போர்க்குற்றங்களுக்கு மௌனம் ; ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை?

Published By: Vishnu

10 Sep, 2023 | 05:57 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

சனல் – 4 தொலைக்­காட்சி அலை­வ­ரி­சையின் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பான ஆவ­ணப்­படம் குறித்த விமர்­ச­னங்­களில், முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகி ­யோரின் விளக்­கங்கள் முக்­கி­ய­மா­னவை. 

2005 ஆம் ஆண்­டி­லி­ருந்து ராஜபக்ஷ குடும்­பத்­தி­னரின் பாரம்­ப­ரி­யத்தை அழிப்­பதை இலக்­காகக் கொண்ட முயற்­சியின் ஒரு தொடர்ச்­சியே சனல்–4 இன் சமீ­பத்­திய ஆவ­ணப்­படம் என கோட்­டா­பய  ஒரு நீண்ட விளக்­கத்தை வழங்­கி­யுள்ளார்.

இதற்கு முன்னர் இதே அலை­வ­ரிசை 2011 ஆம் ஆண்டு இலங்­கையின் கொலைக்­க­ளங்கள் என்ற ஆவ­ணப்­ப­டத்தை வெளி­யிட்ட போது அவ­ரது கருத்து வேறு­மா­தி­ரி­யா­ன­தா­கவே இருந்­தது. அதே போன்று தேர்­த­லையும் அர­சி­ய­லையும் மைய­மாக வைத்து இந்த விவ­காரம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மானால் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு கார­ண­மான உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரியை எப்­போதும் கண்டு பிடிக்க முடி­யாது என நாமல் ராஜபக்ஷ கடந்த  6 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

ராஜபக்ஷ குடும்­பத்­தி­னரின் குடும்ப பாரம்­ப­ரி­யத்தை அழிப்­ப­திலும் இதை அர­சி­யல்­ம­ய­மாக்­கு­வ­திலும் சனல்– 4 அலை­வ­ரி­சைக்கு என்ன இலாபம்?  புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள், புலி­க­ளுக்கு ஆத­ர­வா­ன­வர்கள் பணம் கொடுத்து இந்த அலை­வ­ரி­சையை இயக்­கு­கின்­றார்கள்        என்ற புதிய விளக்கம் ராஜபக்ஷ முகாம்­க­ளி­லி­ருந்து வரு­வ­தற்கு முன்னர் நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷ அதை இல­கு­வாக்கி விட்டார். இந்த அலை­வ­ரிசை புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்கு ஆத­ர­வா­னது என்று அவரே கருத்து வெளி­யிட்டு விட்டார். அது உண்­மையா?

பிரித்­தா­னி­யாவை தள­மாகக் கொண்டு இயங்கும் சனல் –4 (Channel–4) தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யா­னது கடந்த 41 வரு­டங்­க­ளாக இயங்கி வரு­கின்­றது. இதன் சகோ­தர அலை­வ­ரி­சை­க­ளாக பத்து அலை­வ­ரி­சைகள் இயங்கி வரு­கின்­றன. Channel Four Television Corporation  என்ற நிறு­வனம் மேற்­படி அலை­வ­ரி­சை­களின் உரிமத்தைக் கொண்­டுள்­ளது.

ஆரம்ப கால­கட்­டங்­களில் இதன் தலை­மைத்­து­வத்தை மிகப் பிர­ப­ல­மா­ன­வர்கள் அலங்­க­ரித்­துள்­ளனர். சனல் –4 அ­லை­வ­ரி­சையின் இரண்­டா­வது தலை­வ­ராக 1987–1992 கால­கட்­டத்தில் இருந்­தவர் பிர­பல ஹொலிவூட் இயக்­குநர், நடிகர், தயா­ரிப்­பா­ள­ரான ரிச்சர்ட் அட்­டன்­பரோ. இவரே காந்தி (1982) படத்தை தயா­ரித்து இயக்­கி­யவர். இதற்­காக சிறந்த இயக்­கு­ந­ருக்­கு­ரிய ஒஸ்கார் விருதை அவர் பெற்­றது மாத்­தி­ர­மல்­லாது சிறந்த திரைப்­ப­டத்­துக்­கு­ரிய விரு­தையும் காந்தி வென்­றது.

ஆகவே, சனல்–4 தொலைக்­காட்­சிக்கு ஒரு வர­லாறு உள்­ளது. எந்த நாட்­டையும் நாட்டின் தலை­வ­ரையும் தனிப்­பட்ட ரீதி­யாக தனது அலை­வ­ரி­சை­யி­னூ­டாக தாக்­கு­வ­தற்கு அதற்கு எந்த அவ­சி­ய­மு­மில்லை. ஆனால், இலங்கை தொடர்­பாக இரண்டு ஆவ­ணப்­ப­டங்­களை வெளி­யிட்­டதன் மூலம் அது சர்­வ­தேச கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. முத­லா­வது 2011 ஆம் ஆண்டு அது வெளி­யிட்ட இலங்­கையின் கொலைக்­க­ளங்கள் (Sri Lanka’s Killings Field) அடுத்­த­தாக தற்­போது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஈஸ்டர் குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்­களின் சூத்­தி­ர­தா­ரி­களை அம்­ப­லப்­ப­டுத்தும் ஆவ­ணப்­படம்.

இந்த இரண்டு ஆவணத் தொகுப்­பு­க­ளுமே இலங்­கையில் இடம்­பெற்ற மிக மோச­மான  போர்க்­குற்­றங்கள், மனித படு­கொ­லை­க­ளகள் தொடர்­பா­னவை.  இரண்டு சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் ராஜபக்ஷ சகோ­த­ரர்கள் மற்றும் அவர்கள் சார்­பாக இயங்­கிய இரா­ணுவ அதி­கா­ரிகள், அர­சியல் பிர­மு­கர்­களின் பெயர்­களே அடி­ப­டு­கின்­றன.

போர்க்­குற்றச் சம்­ப­வங்கள் மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்கள் இரண்­டி­லுமே கொல்­லப்­பட்­ட­வர்கள் நாட்டின் சிறு­பான்மை சமூ­கத்­தினர். அதன் கார­ண­மா­கவே அது குறித்து சிங்­கள மக்­க­ளி­டையே எந்த பிர­தி­ப­லிப்­பு­களும் எழ­வில்லை. ஆனால் இப்­போது அர­சி­ய­லுக்­காக சிலர் இது குறித்து பேச ஆரம்­பித்­தி­ருப்­பது முரண்­ந­கை­யாக உள்ள அதே நேரம் சில சிங்­கள அர­சியல் கட்சி தலை­வர்­களின் உள்­நோக்­கமும் இப்­போது வெளி­வந்­துள்­ளது.

முக்­கி­ய­மாக எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர்  இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை மேற்­கொள்ள வேண்டும் என கோரி­யி­ருக்­கின்­றனர். ஆனால் இதே சனல்– 4 அலை­வ­ரிசை இதற்கு முன்­ப­தாக வெளி­யிட்ட  இலங்­கையின் கொலைக்­க­ளங்கள் ஆவ­ணப்­படம் பற்றி ஏன் இவர்கள் வாய் திறக்­க­வில்லை?

நாமல்  ராஜபக் ஷ  கூறி­யதில் சில உண்­மைகள் இருக்­கின்­றன. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரிகள் யாராக இருந்­தாலும் இந்த சந்­தர்ப்­பத்தில் இந்த ஆவ­ணப்­படம் வெளி­வந்த பிறகு ஒரு சிலர் வெளி­யிட்டு வரும் கருத்­துகள் அர­சியல் சார்ந்­த­தா­கவே இருக்­கின்­றன. இறுதி யுத்த காலத்தில் இடம்­பெற்ற ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களின் மரணம், போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்­றிய தெளி­வான தக­வல்­களை ஒளிப்­ப­டங்­க­ளுடன் சனல்–4 வெளி­யிட்­டி­ருந்­தது.

அந்­நேரம்  ராஜபக் ஷ வினர் மிகப்­ப­ல­மாக இருந்­தனர். மஹிந்த ராஜபக் ஷ  இரண்­டா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றி­ருந்தார். அவ­ரது சகோ­தரர் கோட்­டா­பய தொடர்ந்தும் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்தார். 2009 போர் வெற்றி கோஷங்­களை முன்­வைத்தே மஹிந்த தேர்­தலில் வெற்றி பெற்­றி­ருந்தார். அந்த வெற்றி மயக்­கங்­களில் சிங்­கள பெளத்த மக்கள் பல ஆண்­டுகள் மயங்கிக் கிடந்­தனர்.

ஆகவே 2011 ஆம் ஆண்டு வெளி­யான ஆவ­ணப்­ப­டத்தின் காட்­சிகள் போலி­யா­னவை என மக்­களை நம்ப வைக்க  ராஜபக் ஷவினர் அதிக  பிர­யாசை எடுக்­க­வில்லை. கொல்­லப்­பட்­ட­வர்கள் அனை­வ­ருமே புலி பயங்­க­ர­வா­திகள் என்ற கதை­களை  சிங்­கள பெளத்த மக்கள் ஏற்­றுக்­கொண்­டனர். புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் மகனின் கொடூர மர­ணத்­தையும் ‘குட்டிப் புலி பயங்­க­ர­வா­தியின் முடிவு’ என்றே சில சிங்­கள பத்­தி­ரி­கைகள் வர்­ணித்­தி­ருந்­தன.  

எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் உண்­மையில் ஒரு தீவி­ர­வாத தாக்­கு­த­லாகும். ஆனால்,  கொல்­லப்­பட்­ட­வர்கள் அப்­பாவி மக்கள். இதன் சூத்­தி­ர­தா­ரி­களும் பின்­ன­ணியும் ஏன் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக ஆரா­யப்­ப­டா­ம­லுள்­ளது என்ற சந்­தேகம் இந்த நாட்டின் ஒவ்­வொரு பிர­ஜையின் மன­திலும் உள்­ளது. சனல்–4 அலை­வ­ரி­சையின் ஆவ­ணப்­பட  தக­வல்­க­ளி­லி­ருந்து  ராஜபக் ஷவினர் என்ன நியா­யப்­ப­டுத்­தல்­களை கூறி தப்பிக் கொள்ளப் போகின்­றனர் என்­பது பெரி­யதோர் வினா.அவர்­க­ளுக்கு இதில் சம்­பந்­த­மில்­லை­யென்றால்  பெரும்­பான்மை வாக்­கு­களால்  ஜனா­தி­ப­தி­யான கோட்­டா­பய  ராஜபக் ஷ ஏன் உரிய விசா­ர­ணை­க­ளுக்கு உத்­த­ர­வி­ட­வில்லை?  

இந்த ஆவ­ணப்­படம்  குறித்து பேசி வரும்  அர­சியல் பிர­மு­கர்கள் இனங்­க­ளுக்­கி­டையே மீண்டும் முறு­கலை ஏற்­ப­டுத்தும் வண்­ணமே கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர் என்­ப­துவும் முக்­கிய விடயம். பொது மக்கள் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் பிர­மித்த பண்­டார தென்­னக்கொன் பாரா­ளு­மன்றில்  ஆற்­றி­யி­ருந்த உரை அதற்கு சான்று பகர்­கின்­றது.

இஸ்­லா­மிய ராஜ்­யத்தை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவே இந்த தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்­ற­தாக அவர் தெரி­வித்­தி­ருந்தார். அதற்­கான ஆதா­ரங்­க­ளாக சில சம்­ப­வங்­களை அவர் கோடிட்டு காட்­டினார். இது முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்­பு­ணர்வை தூண்டக் கூடிய விட­ய­மாகும். இலங்­கையின் சனத்­தொ­கையில் 70 வீதத்­துக்கும் மேற்­பட்டோர்  சிங்­கள பெளத்­தர்­க­ளாவர். முஸ்­லிம்­களின் சத­வீதம் கிட்­டத்­தட்ட 10 வீத­மாகும். இப்­ப­டி­யான ஒரு நாட்டில் எவ்­வாறு இஸ்­லா­மிய இராஜ்யம் ஒன்று அமையும்?

  இந்த  ஆவ­ணப்­பட விவ­கா­ரத்தை ஜனா­தி­பதி ரணில் எவ்­வாறு கையா­ளப்­போ­கின்றார்?   எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் உட்­பட பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சர்­வ­தேச சுயா­தீன விசா­ர­ணை­களை கோரி­யுள்­ளனர். அவ்வாறு இடம்பெறுமாயின் முன்னதாக இந்த அலைவரிசை வெளியிட்ட ஆவணப்படத்தை அடிப்படையாகக்கொண்டு தமிழர்களின் படுகொலைக்கும் சர்வதேச விசாரணையின் தேவைபற்றி பேசப்படும். இதை அன்றைய தினம் சார்ள்ஸ் நிமலநாதன் எம்.பி. பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றியும் சர்வதேச விசாரணை செய்யப்பட வேண்டும் என்று ரணில் விரும்பினால் அது இராணுவத்தை காட்டிக்கொடுப்பதற்கு சமம் என மக்களையும் தூண்டி விடுவர். அது ரணிலின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வியூகங்களை பாதிக்கும். 

சனல்–4 அலைவரிசையின் இரண்டு ஆவணப்படங்கள் குறித்தும் சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. எமது நாட்டு மக்களின் ஞாபக மறதிகள் தான் அரசியல்வாதிகளின் பலமே. அடுத்த தேர்தல் ஒன்று வரும் போது இந்த ஆவணப்படங்களைப் பற்றி  நாட்டில் பலரும் மறந்திருப்பர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right