(நெவில் அன்தனி)
லாகூர், கடாபி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (05) மிகவும் பரபரப்பைத் தோற்றுவித்த தீர்மானம் மிக்க பி குழு போட்டியில் ஆப்கானிஸ்தானை 2 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை, ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றில் விளையாட கடைசி அணியாகத் தகுதிபெற்றது.
ஏ குழுவிலிருந்து பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளும் பி குழுவில் இருந்து பங்களாதேஷும் ஏற்கனவே சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 292 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை 37.1 ஓவர்களில் அடைந்தால் ஆப்கானிஸ்தானுக்கு சுப்பர் 4 சுற்று வாய்ப்பு கிடைக்கவிருந்தது.
ஆனால், அந்த இலக்கை குறிப்பிட்ட ஓவர்களில் எட்டிப்பிடிக்கத் தவறிய ஆப்கானிஸ்தான், 37.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 289 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஒருவேளை 37.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 295 ஓட்டங்களைப் பெற்றால் சுப்பர் 4 சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், கடைசி ஆட்டக்காரர் பஸால்ஹக் பாறூக்கியும் சிரேஷ்ட வீரர் ராஷித் கானும் அதை அறியாமல் 3 பந்துகளை வீணடித்ததால் ஆப்கானிஸ்தான் சுப்பர் 4 சுற்று வாய்ப்பை தவறவிட்டது.
இலங்கையின் இந்த வெற்றியில் முதலாவது, 4ஆவது, 8ஆவது விக்கெட்களில் பகிரப்பட்ட 3 முக்கிய இணைப்பாட்டங்கள், குசல் மெண்டிஸ் குவித்த அரைச் சதம், துனித் வெல்லாலகே வீழ்த்திய 2 முக்கிய விக்கெட்கள் என்பன பிரதான பங்காற்றின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சுப்பர் 4 சுற்று தகுதியைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைக்கு பெத்தும் நிஸ்ஸன்கவும் திமுத் கருணாரட்னவும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், திமுத் கருணாரட்ன (32), பெத்தும் நிஸ்ஸன்க (41), சதீர சமரவிக்ரம (3) ஆகிய மூவரும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது இலங்கைக்கு பேரிடியைக் கொடுத்தது. (86 - 3 விக்.)
இந் நிலையில் குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 102 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலு சேர்த்தனர்.
சரித் அசலன்க 36 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து குசல் மெண்டிஸுடன் இணைந்த தனஞ்சய டி சில்வா 5ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (221 - 5 விக்.)
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் மாத்திரம் சேர்ந்தபோது குசல் மெண்டிஸ் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். (226 - 5 விக்.)
தசன் ஷானக்க வேகமாக அடித்த பந்தை ராஷித் கான் பிடிக்க முயற்சித்தபோது பந்து அவரது கைகளில் பட்டு பந்துவீச்சு எல்லையில் உள்ள விக்கெட்டில் மோதியது. அந்த சந்தர்ப்பத்தில் குசல் மெண்டிஸின் துடுப்பு எல்லைக்கோட்டுக்குள் தரையில் வைக்கப்பட்டிராததால் அவர் ரன் அவுட் ஆனார்.
84 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 92 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து தசுன் ஷானக்க (5) ஆட்டம் இழந்தார். (227 - 7 விக்.)
எனினும், 8ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த துனித் வெல்லாகே, மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் பெறுமதிவாய்ந்த 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலம் வாய்ந்த நிலையில் இட்டனர்.
துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றதுடன் மஹீஷ் தீக்ஷன 28 ஓட்டங்களுடன் கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் குல்பதின் நய்ப் 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராஷித் கான் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 3ஆவது விக்கெட்டை இழந்து தடுமாற்றம் அடைந்தது.
ஆனால், ரஹ்மத் ஷா (45), அணித் தலைவர் ஹஷ்மதுல்லா ஷஹிதி (59) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.
தொடர்ந்து ஆப்கானிஸ்தான் சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைச் சதம் (24 பந்துகள்) குவித்த மொஹமத் நபி தனது அணிக்கு தெம்பூட்டினார்.
மொஹமத் நபி 65 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தது ஆப்கானிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.
எனினும் கரிம் ஜனத் (22), நஜிபுல்லா ஸத்ரான் (23), ராஷித் கான் (27 ஆ.இ.) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தியபோதிலும் ஆப்கானிஸ்தானை நெருங்கி வந்த வெற்றி வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது.
இலங்கை பந்துவீச்சில் கசுன் ராஜித்த 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM