இலங்கையை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோக அதிர்வெண்கள் !

18 Sep, 2023 | 05:15 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்­கையில் மாத்­தி­ர­மின்றி சர்­வ­தேச ரீதி­யிலும் காலம் கால­மாக பேசப்­படும் ஒரு விட­ய­மாக சிறுவர் துஷ்­பி­ர­யோகம் காணப்­ப­டு­கி­றது. சிறுவர் உரி­மைகள், சிறுவர் பாது­­காப்பு என்­பன­வற்­றுக்­கென சட்­டங்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டாலும் இன்றும் நூறு வீதம் இவை தவிர்க்க முடி­யா­த­வை­யா­கவே காணப்­ப­டு­கின்­றன. நாடு முழு­வ­தி­லு­மி­ருந்து தினந்­தோறும் வெளி­யாகும் செய்­தி­களில் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் தொடர்ச்­சி­யாக பய­மு­றுத்தும் அதிர்­வெண்­ணுடன் காணப்­ப­டு­வதால், சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பான பர­வ­லான பிரச்­சி­னையை இலங்கை எதிர்­கொள்­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யாக தெரி­ய­வ­ரு­கி­றது. அதற்­க­மைய சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் பதி­வாகும் சம்­ப­வங்­களின் எண்­ணிக்­கையை கடந்த பத்து ஆண்­டு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் பாரி­ய­ளவில் வீழச்சி ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வில்லை.

இலங்­கையில் சிறு­வர்­களைக் கடத்தல், யாசகம் பெறச் செய்தல், தொழி­லுக்­க­மர்த்தல், கல்­வியை இடை­நி­றுத்தல், கொடு­மைப்­ப­டுத்தல், பார­தூ­ர­மான பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தல், பாலியல் சுரண்­ட­லுக்கு உட்­ப­டுத்தல், பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தல், சட்­ட­பூர்­வ­மான பாது­கா­வ­ல­ரி­ட­மி­ருந்து சிறு­வர்­களைக் கடத்தல், பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உட்­ப­டுத்தல், பாலியல் உற­வுக்கு தொடர்­பு­களைப் பெறு­வ­தற்கு தூதாக சிறு­வர்­களைப் பயன்­ப­டுத்தல், சிறு­வர்­களை கவ­னிக்­காமை, 16 வய­துக்கு குறைந்த சிறு­மியை விபச்­சா­ரத்­துக்கு பயன்­ப­டுத்தல் என பல்­வேறு வகை­யான சிறுவர் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் பதி­வா­கின்­றன.

கடந்த 10 ஆண்­டு­க­ளுக்கு முன்­னரும் சரி, இன்றும் சரி மேற்­கூ­றப்­பட்­டவை எண்­ணிக்கை அடிப்­ப­டையில் சற்று வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­னவே தவிர, முழு­மை­யாக குறை­வ­டை­ய­வில்லை. குறிப்­பாக, சிறு­வர்­களை கொடு­மைப்­ப­டுத்தல், துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தல், கல்­வியை இடைநிறுத்தல், கடத்தல், தொழி­லுக்கு உட்­ப­டுத்தல் என்­பன உயர் மட்­டத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றன. 

(கீழுள்ள விளக்­கப்­ப­டத்தில் இதனை அவ­தா­னிக்­கலாம்)

இவை வரு­டந்­தோறும் பதி­வாகும் அல்­லது முறைப்­பா­ட­ளிக்­கப்­ப­டு­வதால் வெளி­வரும் சம்­ப­வங்கள் குறித்த எண்­ணிக்கை மாத்­தி­ரமே. சமூ­கத்தின் மீதான அச்சம், அறி­யாமை, கலா­சாரம் உள்­ளிட்ட கார­ணி­களால் பதிவு செய்­யப்­படும் சம்­ப­வங்­களைவிட, மூன்று மடங்கு பதிவு செய்­யப்­ப­டாத சம்­ப­வங்கள் சமூ­கத்தில் உள்­ள­தாக சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­விக்­கின்றது.

கடந்த 10 ஆண்டுகளிலும் இவ்வாண்டிலும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஆயிரக்கணக்கான முறைப்­பாடுகள் பதிவாகியுள்ளன. (விளக்கப்படம் 2இல் இதனை அவதானிக்கலாம்) 

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கூற்றுப்படி இந்த எண்ணிக்கைகளில் 3 மடங்கு அதிக­மான சம்பவங்கள் பதிவாகியிருக்கக்கூடும்.

இலங்­கையில் சிறு­வர்­களைப் பாது­காக்க சட்டங்கள் உள்­ளன. அதற்­காக அமைச்­சு­களும் திணைக்­க­ளங்­களும் அதி­கா­ர­ ச­பை­களும் நிறு­வப்­பட்­டுள்­ளன. அவ்­வா­றி­ருந்தும் சிறு­வர்­களை ஏன் எம்மால் பாது­காக்க முடி­ய­வில்லை? 

அனைத்து சிறு­வர்­க­ளுக்கும் உயிர்­வாழ்­வ­தற்கும், பாது­காப்­பாக இருப்­ப­தற்கும், சுதந்­தி­ர­மாக இருப்­ப­தற்கும், போது­மான கவ­னிப்பைப் பெறு­வ­தற்கும், பாது­காப்­பான சூழலில் வள­ரு­வ­தற்கும், கல்­வியைப் பெறு­வ­தற்கும் உரிமை உண்டு. எனினும் அந்த உரி­மைகள் மீறப்­ப­டு­வதில் சமூகம் மற்றும் சட்டம் ஆகிய இரண்டும் தொடர்­பு­ப­டு­கின்­றன.

வறுமை, மது, போதைப்­பொருள், குடும்ப வன்­முறை மற்றும் பாலியல் விரக்தி போன்ற சமூகக் கார­ணிகள் சிறுவர் துஷ்­பி­ர­யோகக் குற்­றங்­க­ளுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­டை­ய­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன.  

இலங்­கையில் வரு­டாந்தம் சுமார் ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மான குடும்ப வன்­முறைச் சம்­ப­வங்கள் பதி­வா­கின்­றன. அதன் அடிப்­படையில் சிறு­வர்கள் மீதான பாலியல் துன்­புறுத்தல் அல்­லது துஷ்­பி­ர­யோகம் என்­பது சமூ­கத்தில் பொது­வான ஒரு விட­ய­மாக மாறிக்கொண்­டி­ருக்­கி­றது.

பாலியல் கல்­விக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­படாமை இதற்­காக பிர­தான கார­ண­மாக இருக்கக் கூடும். பாட­சாலை பாடத்­திட்­டத்தில் பாலியல் கல்வி நிச்­சயம் சேர்க்­கப்­பட வேண்­டிய ஒன்­றாகும். 

இனப்­பெ­ருக்க அமைப்பு மற்றும் பாலு­ணர்வு பற்­றிய விட­யங்­களை உள்­ள­டக்கி கடந்த 2019ஆம் ஆண்டு சுகா­தார அமைச்சு, சுகா­தார மேம்­பாட்டு பணி­யகம் மற்றும் கல்வி அமைச்சு என்­பன இணைந்து 'ஹதே அபே பொத' என்ற பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கித்­தன. ஆனால் அந்த புத்­த­கத்தின் உள்­ள­டக்­கங்கள் சிறு­வர்கள் மத்­தியில் பாலியல் தொடர்­பான முறை­யற்ற விட­யங்­களை ஊக்­கு­விப்­ப­தா­கவும், சிறு­வர்­களின் மனதைக் கெடுக்கும் வகை­யிலும் இருப்­ப­தாகக் கூறி, பௌத்த தேரர்கள் சிலர் கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­ட­மையால் அவை அனைத்தும் திரும்பப் பெறப்­பட்­டன.

வய­துக்கேற்ற, விரி­வான பாலியல் கல்வி என்­பது பதின்ம வய­தி­ன­ருக்கும், இளம் பரு­வத்­தி­ன­ருக்கும் மட்­டு­மின்றி சிறு­வர்­க­ளுக்கும் அவ­சி­ய­மாகும். ஊட­கங்­களும், கல்வி சார் அமைப்­பு­களும் இந்த விட­யத்தைப் பற்றி வெளிப்­ப­டை­யாகப் பேச வேண்டும். ஆனால் இவற்றை உதா­சீ­னப்­ப­டுத்­து­வதன் மூலம் எமது நாட்டின் கலாச்­சா­ரத்தின் பாரம்­ப­ரிய மற்றும் குறு­கிய மனப்­பான்மை ஒரு தேச­மாக இலங்­கை­யர்­களின் பின்­ன­டை­வுக்கு வழி­வ­குக்­கி­றது.

அதேபோன்று நாட்டில் நடை­மு­றை­யி­லுள்ள சிறுவர் பாது­காப்புச் சட்­டமும் குறை­பா­டு­டை­ய­தா­கவே காணப்­ப­டு­கி­றது. குறிப்­பாக, இலங்கையின் தண்­டனைச் சட்டக் கோவையில் ஆண் சிறார்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்கள் தொடர்­பாக பிரத்­தி­யே­க­மாக எந்த சட்­டமும் இல்லை. 

இலங்­கையின் தண்­டனைச் சட்டக் கோவையின்படி, 16 வய­துக்­குட்­பட்ட ஒரு சிறு­மி­யுடன் அவ­ளது சம்­ம­தத்­துடன் அல்­லது சம்­மதம் இல்­லாமல் பாலு­றவு கொள்­வது குற்­ற­மாகும். 

மேலும் திரு­மணம் அனு­ம­திக்­கப்­படும் வயது 18 ஆகும். ஆனால், 16 முதல் 18 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்கள் எதிர்­பா­ராது கர்ப்பம் தரித்தால், அவர்கள் திரு­மணம் செய்து கொள்­ளவோ அல்­லது கருக்­க­லைப்பு செய்­யவோ சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்கள் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டையில், எதிர்­பா­ராத பதின்ம வயதில் (Teenage Pragnancy) கர்ப்­ப­ம­டையும் சிறு­மி­யொ­ருவர் அல்­லது பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்தால் பாதிக்­கப்­பட்ட சிறு­மி­யொ­ருவர் அதனை ஏற்று வாழ நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கின்றார். இந்த சூழல் அவர்­க­ளது வாழ்வை முற்­றாக மாற்றிவிடும்.

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் சம்பந்தமாக சட்­டத்தில் காணப்­படும் ஏற்­பா­டுகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர ­ச­பையின் சட்ட அமு­லாக்கல் பிரிவின் பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி சஜீ­வனி அபேகோன் விளக்­க­ம­ளிக்­கையில்,

'பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளான சிறு­மி­யொ­ருவர் கர்ப்­ப­ம­டைந்தால் அவர்­க­ளுக்கு கருக்­க­லைப்­பினை மேற்­கொள்ள முடி­யாது. மாறாக பிர­ச­வத்தின் பின்னர் குழந்தை பாதிக்­கப்­பட்ட சிறு­மியின் பெற்றோர் அல்­லது சட்ட ரீதி­யான பாது­கா­லர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­படும். அத்­தோடு இவ்­வா­றா­ன­வற்­றுக்கு கார­ண­மா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு, தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

மற்­றொரு விடயம் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மாத்­தி­ர­மின்றி எந்­த­வொரு குற்றச் செயல் தொடர்­பிலும் கைது செய்­யப்­படும் சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு பிணையில் விடு­த­லை­யா­வ­தற்­கான உரிமை இருக்­கி­றது. 

பிணை சட்­டத்­துக்­க­மைய வழக்கு விசா­ர­ணைகள் நிறை­வ­டையும்வரை பிணை வழங்­காமல் சந்தே­க ­ந­பர்­களை தடுத்து வைத்­தி­ருக்க முடி­யாது. ஆனால் வழக்கு விசா­ர­ணை­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து, சட்­டமா அதிப­ருக்கு வழக்கு தொடர்­பான கோப்­புக்­களை சமர்ப்பித்து, அவரின் ஆலோ­ச­னைக்­க­மைய குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்ய முடியும். 

வழக்கு விசா­ர­ணை­களின் நிறைவில் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்டு சந்­தே­க­நபர் குற்­ற­வா­ளி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் அவ­ருக்கு சிறை தண்­டனை வழங்க முடியும். 

எனவே சந்­தே­க­ந­ப­ரொ­ருவர் பிணையில் விடு­தலை செய்­யப்­ப­டு­கின்றார் என்­ப­தற்­காக அவர் குற்­றங்­க­ளி­லி­ருந்து அல்­லது வழக்கு விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து விடு­த­லை­யா­கின்றார் என்று கருத முடி­யாது' எனத் தெரி­வித்தார்.

குறிப்­பாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களின் போது, அவற்­றுடன் தொடர்­பு­டைய நபர்கள் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­களின் நெருங்­கிய குடும்ப அங்­கத்­த­வ­ராகக் காணப்­படும் சந்­தர்ப்­பங்­களில் குடும்ப உற­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவை மறைக்­கப்­ப­டுகின்­றன. இதன் கார­ண­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் வெளி­வரும் சம்­ப­வங்­களின் எண்­ணிக்கை குறை­வாகக் காணப்­ப­டலாம். 

அதா­வது கடந்த 10 ஆண்­டுகள் நாட்டின் சகல மாவட்­டங்­க­ளிலும் பதி­வா­கி­யுள்ள சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பான புள்ளி விர­பங்­களை அவ­தா­னிக்கும் போது மேல் மாகாணம் உயர் மட்­டத்­திலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்கள் கீழ் மட்­டத்­திலும் காணப்­ப­டு­கின்­றன. (விளக்கப்படம் 3இல் இதனை அவதானிக்கலாம்)

இவை சனத்­தொகை அடிப்­ப­டையில் பதி­வா­கின்­ற­னவா அல்­லது உண்­மையில் இந்த பிர­தே­சங்­களில் மாத்­திரம் தான் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் பதி­வா­கின்­ற­னவா என்ற சந்­தேகம் காணப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் கேட்ட போது,  

'உண்­மையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம்­பெ­று­கின்ற போதிலும், அவை தொடர்பில் முறைப்­பா­டடு அளிக்­கப்­ப­டு­வ­தில்லை. காரணம் காலா­சா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவை தொடர்பில் அறி­விப்­ப­தற்கு வடக்கு, கிழக்கு மக்கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தில்லை. குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­தினர் இவ்­வா­றான சம்­ப­வங்­களை மறைக்கும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது' என சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­ச­பையின் சட்ட அமு­லாக்கல் பிரிவின் பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி சஜீ­வனி அபேகோன் தெரி­வித்தார்.

போதிய கல்வி அறி­வின்மை அல்­லது பெற்­றோரின் அறி­யா­மையும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்­கான கார­ணி­க­ளா­க­வுள்­ளன. சில சந்­தர்ப்­பங்­களில் ஒரு சிறுமி அல்­லது சிறுவன் பல சந்­தர்ப்­பங்­களில் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு ஆளாகும் நிலை­மையும் காணப்­ப­டு­கி­றது. ஆனால் விழிப்­பு­ணர்­வின்மை அல்­லது கல்­வி­யின்மை கார­ண­மாக பெற்றோர் அது தொடர்பில் புகா­ர­ளிப்­ப­தில்லை. அண்­மையில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பாட­சாலை ஆசி­ரியர் ஒரு­வரால் 7 வயது மாண­வி­யொ­ருவர் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, 7 மாதங்­களின் பின்னர் அது தொடர்­பான விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டமை இதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும்.

உட்­கட்­ட­மைப்பு வச­திகள் இன்­மையும் இதில் பிர­தா­ன­மாக தாக்கம் செலுத்­து­கி­றது. அதா­வது பின்­தங்­கிய கிரா­மங்­களில் வாழும் மக்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்து பிரச்­சினை, அருகில் பொலிஸ் நிலை­யங்கள் இன்மை உள்­ளிட்­ட­வற்றால் முறைப்­பா­ட­ளிக்க முடி­­யாத சூழல் காணப்­ப­டு­கி­றது. சிறுவர் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் குறை­வாக பதிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு இது போன்ற பிரச்­சி­னை­களும் முக்­கிய கார­ணி­க­ளா­க­வுள்­ளன.

பெரும்­பா­லான அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடு­களில் ஆண்­டு­தோறும் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்கள் தொடர்­பான கணக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­கி­றது. முறைப்­பா­ட­ளிக்­கப்­ப­டாத சம்­ப­வங்­களை கண்­ட­றி­வ­தற்கு இது ஒரு உத்­தி­யாகும். இந்த முறை­மையை இலங்­கை­யிலும் நடை­மு­றைப்­ப­டுத்­தலாம். இவ்­வா­றான சம்­ப­வங்­களை அடை­யாளம் காண்­ப­தற்­கான மற்­றொரு உத்தி சுய அறிக்கை கணக்­கெடுப்பு முறை­மை­யாகும். 'பொலிஸ்மா அதி­ப­ரிடம் கூறுங்கள்' மற்றும் 'பகி­டி­வதை தொடர்­பான முறைப்­பாடு' போன்ற திட்டங்களை இதற்கான உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம்.

தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை, இலங்கை பொலிஸ் மற்றும் பிற பொறுப்­பான அர­சாங்க திணைக்­க­ளங்­களில் இத்­த­கைய இல­கு­வாக அணு­கக்­கூ­டிய முறை­களை உரு­வாக்க முடியும். எனவே, பாதிக்­கப்­பட்­ட­வர்கள் எளி­தாகப் புகா­ர­ளிக்க முடியும். இது­போன்ற முறை­மை­களை அமுல்­ப­டுத்­தினால், மேலும் பல குற்ற சம்­ப­வங்கள் வெளிச்­சத்­துக்கு வரும்.

ஆரம்­பத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் ஒரு குறிப்­பிட்ட சமூக மட்­டத்தில், பொது­வாக குறைந்த வரு­மானம் பெறும் மற்றும் கல்வி அறி­வற்ற அல்­லது குறை­வான சமூ­கத்தில் அதி­க­ளவில் பதி­வாகி வரு­வ­தாகக் கூறப்­பட்­டது. ஆனால் இன்று அவ்­வாறு எந்த பாகு­பாடும் இன்றி சகல மட்­டத்­தி­லு­முள்ள சிறார்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கும் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றனர்.

இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு சிறார்கள் மத்­தி­யிலும், முதியோர் மத்­தி­யிலும் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது மாத்­திரம் தீர்­வா­காது. சிறுவர் பாது­காப்பு தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­­வ­தற்கு நாட்டில் தற்போது முறையான கட்டமைப்புக்களோ, வழிமுறைகளோ இல்லை. பாடசாலை மட்­டத்திலும் கிராம உத்தியோகத்தர் மட்­டங்களிலும் விழிப்­புணர்வு நிகழ்ச்சிகளை செயற்படுத்த வேண்­டும்.

எத்தனை வருடங்களாக இவை தொடர்­பில் பேசப்பட்டு வந்தாலும், சிறுவர் துஷ்பிர­யோகம் உள்ளிட்ட குற்றங்கள் ஒவ்வொரு நாளும் பதிவாகி வருகின்றதே தவிர, இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு இருப்பதாக தெரியவில்லை. மிக முக்கியமாக, சிறு­வர்­களின் பாதுகாப்பில் முதற்பாகம் குடும்பத்­துக்குரியதாகும். குடும்பத்துக்கு அப்பால் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாடசாலைகளினதும், சமூகத்தினதும் பொறுப்பாகும்.

இலங்கையின் குற்றவியல் சட்டக் கட்­ட­மைப்பில் பாரிய பின்னடைவு காணப்­படுகிறது. சில சந்தர்ப்பங்களில், பாலியல் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய பல ஆண்டுகள் செல்லும் நிலைமையும் காணப்­படுகிறது. இவ்வாறான காலதாமதங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது நீதித்துறையுடன் தொடர்புடைய துறைகளின் பொறுப்பாகும்.

மற்றுமொரு முக்கியமான விடயம் கைதி­களுக்கான புனர்வாழ்வளித்தலாகும். சிறு­வர் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடு­படும் சந்தேக நபர்களை மீண்டும் சமூகத்­தில் விடுவிக்கும் முன் அவர்களுக்கு உள­வி­யல் ரீதியாக மறுவாழ்வளிக்கப்பட வேண்டும். அவர்களை சிறையில் தடுத்து வைப்பதால் மாத்திரம் அவர்களின் மன­நிலை மாறாது. எனவே, இலங்கையின் எதிர்­கால சந்ததியினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொறுப்பான மற்றும் நம்பக­மான சேவையை வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் பொறுப்புக்கூறலுடன் செயற்படுவது மிகவும் முக்கியமானது.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right