எம்.எஸ்.தீன்
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு வகையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. அதன் பாதிப்பிலிருந்து இன்னும் முஸ்லிம் சமூகம் முழுமையாக விடுதலையாகவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் இன்னமும் சிறையில் வாடுகின்றார்கள். வழக்குகளோடும் பலர் நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தாக்குதல்களை முஸ்லிம் குழுவொன்று மேற்கொண்டதனால்தான் முஸ்லிம்களின் மீதும், அவர்களின் சொத்துக்களின் மீதும், உயிர்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம் சமூகத்தை தேசத் துரோகிகள் போன்று சித்தரித்தார்கள். ஆயினும் தாக்குதல்களின் நோக்கத்தை உடனடியாக புரிந்து கொள்ள முடியவில்லை.
இத்தாக்குதல்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்காகவே மேற்கொள்ளப்பட்டது என்று பலராலும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. ஆனால் அதற்கான எந்தவொரு ஆதாரங்களையும் வெளியிடவில்லை. அதனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் வெறும் பேச்சுக்களாகவே இருந்தன.
ராஜபக்ஷர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட போதெல்லாம் அதனை அரசாங்கமும், ராஜபக்ஷர்களும், அவர்களின் அரசியல் அரிச்சுவடியை பின்பற்றுவோரும் மறுத்துக் கொண்டே வந்தனர்.
இருப்பினும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அடையாளம் காட்டும் விசாரணைகளில் தேக்கநிலையே தொடர்ந்து கொண்டிருந்தது.
இதனிடையே இத்தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்று கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார். முஸ்லிம்கள் தரப்பிலும் இத்தகைய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசாங்கம் இக்கோரிக்கைகளை காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதுமாத்திரமின்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய சூடும் தணிந்து கொண்டிருந்தது.
இப்போது இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் (பிள்ளையான்) நெருங்கிய சகபாடியாகவும், அவரின் முக்கிய பொறுப்புக்களை வகித்தவருமான ஹன்சிர் அஸாத் மௌலானா உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்களை சனல் 4 ஊடாக வெளியிட்டுள்ளார். இதனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் சூடு பிடித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்களின் பெயர்களையும், அது திட்டமிடப்பட்டதன் நோக்கத்தையும் சில ஆதாரங்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளார். இவரது குற்றச்சாட்டுக்களில் புதிதாக எதனையும் குறிப்பிட்டவில்லை.
இத்தாக்குதல்கள் குறித்து ஏற்கெனவே உள்ள சந்தேகங்களையே இவரும் வெளியிட்டுள்ளார்.
அத்தோடு இத்தாக்குதல்களில் தொடர்புபட்டுள்ளோர் குறித்தும் தனக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே முதற் தடவையாக, தாக்குதல்களுடன் இவர்களுக்கு சம்பந்தம் உள்ளதென்று பெயர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள நிலையில் ஒரு சிலர் இது பற்றிய விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் விமர்சனங்கள் பக்கச் சார்புடையதாகவும் அமைந்துள்ளன. ஒரு சிலர் இந்த தாக்குதல்களுடன் ராஜபக் ஷர்களுக்கு தொடர்புள்ளதென்று வலுப்படுத்த முனைவதையும், இன்னும் ஒரு சிலர் இவை பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்றும் அரசியல் தேவைக்காக முன் வைக்கப்படுகின்றன என்றும் ராஜபக்ஷர்களுக்கு எந்தவொரு சம்பந்தமுமில்லை என்றும் கூறி வருகின்றனர்.
அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டுக்களை எடுத்தவுடனேயே ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் உண்மையை மறைப்பதற்கு துணை செய்வதாகவே அமையும். அவரினால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகள் கிடப்பில் உள்ளன. ஆதலால், முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதே இப்போதைய தேவையாகும்.
இந்த நாட்டில் பல அரசியல் படுகொலைகளும், மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளன. அவை பற்றிய விசாரணைகள் நீண்ட காலமாக நடைபெற்றுள்ளன.
ஆனால், உண்மைகள் வெளியாகவில்லை. இவர்கள்தான் கொலையாளிகள் என்று அடையாளங் காட்டப்படவில்லை. அந்தப் பட்டியலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களும் அமைந்து விடக் கூடாது.
இத்தாக்குதல்களில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட சுமார் 250 இற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இத்தாக்குதல்கள் விவகாரத்தில் பாதுகாப்பு தரப்பினர் அசமந்தமாக செயற்பட்டுள்ளார்கள். இத்தகையதொரு தாக்குதல்கள் நடைபெறவுள்ளதென்று இந்திய புலனாய்வுத்துறை இலங்கைக்கு அறிவித்த போதிலும் பாதுகாப்பு தரப்பினர் அதனை தடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அசட்டையாக நடந்து கொண்டார்கள். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காணப்படும் மந்தநிலை , யார் சூத்திரதாரி என்பதை கண்டு பிடிக்காமை போன்றன பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
ஆதலால், அஸாத் மௌலானாவின் தகவல்கள் குறித்து உடனடி விசாரணைகள் நடைபெற வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று காலத்தை கடத்தும் யுக்தியை அரசாங்கம் கைவிட வேண்டும்.
இத்தகையதொரு தாக்குதல் நடைபெறவுள்ளதென்று முன் கூட்டியே தெரிந்து கொண்டிருந்த அஸாத் மௌலானா அது பற்றி ஜம்மிய்யத்துல் உலமா சபையிடமாவது தெரிவித்திருக்க வேண்டும். தாக்குதல்களை தடுத்திருக்க முடியும். ஆதலால், முஸ்லிம் சமூகத்தின் முதல் துரோகி அஸாத் மௌலானா என்று பாராளுமன்ற உறுப்பினர் முஸரப் முதுநபீன் தெரிவித்துள்ளார். அப்படியாக இருந்தால் அஸாத் மௌலானாவின் தகவல்களை ஒரு வகையில் ஏற்றுக் கொள்வதாகவும் கருதப்படுகின்றது.
உண்மையை வெளியிட்டிருந்தால் தாக்குதலை தடுத்து இருக்கலாம் என்பதே அவரின் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆதலால் அவர் அஸாத் மௌலானாவின் கருத்துக்களை மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றார் எனலாம்.
மறுபுறத்தில் தாக்குதல்கள் நடைபெறவுள்ளதென்று இந்தியப் புலனாய்வுத் துறை இலங்கைக்கு தகவல்களை தெரிவித்த போதிலும் அதனை கவனத்திற் கொள்ளவில்லை என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்.
ஆகவே, அஸாத் மௌலானாவின் கருத்துக்களை முற்றாக நிராகரிக்காது அவை பற்றி விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதே உண்மையை கண்டறிவதற்குரிய வழியாகும்.
இதனிடையே அஸாத் மௌலானாவின் தகவல்களின் பின்னர் ஆளும் தரப்பினரிடையே கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன.
அவர்களிடையே இத்தகவல்கள் கலக்த்தை ஏற்படுத்தியுள்ளதாகவே இருக்கின்றது. அஸாத் மௌலானாவின் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற வேண்டுமென்றும், அதற்கு சர்வதேச குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்றும் கருத்துக்கள் சூடுபறந்து கொண்டிருக்கையில், அமைச்சர்கள் மனுஷ நாணயக்கார, பந்துல குணவர்தன ஆகியோர் முரண்பட்ட கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இக்காணொளி தொடர்பில் கவனம் செலுத்தினோம். எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதே வேளை, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சனல் 4 காணொளி குறித்து அமைச்சரவையில் ஆராயவில்லை என்று தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அமைச்சர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள் கூட அரசியல் பின்னணியைக் கொண்டதாகவே இருக்கின்றன.
மறுபுறத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரக்காந்தன் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ஆகியோர் மறுத்துள்ளனர்.
ஆகவே, சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச குழுவொன்றை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கனவே சனல் 4 இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக வெளியிட்ட காணொளி இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேறுவதற்கு காரணமாக இருந்துள்ளது.
ஆதலால், அஸாத் மௌலானாவினதும், இன்னும் இரண்டு அதிகாரிகளினதும் தகவல்களை உள்ளடக்கிய காணொளியின் எதிர்விளைவுகளை மனதில் கொண்டு உண்மையை அறிந்து கொள்வதற்குரிய பூரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுவே நாட்டின் நலனின் மீதான தீர்மானமாகவும் இருக்கும் என்பதைப் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனிநபர்களை காப்பாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது நாட்டைக் காப்பாற்றும் நடவடிக்கையே அவசியமாகும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM