வட, கிழக்கில் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ! - எச்­ச­ரிக்­கிறார் சூழ­லியல் நீதிக்கான நிலை­யத்தின் பணிப்­பாளர் ஹேமந்த விதா­னகே

18 Sep, 2023 | 02:31 PM
image

(நேர்காணல் - நா.தனுஜா)

அதி­க­ள­வான காப­னீ­ரொட்சைட் வெளி­யேற்றத்தின் விளை­வாக கடல்நீர் மட்டம் படிப்­ப­டி­யாக உயர்­வ­டைந்­து­வரும் நிலையில், 2050 – 2100ஆம் ஆண்­டுக்குள் யாழ்ப்­பாணம், மன்னார், புத்­தளம், கொழும்பு, காலி உள்­ள­டங்­க­லாக நாட்டின் பல பகு­தி­கள் நீரில் மூழ்­கக்­கூ­டிய அபாயம் காணப்­ப­டு­வ­தாக சூழ­லியல் நீதிக்­கான நிலை­யத்தின் பணிப்­பாளர் ஹேமந்த விதா­னகே எச்­ச­ரித்­துள்ளார்.

மொரோக்­கோவில் நில­ந­டுக்கம், லிபி­யாவில் வெள்­ளப்­பெ­ருக்கு என நாளுக்கு நாள் உல­க­ளா­விய ரீதியில் இயற்கை அனர்த்த சம்­ப­வங்கள் பதி­வா­கி­வரும் நிலையில், இவற்றின் பின்­ன­ணியில் உள்ள கால­நிலை மாற்றம், சூழ­லியல் பிரச்­சி­னைகள் மற்றும் அவற்­றுக்குக் கார­ண­மான மனித நடத்­தைகள் பற்­றிய பல கேள்­விகள் தொக்­கி  ­நிற்­கின்­றன.

அதன்­படி இலங்­கையில் நிலவும் சூழ­லியல் பிரச்­சி­னைகள், எதிர்­கா­லத்தில் நாடு முகங்­கொ­டுக்­கக்­கூ­டிய அனர்த்­தங்கள், அவற்­றுக்­கான தீர்­வுகள், மக்கள் நடத்­தையில் ஏற்­ப­ட­ வேண்­டிய மாற்றம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் சூழ­லியல் நீதிக்­கான நிலை­யத்தின் பணிப்­பாளர் ஹேமந்த விதா­னகே, 'வீர­கே­சரி' வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் பகிர்ந்­து­கொண்டார். அவ­ரு­ட­னான நேர்­கா­ணலின் முழு­மை­யான வடிவம் வரு­மாறு:-

கேள்வி : கடந்த காலங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் அண்­மைய சில வரு­டங்­களில் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அரங்­கிலும் சூழ­லியல் பிரச்­சி­னைகள் மற்றும் கால­நிலை மாற்றம் குறித்து அதிகம் பேசப்­ப­டு­கின்­றது. இந்த மாற்­றத்தை நீங்கள் எவ்­வாறு பார்க்­கி­றீர்கள்?

பதில் : 1992ஆம் ஆண்டு முதல் நாம் கால­நிலை மாற்றம் தொடர்பில் பேசு­கின்றோம். இது­கு­றித்து 1992 இல் 'கால­நிலை மாற்றம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் பிர­க­டனம்' உரு­வாக்­கப்­பட்­டது. பின்னர் 1997 இல் 'கியோட்டோ உடன்­ப­டிக்கை' கைச்­சாத்­தி­டப்­பட்­டது. அதன் நீட்­சி­யாக 'பாலி செயற்­திட்டம்' தயா­ரிக்­கப்­பட்­டது. 2012இல் கியோட்டோ உடன்­ப­டிக்கை முடி­வுக்கு வந்­த­போது எட்­டப்­ப­டாத இணக்­கப்­பாடு, 2015 இல் எட்­டப்­பட்­டது. இது 'பரிஸ் பிர­க­டனம்' என்று அழைக்­கப்­ப­டு­கின்­றது. இந்த இணக்­கப்­பாட்டின் பிர­காரம் இதில் கைச்­சாத்­திட்­டுள்ள நாடுகள் எதிர்­வரும் 2030 ஆம் ஆண்­டா­கும்­போது நிறை­வேற்ற வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்றிக் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­துடன், அனைத்து நாடு­களும் 'தேசிய பங்­க­ளிப்பு செயற்­திட்டம்' என்ற ஆவ­ணத்தைத் தயா­ரிக்க வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அதற்­க­மைய இலங்கை தயா­ரித்­துள்ள ஆவ­ணத்தின் பிர­காரம் 2030 ஆம் ஆண்­டா­கும்­போது வனப்­ப­கு­தியின் அளவை 32 சத­வீ­தத்­தினால் அதி­க­ரிக்க வேண்டும். காப­னீ­ரொட்சைட் வெளி­யேற்­றத்தை 20 சத­வீ­தத்­தினால் குறைக்­க­வேண்டும்.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் 2017 ஆம் ஆண்டு பதி­வான அதிக மழை­வீழ்ச்சி மற்றும் வெள்­ளப்­பெ­ருக்கு என்­பன இலங்­கையை வெகு­வாகப் பாதித்­தன. அவ்­வெள்­ளப்­பெ­ருக்­கினால் 275 பேர் உயி­ரி­ழந்­தனர். அவ்­வாண்டு உல­க­ளா­விய ரீதியில் கால­நிலை மாற்­றத்­தினால் பாதிக்­கப்­பட்ட நாடு­களின் பட்­டி­யலில் இலங்கை 2 ஆம் இடத்தில் இருந்­தது. 2018 ஆம் ஆண்டு கால­நிலை மாற்­றத்­தினால் பாதிக்­கப்­பட்ட நாடு­களின் பட்­டி­யலில் இலங்கை 6 ஆம் இடத்தில் இருந்­தது.

எது­ எவ்­வா­றெ­னினும் 2100 ஆம் ஆண்­ட­ளவில், அதா­வது இந்த நூற்­றாண்டின் முடிவில் உல­க­ளா­விய ரீதியில் சுமார் 700 – 750 மில்­லியன் பேர் கால­நிலை மாற்றம் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய அனர்த்­தங்­களின் விளை­வாக அக­தி­க­ளாவர் என்றும் எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்­ளது.

கால­நி­லையில் ஏற்­படும் எதிர்­மறை மாற்­றங்­க­ளுக்­கான முக்­கிய காரணம் காப­னீ­ரொட்சைட் வெளி­வி­டப்­ப­டு­த­லே­யாகும். நிலக்­கரி, வாக­னங்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் எரி­பொருள், கப்பல் மற்றும் விமா­னத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் எரி­பொருள் உள்­ளிட்ட அனைத்தும் அதி­க­ள­வான காப­னீ­ரொட்சைட் வெளி­யேற்­றத்­துக்குக் கார­ண­மாக அமை­கின்­றன. எனவே, இவற்றின் பயன்­பாட்டைக் குறைக்­க­வேண்டும். அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடுகள் 2030 ஆம் ஆண்­ட­ள­விலும், ஏனைய அனைத்து நாடு­களும் 2050 ஆம் ஆண்­ட­ள­விலும் இதனை பூச்­சிய மட்­டத்­துக்குக் கொண்­டு­வர வேண்டும்.

அதே­வேளை, திடீரென அதி­க­ரித்த மழை­வீழ்ச்சி மற்றும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­படல், 4 வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை மிகவும் உயர்­வான வெப்­ப­நிலை பதி­வாதல் (எல்­நினோ) என்­ப­னவும் கால­நிலை மாற்­றத்தின் பிறி­தொரு பக்­க­மாகும். எனினும் கால­நிலை மாற்­றத்தை சீர­மைப்­பதன் ஊடாக இத­னுடன் தொடர்­பு­பட்­ட­தாக எமது நாட்டில் நிலவும் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­காண­ மு­டி­யாது. கடந்த காலங்­களில் வனப்­ப­கு­திகள் மனி­தர்­களால் தீவைத்துக் கொளுத்­தப்­பட்­டன. விலங்­குகள் நீர் அருந்தும் பகு­தி­களில் விஷ­மி­டப்­பட்டு, அவ்­வி­லங்­குகள் கொல்­லப்­பட்­டன. இவற்­றுக்கும் கால­நிலை மாற்­றத்­துக்கும் எவ்­வித தொடர்­பு­மில்லை. ஆனால், இவ்­வா­றான நடத்­தைகள் சூழ­லியல் பிரச்­சி­னை­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளன.

கால­நி­லை­மாற்ற சவால்­களைக் கார­ணங்­காட்டி இலங்கை மக்கள் காடு­களைத் தீயிட்­டுக்­கொ­ளுத்­து­வ­தையும், யானை­களைக் கொல்­வ­தையும், உயி­ரியல் பல்­வ­கை­மையை சீர்­கு­லைப்­ப­தையும், குடி­நீரில் விஷம் கலந்து விலங்­கு­களைக் கொன்று அவற்றை விற்­பனை செய்­வ­தையும், வனப்­ப­கு­தி­களை அழித்து சோளப்­ப­யிர்ச்­செய்­கையில் ஈடு­ப­டு­வ­தையும், சூழ­லுக்கு விரோ­த­மான முறை­யற்ற விவ­சாய நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வ­தையும் ஒரு­போதும் நியா­யப்­ப­டுத்­தவோ, ஏற்­றுக்­கொள்­ளவோ முடி­யாது. அநேக சந்­தர்ப்­பங்­களில் சூழ­லுக்கு மனி­தர்­களால் இழைக்­கப்­படும் தீங்கை ஒதுக்­கி­வைத்­து­விட்டு, 'அனைத்துப் பாதிப்பும் கால­நிலை மாற்­றத்­தி­னால்தான் ஏற்­பட்­டது' என்று கூறிக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால், உண்­மையில் இச்­சூ­ழ­லியல் பிரச்­சி­னை­க­ளுக்கு சாதா­ரண விவ­சாயி தொடக்கம் நாட்டின் ஜனா­தி­பதி வரை அனை­வரும் பொறுப்­புக்­கூற­ வேண்டும்.

விவ­சா­யிகள் உள்­ள­டங்­க­லாக கிரா­மங்­களில் வாழும் மக்கள் ஏது­ம­றி­யா­த­வர்கள் என்றும், அவர்கள் சூழ­லுக்குத் தீங்­கி­ழைப்­ப­தில்லை என்றும் நான் முன்னர் நினைத்­துக்­கொண்­டி­ருந்தேன். ஆனால், அவர்கள் தான் பெரு­ம­ள­வான வனப்­ப­கு­தி­களை அழிக்­கி­றார்கள். விலங்­கு­களைக் கொல்­கி­றார்கள்.

கேள்வி : இருப்­பினும் சூழ­லுக்குப் பாரிய தீங்­கி­ழைக்கும் பெரு­மு­த­லா­ளி­களை விடுத்து, சாதா­ரண விவ­சா­யி­களை எந்த அடிப்­ப­டையில் குற்­றஞ்­சாட்­டு­கின்­றீர்கள்?

பதில் : எமது நாட்டில் தவ­றான விவ­சாய செயன்­மு­றையே பின்­பற்­றப்­பட்­டு­வ­ரு­கின்­றது. ஒட்­சிசன், உணவு, மருந்து, நிழல், தூய வளி என எமக்கு அவ­சி­ய­மான அனைத்­தையும் தரு­கின்ற வனப்­ப­கு­தி­களை அழித்து, அவற்றில் சோளத்தைப் பயி­ரிட்டு, அதன்­மூலம் குரு­வி­க­ளுக்கு அவ­சி­ய­மான உணவைத் தயா­ரிக்­கின்றோம். அவற்றை உண்­ப­தற்கு குரு­விகள் இருக்­கின்­றதா, உயி­ரியல் பல்­வ­கைமை பேணப்­ப­டு­கின்­றதா என்­பது பற்றி நாம் சிந்­திப்­ப­தில்லை.

காடு­களை அழித்து சோளத்தைப் பயி­ரிடும் விவ­சாயி, அவற்றை விற்­பனை செய்­வதன் மூலம் சொற்­ப­ள­வான இலா­பத்தைப் பெறு­கின்றார். ஆனால், அந்தக் காடுகள் அழிக்­கப்­ப­டா­விடின், அதன்­மூலம் வெளி­வ­ரு­கின்ற ஒட்­சிசன் நாட்டில் வாழும் 22 மில்­லியன் மக்­க­ளையும் சென்­ற­டையும். எனவே, பெரும்­பான்­மை­யானோர் அடை­யக்­கூ­டிய நன்­மையைப் புறந்­தள்ளி, மிகச்­சொற்­ப­ள­வானோர் மேற்­கொள்ளும் இந்­ந­ட­வ­டிக்­கைகள் எமது நாட்டில் நடை­மு­றை­யி­லுள்ள தவ­றான விவ­சாய செயன்­மு­றையின் பிர­தி­ப­லிப்­புக்­க­ளே­யாகும்.

இலங்­கையில் 21 சத­வீ­த­மான நிலப்­ப­ரப்பே வனப்­ப­கு­தி­க­ளாக உள்­ளன. இவற்றில் பெரும்­பான்­மை­யா­னவை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் சொற்­ப­ள­வா­னவை ஊவா மாகா­ணத்­திலும் உள்­ளன. ஏனைய பகு­தி­களில் உள்­ளவை மிகச்­சி­றிய காடு­க­ளாகும். எனவே மேற்­கூ­றப்­பட்ட பகு­தி­க­ளி­லுள்ள வனாந்­த­ரங்­களே காட­ழிப்பு என்ற அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

மேற்­கு­றிப்­பிட்ட 21 சத­வீ­த­மான வனப்­ப­கு­தியில் 17 சத­வீ­த­மா­ன­வையே அவற்றின் இயல்­பு­நிலை பாதிக்­கப்­ப­டாத காடு­க­ளாக இருக்­கின்­றன. அதே­போன்று நாட்டில் வரு­டாந்தம் சுமார் 8,000 ஹெக்­டேயர் காடுகள் அழிக்­கப்­ப­டு­கின்­றன.

கேள்வி : இந்த நிலையை சீர­மைப்­பது எப்­படி?

பதில் : வனப்­ப­கு­தி­களைப் பாது­காக்க வேண்­டு­மெனில் அவை­தொ­டர்பில் நிலவும் அச்­சு­றுத்­தலைக் குறைக்­க­வேண்டும். அந்த அச்­சு­றுத்­தல்­களில் விவ­சாயம் பிர­தா­ன­மா­ன­தாகும். இலங்­கையில் விவ­சா­யத்­து­றையை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்கம் பெரு­ம­ளவு நிதியைச் செல­வி­டு­கின்­றது. அவ்­வா­றி­ருப்­பினும் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் விவ­சா­யத்­து­றையின் பங்­க­ளிப்பு வெறு­மனே 8 சத­வீதம் மாத்­தி­ர­மே­யாகும்.

இந்­நி­லையில் நாம் சூழ­லுக்கு சாதகமான   விவ­சாய செயன்­மு­றையை நோக்கி நிலை­மாற்­ற­ம­டைய வேண்டும். இது முற்­று­மு­ழு­தாக சேதன உரத்தைப் பயன்­ப­டுத்தி மேற்­கொள்ளும் இயற்கை விவ­சாயம் அல்ல. மாறாக மண்ணில் உள்ள பக்­ரீ­றியா உள்­ளிட்ட நுண்­ணு­யிர்­களை உரம் மற்றும் கிரு­மி­நா­சினி போன்­ற­வற்றைப் பயன்­ப­டுத்தி அழிக்­காமல், அவற்றைப் பாது­காத்­த­வாறு மேற்­கொள்ளும் விவ­சா­யத்தைக் குறிக்­கின்­றது. அதே­போன்று பெரும் நிலப்­ப­ரப்பில் பயி­ரிட்டு, அதன்­மூலம் ஈட்­டு­கின்ற ஆதா­யத்தை சிறிய நிலப்­ப­ரப்பில் பயி­ரி­டு­வதன் ஊடாக ஈட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். இவ்­வா­றான பயிர்ச்­செய்கை முறைமை இந்­தி­யாவில் நடை­மு­றையில் உள்­ளது.

