வெள்ளையடிக்கிறாரா பேராயர்?

18 Sep, 2023 | 05:08 PM
image

என்.கண்ணன்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்ன­ணியில் இருந்­த­வர்கள், தவ­று­களை ஒப்­புக்­கொண்டு திருந்தி வந்தால், மன்­னிக்கத் தயார் என்று, திடீ­ரென அறி­வித்­தி­ருக்­கிறார் கத்­தோ­லிக்கத் திருச்­ச­பையின் பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித்.

சனல் 4 ஆவ­ணப்­படம் வெளி­யா­கிய பின்னர், ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்து சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பி பர­வ­லான கவ­னத்தை ஈர்த்­தவர் அவர்.

ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர், மைத்­திரி-–ரணில் அர­சாங்­கத்தை வெளிப்­ப­டை­யாக விமர்­சித்து, ராஜபக்ஷவினர் மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்கும் அவர் ஆத­ர­வ­ளித்­தி­ருந்தார்.

ஆனால், இந்த தாக்­கு­த­லுக்குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாத நிலையில், அவர் கோட்டா அர­சாங்­கத்­துடன் முரண்­படத் தொடங்­கினார்.

ராஜபக்ஷவி­ன­ருடன் நெருங்­கிய நட்பில் இருந்த பேராயர் மல்கம் ரஞ்சித், ஒரு­கட்­டத்தில் அவர்­க­ளுக்கு எதி­ரா­கவும் போராட்­டங்­களை முன்­னெ­டுக்க ஆரம்­பித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்கள், ஸஹ்ரான் ஹாஷிம் தலை­மை­யி­லான இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள் தான் என்­பது அவ­ருக்கும் தெரியும், முழு உல­கத்­துக்கும் தெரியும்.

ஆனால், அவர்கள் அந்த தாக்­கு­தலை நடத்­து­வ­தற்கு தூண்­டி­ய­வர்கள், ஒத்­து­ழைத்­த­வர்கள், பின்­புல ஆத­ரவு வழங்­கி­ய­வர்கள் யார், என்று கண்­டு­பி­டித்து தண்­டிக்க வேண்டும் என்­பதில் பேராயர் உறு­தி­யாக இருந்தார்.

யாரோ ஒருவர் பின்­பு­ல­மாக இருந்­தி­ருக்­கிறார் என்­பதை மட்டும் அவர் அறிந்­தி­ருந்தார். அதனை வைத்து தான் அவர்­களை பொறுப்­புக்­கூற வைக்க வேண்டும் என்று ராஜபக்ஷவி­ன­ருடன் முரண்­பட்டார்.

ஆனால், சனல் 4 ஆவ­ணப்­ப­ட­மா­னது, இந்த தாக்­குதல் ராஜபக்ஷவி­னரின் நலன் கருதி, கோட்­டா­பய ராஜபக்ஷவை அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரும் நோக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது எனக் கூறிய பின்னர் தான், அவர் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தினார்.

திடீ­ரென அவர் இப்­போது மன்­னிப்பு வழங்­கு­வது குறித்து பேசத் தொடங்­கி­யி­ருக்­கிறார்.

சர்­வ­தேச விசா­ரணை தேவை என்று வலி­யு­றுத்­தி­னாலும், குற்­ற­மி­ழைத்­த­வர்­களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர் கோர­வில்லை.

அதற்குப் பதி­லாக குற்­ற­மி­ழைத்­த­வர்­களை மன்­னிக்கத் தயார் என்­கிறார். குற்­ற­மி­ழைத்­த­வர்­களை மன்­னிப்­பதா, இல்­லையா என்று தீர்­மா­னிக்க வேண்­டிய கட்டம் இது­வல்ல. அதனை தீர்­மா­னிக்கக்கூடிய நிலையில் பேராயர் இருக்­கி­றாரா என்ற கேள்­வியும் உள்­ளது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் தனியே கத்­தோ­லிக்கத் தேவா­ல­யங்­களின் மீது மாத்­திரம் நடத்­தப்­பட்­டி­ருந்தால், பேராயர் குற்­ற­மி­ழைத்­த­வர்­களை மன்­னிக்கத் தயார் என்று கூறலாம். அதற்குக் கூட பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் ஒப்­புதல் தேவை.

கத்­தோ­லிக்க மத­கு­ரு­வாக, கர்­தி­னா­லாக, பாவ­மன்­னிப்புக் கோரு­ப­வரை அவர் மன்­னித்து விடலாம். ஆனால், பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கருத்து இங்கு முக்­கியம்.

அதை­விட, ஈஸ்டர் ஞாயி­றன்று மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்­திலும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இரண்டு நட்­சத்­திர விடு­தி­க­ளிலும் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. அங்கு கொல்­லப்­பட்­ட­வர்கள் பலர் கத்­தோ­லிக்­கர்கள் அல்லர்.

எனவே, ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­த­லுக்கு நீதியைக் கோரும் உரி­மையைக் கொண்­ட­வர்கள் யாருக்கும், குற்­ற­மி­ழைத்­த­வர்­களை மன்­னித்து விடும் அதி­காரம் இல்லை.

குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்கள் தமது தவ­று­களை ஒப்­புக்­கொண்டால் மன்­னித்துவிடலாம் என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

மன்­னிப்பு என்­பது உய­ரிய பண்பு என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

தமிழ் அர­சியல் கைதிகள் பலர் செய்த குற்­றத்தை மாத்­தி­ர­மன்றி, செய்­யாத குற்­றத்தைக் கூட செய்­த­தாக, நீதி­மன்­றத்தில் ஒப்­புக்­கொண்­டனர்.

15 இரு­பது ஆண்­டுகள் விளக்­க­ம­றி­யலில் இருந்த அவர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்க வேண்டும் என்று பேரா­யரோ அல்­லது வேறு மதத் தலை­வர்­களோ ஒரு­போதும் வலி­யு­றுத்­தி­ய­தில்லை.

அவர்­க­ளுக்கு ஒன்­றி­ரண்டு அல்ல, நூறு வரு­டங்கள் சிறைத்­தண்­டனை விதித்த போது கூட இவர்கள் அமை­தி­யாகத்தான் இருந்­தார்கள்.

தென் ஆபி­ரிக்­காவில் உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­குழு முன்­பாக, தவ­றி­ழைத்­த­வர்கள் உண்­மையை ஒப்­புக்­கொண்ட போது, மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது என்று உதா­ரணம் காட்­டி­யி­ருக்­கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்.

ஆனால், அந்த உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வுக்கு தலைமை தாங்­கிய பேராயர் டெஸ்மன் டுட்டு, வலி­க­ளுடன் தான், கறுப்­பின மக்கள் இணங்கி வாழு­கின்­றனர் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

பல குற்­ற­வா­ளிகள் தங்­களின் குற்­றத்தை ஒப்புக் கொள்ள மறுத்­தனர் என்றும், அவர்­களை எதுவும் செய்ய முடி­யாமல், அந்த விவ­கா­ரத்தை கைவிட்­ட­தா­கவும் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு கூறி­யி­ருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­த­லுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள், முதலில், தங்­களின் குற்­றங்­களை ஒப்­புக்­கொள்ள வேண்டும். தாங்கள் தவறு செய்து விட்­ட­தாக மனம் வருந்தி, மனம் திருந்தி வர வேண்டும்.

அதற்குப் பின்னர் தான், அவர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்­கு­வது குறித்து எவ­ருமே தீர்­மா­னிக்க முடியும்.

இது ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­த­லுக்கு மாத்­தி­ர­மன்றி, போர்க்­கால மீறல்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­க­ளுக்கும் கூட பொருத்­த­மா­னது தான்.

