சந்­திப்பு சாத்­தி­ய­மா­குமா?

18 Sep, 2023 | 05:30 PM
image

கபில்

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­திப்­ப­தற்கு, தமிழ்க்­ கட்­சிகள் தரப்பில் ஒரு பிர­யத்­தனம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­கி­றது.

இந்­தியப் பிர­த­ம­ருடன் சந்­திப்பு ஒன்றை ஒழுங்கு செய்து தரு­மாறு ஒன்­று­பட்டுக் கோரு­வோமா என, தமிழ்த் தேசிய கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வரன் கடிதம் எழு­தி­யி­ருக்­கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை வர் இரா.சம்­பந்தன், ரெலோ  தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், புளொட் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், தமிழ்த் தேசிய கட்­சியின் தலைவர் சிறி­காந்தா, ஈ.பி­.ஆர்.­எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகி­யோ­ருடன் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்­துக்கும் இது­தொ­டர்­பாக  சி.வி.விக்­னேஸ்­வரன் கடிதம் அனுப்­பி­யி­ருக்­கிறார்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­திப்­ப­தற்­காக விரைவில் புது­டெல்­லிக்குச் செல்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்ட காலத்தில் இருந்து, தமிழ்க்­கட்­சிகள் கூறி வந்­தன.

பின்னர், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி இந்­தியப் பிர­த­மரைச் சந்­திக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யி­டப்­பட்­டன.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜெய்­சங்கர் இலங்­கைக்கு வந்­தி­ருந்த போதும், இந்­தியப் பிர­த­மரைச் சந்­திப்­ப­தற்­கான ஒழுங்­குகள் குறித்து பேசப்­பட்­டன.

அப்­போது, இந்­தியப் பிர­த­மரைச் சந்­திப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை இந்­தியத் தூதுவர் கோபால் பாக்லே மேற்­கொள்வார் என்றும் கூறப்­பட்­டது.

தமி­ழக பா.ஜ.க. தலைவர் அண்­ணா­ம­லையின் யாழ்ப்­பாண பய­ணத்தின் போதும், மத்­திய இணை அமைச்சர் எல்.முரு­கனின் யாழ்ப்­பாண பய­ணத்தின் போதும் கூட, இந்­தியப் பிர­த­மரைச் சந்­தித்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை எடுத்­து­ரைக்க தமிழ்க் கட்­சி­க­ளுக்கு வாய்ப்பு ஏற்­ப­டுத்தித் தரப்­படும் என்று உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர்.

ஆனால், தமிழ்க் கட்­சி­க­ளுக்­கான புது­டெல்­லியின் கத­வுகள் இன்­னமும் திறக்­கப்­ப­டா­ம­லேயே இருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில் தான், இந்­தியப் பிர­த­மரைச் சந்­தித்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை எடுத்துக் கூறவும், 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தவும், வாய்ப்பு ஒன்றைக் கோரு­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­களில் சி.வி.விக்­னேஸ்­வரன் இறங்­கி­யி­ருக்­கிறார்.

அத்­துடன், இந்­தியப் பிர­த­ம­ருக்கு அனுப்­பு­வ­தற்­கான கடிதம் ஒன்றை தமிழ்க் கட்­சி­களின் சார்பில் வரை­வ­தற்கும் அவர் ஒப்­பு­தலைக் கோரி­யி­ருக்­கிறார்.

இந்­தியப் பிர­த­மரைத் தமிழ்க் கட்­சிகள் சந்­திப்­பது முக்­கி­ய­மான ஒரு விட­ய­மா­கவே இருக்கும். கடந்த காலங்­களில் இந்­தியப் பிர­தமர் மோடியை, தமிழ்க் கட்­சி­களின் தலை­வர்கள், கொழும்­பிலும், புது­டெல்­லி­யிலும் சந்­தித்துப் பேசி­யி­ருந்­தார்கள். 

ஆனால், அண்­மைக்­கா­லங்­களில் அத்­த­கைய சந்­திப்­புகள் ஏதும் நடக்­க­வில்லை. அதற்கு தமிழர் தரப்பில் இரண்டு முக்­கி­ய­மான கார­ணங்­களைக் குறிப்­பி­டலாம்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­திப்­ப­தற்­கான நேரம் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்டு அழைப்பு விடுக்­கப்­பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அந்தச் சந்­திப்பை பிற்­போ­டு­மாறு கோரி­யி­ருந்தார்.

