(நெவில் அன்தனி)
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட முழு உலகிலும் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண ஏ பிரிவு கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகலையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில் கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய போட்டியாக கருதப்படும் இந்தப் போட்டி முழுமையாக நடைபெறுவதற்கு இயற்கை அன்னை கை கொடுப்பாள் என இரசிகர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியை விட வேறு அணிகளுக்கு இடையிலான போட்டி பெரியது என்று யாராலும் கூறவும் முடியாது, கூறவும் மாட்டார்கள். ஏனேனில் இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு போட்டிகளில் பங்குபற்றுவது மிகவும் அபூர்வம்.
ஒன்றில் ஆசிய கிண்ணம் அல்லது ஐசிசி உலகக் கிண்ணம் (ரி 20 மற்றும் 50 ஓவர்) ஆகியவற்றிலேயே இந்த இரண்டு அணிகளும் ஒன்றையொன்று நேருக்கு நேர் சந்தித்து வருகின்றன.
பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்ததால் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் சந்தேகமும் வலுவடைந்தது.
ஆனால், பாகிஸ்தானுக்கு கைகொடுத்த இலங்கை, பெரும்பாலான போட்டிகளை நடத்துவதற்கு முன்வந்ததால் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதை இரசிகர்கள் இன்று நேரடியாகவும் தொலைகாட்சி வாயிலாகவும் கண்டுகளிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடைசியாக இந்த இரண்டு அணிகளும் 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் மென்செஸ்டரில் சந்தித்தபோது 89 ஓட்டங்களால் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
எவ்வாறாயினும் கடந்த 6 வருடங்களில் இந்த இரண்டு அணிகளும் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் ஒன்றையொன்று எதிர்த்தாடி வந்துள்ளதால் எந்த அணி வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணி என்று அறுதியிட்டு கூறமுடியாது.
இந்த 5 போட்டிகளில் உலகக் கிண்ணத்தில் ஒரு தடவையும் ஆசிய கிண்ணத்தில் இரண்டு தடவைகளும் இந்தியா வெற்றிபெற்றது. 2017 சம்பியன்ஸ் கிண்ணத்தில் முன்னோடி சுற்றில் இந்தியாவும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றிருந்தன.
கடந்த காலங்களில் போன்று இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும் இடையிலான போட்டியாக இது அமையும் என எதிர்பார்க்கலாம். ஆனால், பாகிஸ்தானின் துடுப்பாட்டம் அண்மைக்காலமாக பன்மடங்கு முன்னேறியுள்ளதால் அந்த எதிர்பார்ப்பு தவறு என இந்தப் போட்டியில் நிரூபிக்கப்படலாம்.
இரண்டு அணிகளிலும் உலக தரம்வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெறுவதுடன் 7ஆம் இலக்கம் வரை துடுப்பாட்ட வரிசை நீண்டுக்கொண்டு போகிறது.
ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் (விக்கெட் காப்பாளர்), ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா ஆகியோர் இந்திய துடுப்பாட்ட வரிசையில் இடம்பெறுகின்றனர்.
பந்துவிச்சில் மொஹமத் ஷமி அல்லது ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோருடன் ரவிந்த்ர ஜடேஜா, ஹார்திக் பாண்டியா ஆகியோரும் இந்தியாவால் பயன்படுத்தப்படவுள்ளனர்.
பாகிஸ்தான் துடுப்பாட்டவரிசையில் பக்கார் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), அகா சல்மான், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
பந்துவீசசில் மொஹமத் நவாஸ், ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப், ஷடாப் கான் ஆகியோர் இடம்பெறுகின்றனர். பகுதிநேர பந்துவீச்சாளர்களாக இப்திகார் அஹ்மத, அகா சல்மான் ஆகியோர் பயன்படுத்தப்படுவார்கள்.
ஒட்டுமொத்தத்தில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் கொண்டவையாக தென்படுவதால் இந்தப் போட்டி பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM