கொக்குதொடுவாய் விடயத்தில் கொலை செய்தவர்களே விசாரணைகளை மேற்கொண்டால் எப்படி நியாயம் கிடைக்கும் என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.தவராசா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் நேற்று வியாழக்கிழமை (21) போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,
இன்று (நேற்று 21) சர்வதேச சமாதான தினம். ஆனால், 30 ஆண்டுகளுக்கு மேலாக சமாதானம் அற்றவர்களாக இலங்கையிலே பெரும் பகுதியான தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய நாட்டில் யுத்த குற்றம் இடம்பெற்றது. அதில் சாட்சியாக நானே இருக்கின்றேன். கொத்துக் குண்டு விழுந்து எனது நண்பர்கள் இறந்ததையும், பொஸ்பரஸ் குண்டுகள் விழுந்து முகாம்கள் எரிந்ததையும் நான் நேரில் கண்டேன்.
சனல் 4ஐ சிங்கள அமைச்சர்கள் 'இது பொய்யான விடயம்' என கூறுகிறார்கள். ஆனால், கடந்த அறிக்கையின்போது இசைப்பிரியா கடலுக்குள் இருந்து எடுத்துவரப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டாள். பின்னர், அவள் சடலமாக கிடந்தாள். பாலசந்திரன் பிஸ்கட் சாப்பிட்டான், பின்னர் சடலமாக காணப்பட்டான். அதேபோல் றமேஸ் விசாரிக்கப்பட்டார், பின்னர் இறந்துவிட்டார். அதையும் நாங்கள் கண்டோம்.
இவ்வாறு கண் முன்னே கண்டவற்றை பொய் என கூறிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் அமைச்சர்கள் தொடக்கம் ஜனாதிபதி வரை எல்லோரும் பொய்களை கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
சனல் 4இல் வந்த குற்றங்களை விசாரிக்க வேண்டாம் என கூறிய சிங்கள தலைவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள்.
இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டபோது எங்களுக்கு எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு மட்டும் நியாயம் கோருவது எவ்வகையில் நியாயம்?
கொக்குதொடுவாயில் கிடக்கின்ற பிள்ளைகளின் சடலங்கள் கொலை செய்யப்பட்டு தாக்கப்பட்டதற்கான தடயங்கள், ஆடைகள் இருக்கின்றன. அதனை இலங்கையை சேர்ந்தவர்களே விசாரிக்கப் போகிறார்கள். கொலையை செய்தவர்களே விசாரணைகளை செய்தால் எந்த முறையில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும்.
நிச்சயமாக, எந்த குற்றவாளிகளையும் இவர்கள் விசாரணையில் கண்டுபிடிக்க மாட்டார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்திலும் குற்றவாளிகளுக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்பட மாட்டாது.
உள்ளூர் விசாரணை என்ற பெயரில் அனைத்து விடயங்களும் மழுங்கடிக்கப்பட்டு நீதியை குழி தோண்டி புதைத்துவிடுவார்கள். அதனால்தான் சர்வதேசத்தை கேட்டு நிற்கின்றோம்.
சர்வதேசம் நீதியானதாக, நியாயமானதாக இருந்தால் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என அழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM