இறந்தவர்களை தூற்றலாமா...?

12 Sep, 2023 | 02:04 PM
image

எம்மில் பலரும் தங்களுக்கு நெருக்கமான நண்பர்களின் மறைவிற்கு தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்துவிட்டு தனது பணியினை கவனிக்கத் தொடங்கி விடுவர். அவரின் நண்பரின் பிரேதத்திற்கு இறுதி சடங்குகள் நடைபெறும் போது உடன் இருக்க மாட்டார்கள். அதன்போது ஏற்படும் பல விடை தெரியாத சிக்கல்களுக்கு இவர்களுக்கு விடை தெரிந்திருந்தாலும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். மேலும் மரணம் அடைந்த நண்பரை பற்றி அவதூறும் பேசுவர். இவை அனைத்தும் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் கடுமையான மாந்தி தோஷத்தை ஏற்படுத்தும்.

இந்த மாந்தி தோஷம் ஏற்பட்டால்... குடும்பத்தில் அமைதி இருக்காது. நிம்மதியற்ற நிலை நீடித்துக் கொண்டே இருக்கும். வந்து கொண்டிருந்த வருவாய் குறைந்து, நாளாந்த கடமைகளுக்கு கூட வருவாய் போதாத நிலை ஏற்படக்கூடும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து சென்று சந்திக்க இயலாமல் வாழ்க்கையை நடத்தும் நிலை ஏற்படும்.

இதனால் எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் இறந்து விட்டால்... அவரைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தும், அவப் பெயரை ஏற்படுத்தும் அளவிற்கு பேசக்கூடாது என வலியுறுத்தி இருக்கிறார்கள்.

உடனே எம்மில் சிலர் தங்கள் செய்த தவறுகளைப் பற்றி சுய பரிசோதனை செய்து மனம் வருந்தாமல்.. இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமே? அதையும் சொல்லுங்கள் என மனதில் கேட்பர்.‌

இதற்கும் பரிகாரம் உண்டு. மாந்தி என்பது சனி பகவானுடன் தொடர்புடையது என்பதாலும், அவருடைய வெட்டுப்பட்ட காலிலிருந்து உதித்தவர் என்பதாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பாக வலது அல்லது இடது கால்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு... அவர்கள் எதிர்பார்க்கும் உதவிகளை தாராளமாக செய்யுங்கள். அவர்கள் ஏதேனும் உபகரணங்களை கேட்டால், அதனை வாங்கிக் கொடுக்கலாம். குறிப்பாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள்... திருமண தடையால் அவதிப்படுபவர்கள்... இத்தகைய பரிகாரத்தை மேற்கொள்ளும் போது உங்களின் மாந்தி தோஷம் விலகி நன்மை பயக்கும்.

வேறு சிலர் மாந்தி தோஷம் எமக்கு இருக்கிறது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? என கேட்பர். உங்களது ஜாதகத்தை ஜோதிட நிபுணர் ஒருவரிடம் காண்பித்து மாந்தி தோஷம் இருக்கிறதா? என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். லக்னத்திலிருந்து எந்தெந்த பாவகத்தில் மாந்தி இருக்கிறாரோ...! அதற்கேற்ற வகையில் மாந்தியின் தோஷமும், கெடு பலன்களும் இருக்கும். அதனைத் தவிர்க்க ஜோதிட நிபுணர்கள் பிரத்யேக ஆலயங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதை பரிகாரமாக பரிந்துரைப்பர். அந்த ஆலயங்களுக்கு சென்று முறையாக பூஜை, அபிஷேகங்கள் செய்து மாந்தி தோஷத்தை குறைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு எனும் இடத்தில் அமையப்பெற்றிருக்கும் ஸ்ரீ வடாரண்யஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள காளி தேவிக்கும், மாந்தி வழிபட்ட லிங்கத்திற்கும் பூஜைகள் செய்தாலும் மாந்தி தோஷம் விலகும். இதனை அமாவாசை அல்லது சனிக்கிழமைகளில் மேற்கொள்ளும்போது மாந்தி தோஷம் முழுமையாக விலகுகிறது என அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் எடுத்துரைக்கிறார்கள். மேலும் உங்களது ஜாதக கட்டத்தில் மாந்தி எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறாரோ...! அந்த நட்சத்திர தினத்தில் சூரிய பகவானை வழிபட்டு, பின் இந்த ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வணங்கினாலும் மாந்தி தோஷம் விலகும் என்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள்.

இறந்தவர்களை ஒருபோதும் தூற்றாதீர்கள். நீங்கள் சாலையில் பயணிக்கும் போது எதிரே சவ ஊர்வலம் வந்தால்..., 15 வினாடி வரை  அந்த ஆத்மா சாந்தியடைய நின்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இவைகளை செய்தாலே மாந்தி தோஷம் உங்களை தீண்டாது என்பதனையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்