கேள்வி : நாட­ளா­விய ரீதியில் இம்­மு­றை­மையை அமுல்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வா­றான செயற்­திட்­டத்தை உங்­க­ளது அமைப்பின் ஊடாகத் தயா­ரித்து அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்­கலாம் அல்­லவா?

பதில் : இலங்கை உள்­ள­டங்­க­லாகப் பெரும்­பான்­மை­யான நாடு­களில் சிவில் சமூக அமைப்­புக்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு செவி­சாய்க்­கின்ற அர­சாங்­கங்கள் இல்லை. அர­சாங்கம் எமக்கு செவி­சாய்க்­கா­ததன் கார­ண­மா­கவே சூழ­லுக்குப் பாதிப்­பேற்­ப­டுத்­தக்­கூ­டிய அவர்­க­ளது செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நாம் நீதி­மன்­றத்தில் வழக்­குத்­தொ­டர்­கின்றோம். இது­வ­ரையில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக சுமார் 35 வழக்­கு­களைத் தாக்கல் செய்­தி­ருக்­கின்றோம்.

அதே­போன்று இலங்­கை­யி­லுள்ள விவ­சா­யத்­து­றைசார் நிபு­ணர்கள் கூறு­வதை அர­சி­யல்­வா­திகள் கேட்­ப­தில்லை. இலங்­கையில் மிகச்­சி­றந்த விவ­சா­யத்­துறை நிபு­ணர்கள் இருக்­கின்­றார்கள். அவர்கள் ஒன்­றி­ணைந்து நாட்­டுக்குப் பொருத்­த­மான விவ­சாய முறைமை தொடர்பில் செயற்­திட்­ட­மொன்றைத் தயா­ரிக்­க­வேண்டும்.

நாட்டின் யதார்த்­த­நி­லையை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நோக்­கு­கையில், நாம் ஐக்­கிய நாடுகள் சபை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பய­னு­று­தி­வாய்ந்த செயற்­திட்­டங்கள் குறித்துப் பேசி­னாலும் அவை சாதா­ரண விவ­சா­யி­களைச் சென்­ற­டை­வ­தற்கு 50 வரு­டங்கள் ஆகலாம்.

கேள்வி : சூழ­லோடு பின்­னிப்­பி­ணைந்த வாழ்­வியல் முறையைக் கொண்­டி­ருக்கும் விலங்­குகள் மனி­தர்­களின் செயற்­பா­டு­களால் இட­ருறும் பல சம்­ப­வங்கள் அண்­மையக் காலங்­களில் பதி­வா­கி­யுள்­ளன. விலங்­கு­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான உங்­க­ளது யோச­னைகள் என்ன?

பதில் :  யானை – மனித மோதலைத் தடுப்­ப­தற்­கான செயற்­திட்­ட­மொன்றைத் தயா­ரித்து வழங்­கு­மாறு நீதி­மன்றம் எம்­மிடம் கோரி­யி­ருக்­கின்­றது. இலங்­கையைப் பொறுத்­த­மட்டில் யானை –-மனித மோதல் உள்­ள­டங்­க­லாக விலங்­கு­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் இடையில் ஏற்­படும் அனைத்து மோதல்­க­ளுக்­கு­மான பிர­தான காரணம் அவற்றின் வாழி­டங்கள் மனி­தர்­களால் அழிக்­கப்­ப­டு­கின்­ற­மையே ஆகும். மனி­தர்­களால் தமக்­கான வீடு­களை அமைத்­துக்­கொள்­ள­மு­டிந்­தாலும், விலங்­கு­களால் அதனைச் செய்­ய­மு­டி­யாது. இயற்­கை­யாக வடி­வ­மைக்­கப்­பட்ட வாழி­டங்­களே விலங்­கு­களின் வீடு­க­ளாக இருக்­கின்­றன. எனவே விலங்­குகள் வாழும் வனாந்­த­ரங்கள் அழிக்­கப்­ப­டு­வதை நிறுத்­த­வேண்டும். மனி­தர்­களால் தன்­னிச்­சை­யாகக் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வனப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்து அவர்­களை (மனி­தர்­களை) வெளி­யேற்ற வேண்டும்.

நாட்டின் மொத்த நிலப்­ப­ரப்பில் குறைந்­த­பட்சம் மூன்றில் ஒரு பகு­தி­யை­யேனும் விலங்­கு­க­ளுக்கும், இயற்­கை­யுடன் தொடர்­பு­பட்ட நடத்­தை­க­ளுக்கும் (ஆறு, குளம், ஏரி­களைப் பேணல், மரங்­களை வளர்த்தல், உயி­ரியல் பல்­வ­கை­மையைப் பாது­காத்தல்) ஒதுக்க வேண்டும்.

தன்­னிச்­சை­யாகக் காணி­களைக் கைப்­பற்றல் போன்ற பொது­மக்­களின் தான்­தோன்­றித்­த­ன­மான செயற்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளித்­த­ வண்ணம் நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கு­மே­யானால், 2050 ஆம் ஆண்­டா­கும்­போது இலங்கை என்ற நாடே இருக்­காது. 2050 ஆம் ஆண்­டுக்கு முன்னர் நாட்டில் நீருக்­கான யுத்தம் ஏற்­படும். கடந்­த­கா­லத்தில் சம­னல வாவி­யி­லி­ருந்து உட­வ­ள­வைக்கு நீரை விடு­விக்­கு­மாறு உட­வ­ளவ மக்கள் போராட்­டங்­களில் ஈடு­பட்­டார்கள். நீரைப் பெறு­வதை இலக்­கா­கக்­கொண்ட இத்­த­கைய போராட்­டங்கள் நாள­டைவில் கைக­லப்­பாக மாறும். நாம் இன, மத ரீதியில் ஏற்­ப­டக்­கூ­டிய முரண்­பா­டு­களை மாத்­திரம் கருத்­திற்­கொள்­கின்­றோமே தவிர, குடிநீர் உள்­ளிட்ட வளங்கள் இன்­மையால் ஏற்­ப­டக்­கூ­டிய முரண்­பா­டுகள் குறித்துக் கவ­னம்­செ­லுத்­து­வ­தில்லை. உட­வ­ளவ நீருக்­கான போராட்­டத்தை ஒத்த போராட்­டங்கள் இன்­னமும் 10 -– 15 வரு­டங்­களில் நாட்டில் பல பாகங்­க­ளிலும் நடைபெறும்.

கேள்வி : தற்­போது வட, கிழக்கில் நீருக்­கான தட்­டுப்­பாடு நிலவும் அதே­வேளை, 2050 ஆம் ஆண்­டா­கும்­போது வட­ மா­கா­ணத்தை அண்­டிய கடல்நீர் மட்டம் உயரும் என்றும், அப்­ப­கு­திகள் நீரில் மூழ்கும் என்றும் எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது. இதன் உண்­மைத்­தன்மை குறித்து விளக்­க­மு­டி­யுமா?

பதில் : ஆம், இந்த எதிர்­வு­கூறல் உண்மை என்­ப­துடன் அதற்­கான வரை­ப­டங்­களும் உள்­ளன. கடல்நீர் மட்டம் உயர்­வ­டை­யும்­போது யாழ்ப்­பா­ணத்தில் சுமார் 18,000 - ,20,000 ஏக்கர் நிலப்­ப­ரப்பும், மன்­னாரில் 18,000 ஏக்கர் நிலப்­ப­ரப்பும், புத்­த­ளத்தில் ஏறக்­கு­றைய 18,000 ஏக்­கரை அண்­மித்த நிலப்­ப­ரப்பும், கொழும்பு மற்றும் காலி மாவட்­டத்தின் பல பகு­தி­களும்  நீரில் மூழ்­கக்­கூ­டிய அச்­சு­றுத்­தல்­நிலை காணப்­ப­டு­கின்­றது. தற்­போது கடல்நீர் மட்டம் 40 சென்­ரி­மீற்றர் அளவால் உயர்­வ­டைந்­தி­ருக்­கி­றது. எனவே இக்­க­டல்நீர் மட்டம் மேலும் உயர்­வ­டைந்து நாட்டின் பல பகு­திகள் மூழ்­கு­வ­தற்கு இந்­நூற்­றாண்டின் இறுதி வரை காத்­தி­ருக்கத் தேவை­யில்லை.