தேசிய ஒற்­று­மைக்­கான உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தற்கு முற்­படும் அர­சாங்கம், குற்­ற­வா­ளிகள் என இனங்­கா­ணு­வோரை நீதியின் முன் நிறுத்தும் எந்த ஏற்­பாட்­டையும் முன்­வைக்­க­வில்லை.

அவர்­களை விசேட நீதி­மன்­றத்தில் நிறுத்தும் வகையில் அந்தப் பொறி­முறை அமைந்­தி­ருக்க வேண்டும் என, ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் கூட வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­குழு வெறு­மனே குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றும் பொறி­மு­றை­யாக இருக்கும் என்­பதால் தான் பாதிக்­கப்­பட்­ட­வர்­களால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில், பேராயர் மல்கம் ரஞ்­சித்தும், குற்­றம்­சாட்­டப்­ப­டு­ப­வர்­களை காப்­பாற்­றவே மன்­னிப்பு வழங்கத் தயார் என்று அறி­வித்­துள்­ளாரா என்ற சந்­தேகம் எழு­வது இயல்பு தான்.

பேராயர் மல்கம் ரஞ்சித் இவ்­வா­றான கருத்தை வெளி­யிட்­டுள்ள நிலையில், ஈபி­ஆர்­எல்எவ் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் ஊட­கங்­களால் முதன்­மைப்­ப­டுத்­தப்­பட்­பட ஒரு விடயம் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் அமைந்­தி­ருக்­கி­றது.

நீண்ட அறிக்கை ஒன்றில் அவர், ஈஸ்டர்  ஞாயிறு தாக்­குதல் குறித்து சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்தி, இலங்கை அர­சாங்கம் தனது புனித தன்­மையை நிரூ­பிக்க வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

இந்த இடத்தில், இலங்கை அர­சாங்கம் எப்­போது புனித தன்­மையை கொண்­டி­ருந்­தது என்ற கேள்வி எழு­கி­றது.

தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள், இனக்­க­ல­வ­ரங்கள், இனப்­ப­டு­கொ­லைகள், நிகழ்ந்த போது, அதனை தூண்டி விட்ட அல்­லது செயற்­ப­டுத்­திய, அல்­லது அதற்கு கார­ண­மாக இருந்­தது இலங்கை அர­சாங்கம் தான். அவ்­வா­றான இலங்கை அர­சாங்­கத்­துக்கு சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் ஏன் புனிதர் பட்டம் கொடுக்க முனை­கிறார்?

இலங்கை அர­சாங்கம் எப்­போதோ புனித தன்­மையை இழந்து விட்­டது. அது இன­வாத சக­திக்குள் புரளும் ஒரு அர­சாங்கம். அது புனி­தத்­தன்­மையை ஒரு­போதும் எட்ட முடி­யாது.

தமி­ழர்­க­ளுக்கு நீதியை வழங்காத அரசாங்கத்தினால் எப்படி புனிதத் தன்மையை நிரூபிக்க முடியும்?

அரசியல்வாதிகளும் சரி, மதத் தலைவர்களும் சரி. தாங்களும் இருக்கிறோம் என்பதற்காக வெளிப்படுத்தும் அறிக்கைகள் பல, இவ்வாறான சர்ச்சைகளைத் தான் உருவாக்குகின்றன.

ஆனால், மன்னிப்பையோ புனிதத்தன்மையையோ பெறக்கூடிய நிலையில் குற்றமிழைத்தவர்கள் இல்லை.

ஏனென்றால், கடந்த  காலத்துக்காக வருந்தக் கூடிய நிலையில், கடந்தகால குற்றங்களை மனதார ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை.

இன்றைக்கும் மறுத்துரைப்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில், மன்னிப்பு, புனிதத்தன்மை பற்றிய கருத்துக்களை வலியுறுத்துவது குற்றவாளிகளுக்கு வெள்ளையடிக்கும் செயலாகத் தான் இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right