உலக அரங்கில் இந்­தியா ஒரு முக்­கி­ய­மான நாடு. அந்த நாட்டின் தலை­வரைச் சந்­திப்­ப­தற்கு பல உலகத் தலை­வர்­களே காத்­தி­ருக்­கி­றார்கள். அவ்­வா­றான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அந்தச் சந்­திப்பை எந்த தடைகள், சிர­மங்­க­ளையும் தாண்டி முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும்.

அவரால் அதில் பங்­கேற்க முடி­யாது போயி­ருப்­பினும், ஏனைய தலை­வர்­க­ளை­யா­வது அனுப்பி வைத்­தி­ருக்க வேண்டும்.

சந்­திப்பை பிற்­போ­டு­மாறு இந்­திய தலை­வ­ரிடம், தமிழர் தரப்பில் கோரப்­பட்­டதை புது­டெல்லி விரும்­ப­வில்லை.

அடுத்து, இலங்­கையில் சீனாவைக் கையா­ளு­வ­தற்­கான ஒரு துருப்புச் சீட்­டா­கவே தமிழர் தரப்பை இந்­தியா பயன்­ப­டுத்தி வரு­கி­றது.

கோட்­டா­பய ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்த போது, இலங்கை அர­சாங்­கத்தைக் கையா­ளு­வதில் இந்­தி­யா­வுக்கு அதிக சிர­மங்கள் காணப்­பட்­டன.

சீனாவின் தலை­யீ­டுகள், செல்­வாக்­குகள் அதி­க­ரிப்­பதை தடுப்­பதில் இந்­தி­யா­வுக்கு நெருக்­க­டிகள் இருந்­தன. அத்­த­கைய தரு­ணத்தில் தமிழ்க் கட்­சி­களை புது­டெல்­லிக்கு அழைத்து, அழுத்­தங்­களைக் கொடுக்க முனைந்­தது புது­டெல்லி.

ஆனால், அதற்குப் பின்னர் நிலை­மை கள் மாறி விட்­டன. கோட்டா அரசு பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் சிக்கிக் கொண்ட வாய்ப்பை, இந்­திய அரசு தனக்குச் சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்­டது.

வர­லாற்றில் முன்­னொ­ரு­போதும் இல்­லாத வகையில் மிகக் குறு­கிய காலத்­துக்குள் 4 பில்­லியன் டொலர்­களை இலங்­கைக்கு வழங்கி, தனது பிராந்­திய மற்றும் பூகோள அர­சியல் செல்­வாக்கை உறு­திப்­ப­டுத்திக் கொண்­டது.

கோட்டா அர­சாங்­கத்தை கட்­டுக்குக் கொண்டு வந்­த­துடன், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­தையும், ஓர­ள­வுக்கு கட்­டுப்­ப­டுத்தக்கூடிய நிலையை அடைந்­தி­ருக்­கி­றது. இவ்­வா­றான நிலையில், தமிழ்க் கட்­சி­களை வைத்து சீனத் தலை­யீ­டு­களை தடுக்­கவோ, கொழும்பு அரசை கையா­ளவோ வேண்­டிய அவ­சி­யம் இப்­போது இந்­தி­யா­வுக்கு இல்லை.

எனவே, தமிழ்க் கட்­சி­களை சந்­திப்­புக்கு அழைப்­ப­தற்கு புது­டெல்லி அவ­சரம் காண்­பிக்­க­வில்லை. ஆனால், தமிழ்க் கட்­சிகள் இப்­போது இந்­தியப் பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்­புக்­காக அலையும் நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

கோட்டா அர­சாங்­கத்­தை­விட மோச­மாக, ரணில் அர­சாங்­கத்தில் மௌத்­த­ம­ய­மாக்கல் தீவி­ர­மாக இடம்­பெ­று­கி­றது. காணிகள் அப­க­ரிப்பு தொடர்­கி­றது.

13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தாக கூறிய ரணில் இப்­போது, பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் இல்லை என்­கிறார்.

இவ்­வா­றான நிலையில், 13ஐ முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்க் கட்­சிகள் கரு­து­கின்­றன.

ஆனால், 13ஐ நடை­மு­றைப்­ப­டுத்தும் விட­யத்தில் தமிழ்க் கட்­சி­க­ளுக்குள் ஒரு­மித்த நிலைப்­பாடு இல்லை.

அகில இலங்கை தமிழ்க் காங்­கிரஸ் 13ஆவது திருத்தச் சட்­டத்தை ஏற்­க­வில்லை. அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு கோரு­வ­தற்கும் தயா­ராக இல்லை.

அதே­வேளை, தமிழ் அரசுக் கட்­சியும் 13ஆவது திருத்தச் சட்ட அமு­லாக்­கத்தை மட்டும் வலி­யு­றுத்த தயா­ராக இல்லை. அது சமஷ்டி தீர்­வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்­பார்க்­கி­றது.

ஏற்­க­னவே ரணில் விக்­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பய­ணத்­துக்கு முன்னர், இந்­தியப் பிர­த­ம­ருக்கு கடிதம் அனுப்பும் விட­யத்தில் இதனால் முரண்­பாடு ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து, பல முனை­களில் இருந்து கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டன. இந்தச் சூழலில் தான், இந்­தியப் பிர­த­மரைச் சந்­திப்­ப­தற்­கான ஒழுங்­கு­களை மேற்­கொள்ளும் முயற்­சியில் சி.வி.விக்­னேஸ்­வரன் இறங்­கி­யி­ருக்­கிறார்.

ஏனைய கட்­சிகள் மற்றும் தலை­வர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில், அவர் அர­சி­யலில் இளவல். அவர், இந்த முன்­மு­யற்­சியில் இறங்­கு­வதை, அவரை விட அர­சி­யலில் மூத்­த­வர்கள், விரும்­பு­வார்­களா, அதனை அங்­கீ­க­ரிப்­பார்­களா என்­பது முதல் பிரச்­சினை.

அவ்­வாறு அங்­கீ­க­ரித்­தாலும், எல்லா தமிழ்க் கட்­சி­களும் அதற்கு இணங்கும் என எதிர்­பார்க்க முடி­யாது.

அதே­வேளை, புது­டெல்­லிக்குச் சென்று தான் சந்­திக்க வேண்டும் என்­ப­தில்லை, இந்­திய தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக அவர் தமி­ழகம் அல்­லது தென் மாநி­லங்­க­ளுக்கு வரும் போது சந்­திக்­கலாம் என்ற யோச­னையும் சி.வி.விக்­னேஸ்­வ­ரனால் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதுவும் சர்ச்­சைக்­கு­ரிய ஒரு விட­ய­மாக உள்­ளது.

அண்­மைக் ­கா­லத்தில் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையை பா.ஜ.க. தனது அர­சியல் தேவைக்­காக பயன்­ப­டுத்த முனை­கி­றது.

அண்­ணா­மலை மற்றும் எல்.முருகன் ஆகியோரின் இலங்கைப் பயணம் மற்றும் அதனை தொடர்ந்து வெளி­யிட்ட கருத்­துக்கள், தமி­ழர்கள் நர­சங்­காரம் செய்­யப்­பட்­டனர் என்ற உள்­துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து, கச்­ச­தீவு விவ­காரம் போன்­ற­வற்றில் வெளி­யி­டப்­படும் கருத்­துக்கள் என்­பன தமிழர் விவ­கா­ரத்தை பா.ஜ.க. தனது அர­சி­ய­லுக்­காக கையில் எடுக்­கி­றதா என்ற கேள்­வியை எழுப்பியிருந்தது.

தமிழகத்தில் காலூன்றுவதை இலக்காக கொண்டுள்ள பா.ஜ.க, இந்தியப் பிரதமரை தமிழகத்தில் சந்திப்பதற்கு, ஒழுங்குகளை செய்து தருவதாக தூது விட்டதா என்ற சந்தேகங்களும் உலாவுகின்றன.

இந்தியாவில் தேர்தல் நடக்கப் போகின்ற நிலையில் மத்திய அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கும். அதைவிட அவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படுமா, அதற்கான சூழல் தேர்தலுக்குப் பின்னர் இருக்குமா என்ற கேள்விகளும் உள்ளன.

தமிழ் மக்களின் அவசரத் தேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு இந்திய அரசியல் தரப்புகள் முற்பட்டால் அதனை தடுக்கக் கூடிய நிலையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இல்லை. அவ்வாறு அவர்களால் மறுக்கவும் முடியாது.

இவ்வாறான நிலையில், இந்தியப் பிரதமரைச் சந்திப்பது பிரச்சினைகளை தீர்க்கும் என்ற உத்தரவாதம் இருந்தால், மட்டுமே இந்தப் பயணம் தமிழர்களுக்குச் சாதகமாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right