கேள்வி : இந்த அச்­சு­றுத்தல் நிலை­யி­லி­ருந்து எம்மைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்கு இப்­போ­தி­ருந்து முன்­னெ­டுக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கைகள் என்ன?

பதில் : இவ்­வி­ட­யத்தைப் பொறுத்­த­மட்டில் நாடு என்ற ரீதியில் தேசிய மட்­டத்தில் பல்­வேறு ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தாலும், உல­க­ளா­விய ரீதியில் அனைத்து நாடு­களும் அர்த்­த­முள்ள நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாமல் உண­ரத்­தக்க மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மல்ல. அவ்­வாறு உண­ரத்­தக்க மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உல­க­ளா­விய ரீதியில் காப­னீ­ரொட்சைட் வெளி­யேற்­றத்தை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும். இருப்­பினும் அதனைச் செய்­ய­மு­டி­யாது.

எனவே, இச்­சூழ்­நி­லைக்கு ஏற்­ற­வாறு எம்மைத் தக­வ­மைத்­துக்­கொள்­வதே எம்­மைப்­போன்ற சிறிய நாடு­க­ளுக்கு இருக்­கின்ற ஒரே­யொரு தெரி­வாகும். அதன்­படி எதிர்­கா­லத்தில் நீரில் மூழ்­கக்­கூ­டிய அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­வ­தாக எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்ள பகு­தி­களில் குடி­யே­று­வ­தையும், வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தையும், பயிர்ச்­செய்கை மேற்­கொள்­வ­தையும், வாழ்­வா­தாரத் தொழில்­களில் ஈடு­ப­டு­வ­தையும் தவிர்த்­துக்­கொள்­ள­வேண்டும். அதே­வேளை இனி­வரும் நாட்­களில் காடு­களை அழிப்­ப­தையும், குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு அண்­மை­யி­லுள்ள மரங்­களை வெட்­டு­வ­தையும் முற்­றாக நிறுத்­த­வேண்டும். சூழ­லுக்கு வெளி­வி­டப்­படும் காப­னீ­ரொட்­சைட்டை உள்­ளீர்த்து, ஒட்­சி­சனை வெளி­யேற்­று­வதன் மூலம் நாம் வாழும் புறச்­சூ­ழலை சுத்­தப்­ப­டுத்­து­கின்ற மாபெரும் ஆற்றல் மரங்­களைத் தவிர வேறெந்த இயந்­தி­ரத்­துக்கும் இல்லை.

கேள்வி : கொழும்பு துறை­முக நகர செயற்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்ட வேளையில், அதற்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் வழக்­குத்­தொ­டர்ந்­த­துடன் அதனால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்கள் குறித்து தொடர்ச்­சி­யாகப் பிர­சாரம் செய்­து­வந்த அமைப்பு என்ற ரீதியில், தற்­போது அத்­திட்டம் குறித்த பார்வை எத்­த­கை­ய­தாக இருக்­கின்­றது?

பதில் : உரி­ய­வா­றான சூழ­லியல் பகுப்பாய்வின்றி இச்­செ­யற்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­மையே எமது பிர­தான கரி­ச­னை­யாக இருந்­தது. ஆனால், அதனைக் கருத்­திற்­கொள்­ளாமல் கட­லுக்குள் மணல் நிரப்­பப்­பட்­டது. அதன் விளை­வான சூழ­லியல் பாதிப்பு ஏற்­பட்டு முடிந்­து­விட்­டது. தற்­போது அதனை மாற்­ற­மு­டி­யாது. மறு­புறம் சீனா­வினால் இலங்­கைக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது வெறு­மனே 1.5 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான செயற்­திட்டம் மாத்­தி­ரமே. இருப்­பினும் கடற்­ப­கு­தியை நிரப்­பு­வ­தற்­காக நாம் வழங்­கிய மணல் மற்றும் கற்­களின் பெறு­மதி 4.2 பில்­லியன் டொலர்கள் (கடற்­ப­கு­தியை மணல் இட்டு நிரப்பும் பணிகள் இடம்­பெற்­ற­போது நில­விய சந்தை விலை­களின் அடிப்­ப­டை­யி­லான கணிப்­பீடு).

இச்­செ­யற்­திட்­டத்­துக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இயற்கை வளங்கள் இந்­நாட்டு மக்­க­ளுக்குச் சொந்­த­மா­ன­வை­யாகும். அதே­வேளை துறை­முக நக­ரத்தில் ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­ட­வா­றான நிர்­மா­ணப்­ப­ணிகள் 2045 ஆம் ஆண்­டுக்குள் நிறை­வு­செய்­யப்­ப­ட­வேண்டும். இல்லாவிடின் இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமைக்கான நோக்கம் அடையப்படாமலே தோல்வியைத் தழுவவேண்டியிருக்கும். எனவே தற்போது துறைமுக நகர செயற்திட்டத்தினால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஒருபுறமிருக்க, 'வெள்ளை யானையாக' மாறியிருக்கும் இத்திட்டத்தினால் பொருளாதார ரீதியிலும் பெரும் இழப்பை சந்திக்கவேண்டிய நிலையில் இலங்கை இருக்கின்றது. அதேபோன்று இச்செயற்திட்டத்தின் விளைவாக ஏற்பட்ட இராஜதந்திர ரீதியான மோதலும் இலங்கைக்கான முக்கிய சவாலாகும்.

கேள்வி : கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்று புத்தளம், அருவக்காலு பகுதியில் கொட்டுகின்ற நடவடிக்கை, மக்கள் மத்தியிலிருந்து கிளம்பிய எதிர்ப்பின் பின்னர் நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள் இன்னமும் அகற்றப்படாமையினால் ஏற்படக்கூடிய சூழலியல் பாதிப்புக்களைக் குறைமதிப்பீடு செய்யமுடியாதல்லவா?

பதில் : ஆம், அதனால் அச்சூழல் மிகமோசமாகப் பாதிப்படையும். கொழும்பு குப்பைகள் முறையான திட்டமிடலின்றி புத்தளம், அருவக்காலு பகுதியில் கொட்டப்பட்டன. அக்குப்பைகள் இன்னமும் அங்கிருந்து அகற்றப்படாததன் விளைவாக அதிலுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் மண்ணுடன் சேரும். அதுமாத்திரமன்றி அது 103 மில்லியன் டொலர் பெறுமதியான செயற்திட்டமாகும். அரசாங்கம் குப்பைகளை அகற்றுவதற்கான முறையான திட்டத்தை வகுக்காததன் விளைவாக மீத்தொட்டமுல்ல, அருவக்காலு, கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் பாரிய சூழலியல் சேதம் ஏற்பட்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் சுமார் 350 இடங்கள் குப்பைகளைக் கொட்டுவதற்கான திறந்தவெளி இடங்களாக இருக்கின்றன. இவை சூழலியல் பாதிப்புக்களை மாத்திரமன்றி, அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுகாதாரப் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. எனவே  இவற்றைக் கருத்திற்கொண்டு குப்பைகள் உள்ளிட்ட கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான செயற்திட்டமொன்றை அரசாங்கம் வகுக்கவேண்டும். காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்களுக்கு முன்பதாக உயிரியல் பல்வகைமை சீர்குலைவினால் இலங்கை மிகமோசமாகப் பாதிக்கப்படும். இன்னும் 10 – 15 வருடங்களில் நாட்டிலுள்ள வனப் பகுதிகளில் விலங்குகள் இருக்காது. அதன்விளைவாக சூழல் சமநிலை சீர்குலையும். எனவே இவற்றால் ஏற்படக்கூடிய பேரழிவைக் கருத்திற்  கொண்டு இப்போதிருந்தே நாட்டுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right