஏந்திச் செல்பவர் என்ற சாதனையை நிலைநாட்டவுள்ளார். அவருக்கு தற்போது 52 வயதாகிறது.
மெய்வல்லுநர் அணியில் இடம்பெற்றவரும் ஆசிய பதக்கம் வெல்லக்கூடியவரும் என நம்பப்பட்ட யுப்புன் அபேகோன், உபாதையிலிருந்து பூரண குணம் அடையாததால் இலங்கை அணியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தார்.
எனினும் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வலல்ல ஏ. ரட்நாயக்க மத்திய கல்லூரி வீராங்கனை தருஷி கருணாரட்ன பதக்கம் வென்று கொடுப்பார் என பெரிதும் நம்பப்படுகிறது.
அத்துடன் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் இலங்கைக்கு பதக்கம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இது இவ்வாறிருக்க, இலங்கை சார்பாக பங்குபற்றும் 95 வீரர்களில் கோல்வ் விளையாட்டில் கொழும்பைச் சேர்ந்த என். தங்கராஜா, நுவரெலியாவைச் சேர்ந்த கே. பிரபாகரன் ஆகியோர் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். கோல்வ் அணியில் மிதுன் பெரேராவும் இடம்பெறுகிறார்.
இலங்கை அணியில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே சீனா சென்றுள்ளதுடன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க, மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
தாய்லாந்துக்கு எதிராக நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டி அரை இறுதிக்கு முன்னேறியது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இலங்கை சந்திக்கவுள்ளது.
அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள 1ஆவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
ஹங்ஜவ்வில் சீரற்ற காலநிலை காரணமாக 2 கால் இறுதிப் போட்டிகள் முழுமையாக கைவிடப்பட்டன. எனினும் தரவரிசை அடிப்படையில் பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான போட்டியும் இடைநடுவில் கைவிடப்பட்டது. எனினும் தரவரிசையின் பிரகாரம் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM