ஹரிகரன்
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்று சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், வடக்கில் விரிவான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்.
இந்தப் பயணத்தின் போது அவர் அரசியல், பொருளாதார, சமூக, மத விவகாரங்களில் மாத்திரமன்றி, பாதுகாப்பு விவகாரங்களிலும் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறார்.
யாழ்ப்பாணப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சிக்குச் சென்ற அவர், அங்கு இலங்கை இராணுவத்தின் முதலாவது கோர்ப்ஸ் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்.பி.அமுனுகமவைத் சந்தித்திருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது இரண்டு முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கிறது.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கின் டுவிட்டர் பக்கத்திலேயே இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இலங்கை இராணுவத்துடன் அமெரிக்கா வரையறுக்கப்பட்ட தொடர்புகள் - உறவுகளையே பேணி வருகிறது.
குறிப்பாக, 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுகளை அடுத்து, இராணுவத்துடனான உறவுகளை அமெரிக்கா மட்டுப்படுத்திக் கொண்டது.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த நியாயமான, நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தலை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.
அதனால் இலங்கை இராணுவத்துக்கு மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பயிற்சிகளை வழங்குவதுடன் அமெரிக்கா தனது உறவுகளை மட்டுப்படுத்திக் கொண்டதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் முன்னர் வெளியிட்ட நாடுகளின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டியிருந்தது.
போர்க்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்பட்ட படை அதிகாரிகள் பலரை அமெரிக்கா தனது நாட்டுக்குள் நுழைவதற்கும் தடைவிதித்திருக்கிறது.
இலங்கை கடற்படையைப் பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்ற போதும், விமானப்படையுடன் வலுவான உறவுகளைப் பேணுகின்ற போதும், இலங்கை இராணுவத்துடன் அத்தகைய நெருங்கிய உறவுகளை அமெரிக்காவினால் ஏற்படுத்த முடியவில்லை.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டியவர்கள் அல்லது அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க - பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனப் பட்டியலிடப்படும் இராணுவ அதிகாரிகள் தலைமைத்துவக் கட்டமைப்புகளில் காணப்பட்டதும் இலங்கை இராணுவத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் ஆழமான விரிசல்கள் நீடித்தமைக்கு ஒரு காரணமாகும்.
போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும், குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதும், அந்த இலக்கை எட்டுவதற்காக அமெரிக்கா பல்வேறு தடைகளை நடைமுறைப்படுத்தி, அழுத்தங்களைக் கொடுத்து வருவதும் விரிசல்களுக்கு முக்கிய காரணம்.
இவ்வாறானதொரு பின்னணி நிலையிலேயே, வடக்கிற்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், கிளிநொச்சியில் இராணுவத்தின் முதலாவது கோர்ப்ஸ் படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அமுனுகமவுடன் கலந்துரையாடலை நடத்தியிருக்கிறார்.
இந்தக் கலந்துரையாடல் இரண்டு முக்கிய விவகாரங்களை மையப்படுத்தியிருந்தது.
ஒன்று- இராணுவத்தை நவீனமயப்படுத்தும், இலங்கையின் முயற்சிகள் உள்ளிட்ட, பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமெரிக்காவின் பகிரப்பட்ட கடப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கிறது.
இரண்டு- நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு, சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா கடந்த ஒன்றரை தசாப்தங்களில் நிலையான அமைதி தொடர்பாக பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடியிருக்கிறது. இப்போது, முதல்முறையாக இராணுவத்தின் படையணி மட்டத்துக்கு அந்த விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கிறது.
அதுபோலவே, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இராணுவத்தை நவீனமயப்படுத்துவது குறித்தும் இப்போது புதிதாக கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது. அதனையும் கொழும்பில் இருந்து முன்னெடுக்காமல், இராணுவத்தின் பிரதான படையணி மட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
இராணுவத்தின் முதலாவது கோர்ப்ஸ் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் அமுனுகமவுடன், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பேச்சு நடத்திய இந்த இரண்டு விடயங்களும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.
கடந்த ஒன்றரை தசாப்தங்களாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படுகின்ற விரிசல்களை சரிப்படுத்தும் அமெரிக்காவின் விருப்பத்தையும் இது வெளிப்படுத்துவதாக உள்ளது.
மனித உரிமைக் காரணங்களை சுட்டிக்காட்டி, பொறுப்புக்கூறலை வலியுறுத்தி இலங்கை இராணுவத்திடம் இருந்து விலகியிருந்த அமெரிக்கா, இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முற்படுகிறதா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.
இராணுவத்தை நவீனமயப்படுத்தும் இலங்கைக்கு அமெரிக்கா உதவ முற்படுவதாக தெரிகிறது. அதற்காக இராணுவத்துடன் கீழ்மட்ட உறவுகளை பலப்படுத்த முற்படுகிறது.
இலங்கை கடற்படையின் மெரைன் படைப்பிரிவுடன் அமெரிக்கா கூடுதல் தொடர்புகளை பேணி வருவது கண்கூடு.
அவ்வாறே அமெரிக்கா முதலாவது கோர்ப்ஸ் படையணியுடன் தொடர்புகளை உருவாக்க முற்படுகிறதா என்ற கேள்வியும் உள்ளது. மெரைன் படைப்பிரிவை உருவாக்கியது போல,இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவுக்கும் பயிற்சிகளை வழங்கியதும் அமெரிக்கா தான்.
முதலாவது கோர்ப்ஸ்ஸில் இடம்பெற்றுள்ள விசேட படைப்பிரிவு மற்றும் 53 ஆவது டிவிசன் ஆகியன, முன்னர் அமெரிக்க இராணுவ அதிகாரிகளால் பயிற்சியளிக்கப்பட்டவை.
கிறீன் பெரட்ஸ் என்ற அமெரிக்காவின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், 1997இல், குகுலேகங்கவில் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினர்.
2000ஆம் ஆண்டு ஆனையிறவுத் தளம் புலிகளால் முற்றுகையிடப்பட்ட போது, அது கடைசி வரையில் வீழ்ந்து விடாது என்றே அமெரிக்க அதிகாரிகள் நம்பியிருந்தனர்.
தங்களால் பயிற்சியளிக்கப்பட்ட 53 ஆவது டிவிசன் படையினர் அங்கு நிலைகொண்டிருப்பதால், அவ்வாறான நிலை ஏற்படாது என்று அவர்கள் நம்பினர்.
ஆனால், அந்த நம்பிக்கையை உடைத்து, ஆனையிறவைப் புலிகள் கைப்பற்றியமை வரலாறு. அதற்குப் பிற்பட்ட காலங்களில் அமெரிக்கா இலங்கை இராணுவத்தினருக்கு பெரியளவில் பயிற்சிகளை வழங்கியிருக்கவில்லை. இப்போது இராணுவத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு அமெரிக்கா ஒத்துழைக்கக் கூடும்.
ஆனால், அதற்கு சில தடைகள் இருக்கின்றன. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா கடும் போக்கை கடைப்பிடித்து வந்திருக்கிறது.
இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் தீர்மானங்களை முன்னின்று கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது.
இந்த தீர்மானங்களால் இதுவரையில், பொறுப்புக்கூறல் இலக்கை அடைய முடியவில்லை என்பது வேதனையான உண்மை.
இவ்வாறான நிலையில் திடீரென இலங்கை இராணுவத்துடன் அமெரிக்கா நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றால், அது தவறானதொரு விம்பத்தை காண்பிக்கும்.
பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து போவார்கள், அமெரிக்காவின் மீது நம்பிக்கையீனம் ஏற்படும்.
இவ்வாறான நிலையில் தான் அமெரிக்கத் தூதுவர் இரண்டாவது விடயத்தை முன்வைத்திருக்கிறார். சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம் நிலையான அமைதியை அடைய முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்தின் ஊடாக, இராணுவத்தினர் சிறுபான்மை சமூகங்களுடன் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அதேவேளை, இவ்வாறு நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம், இராணுவத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை வழங்க முடியும் என்று கூறியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
எவ்வாறாயினும், இதனை அவர் ஏன், கிளிநொச்சியில் போய், இராணுவத்தின் முதலாவது கோர்ப்ஸ் முன்னிலையில் கூற வேண்டும்? அதுதான் முக்கியமான கேள்வி.
முதலாவது கோர்ப்ஸ் தான் இலங்கை இராணுவத்திலேயே முதன்மையான படையணிகளை உள்ளடக்கியது.
53, 58 ஆவது டிவிசன்கள் மற்றும் விசேட படைப்பிரிவு, கொமாண்டோ படைப்பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியது தான்,முதலாவது கோர்ப்ஸ். இந்த நான்கு படைப்பிரிவுகளும், இறுதிக்கட்டப் போரில் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதாவது பொறுப்புக்கூற வேண்டிய படைப்பிரிவுகள்.
இறுதிக்கட்டப் போருக்குத் தலைமை தாங்கிய அதிகாரிகள் பலர் இப்போது இந்தப் படைப்பிரிவுகளில் இல்லை.
ஆனால், அப்போது பணியாற்றிய படையினர் பலர், இன்னமும் இந்தப் படைப்பிரிவுகளில் இருக்கின்றனர்.
இவர்கள், பொறுப்புக்கூறலை எதிர்க்கின்றனர். ஏனென்றால், அது அவர்களை சிக்கலுக்குள் தள்ளும். தண்டனைக்குட்படுத்தப்படும் நிலையையும் ஏற்படுத்தும்.
இதனைக் கருத்தில் கொண்டு கூட, அமெரிக்கத் தூதுவர் சிறுபான்மையினங்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கலாம்.
அதன் மூலம் நிலையான அமைதியை எட்ட முடியும் என்று மாத்திரம் அவர் கூற முன்வரவில்லை. அதற்கும் அப்பால், இராணுவத்துக்கான உதவிகளை வழங்குவதற்கும் அமெரிக்கா தயாராக இருக்கிறது- அதற்கான தடைகளை அகற்றுங்கள் என்ற செய்தியும் இதற்குள் அடங்கியிருக்கிறது.
பொறுப்புக்கூறலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அமெரிக்கத் தூதுவரின் இந்தச் செய்தி, ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM