ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஹொங்கொங்கில் சீன அரசால் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பாரிய விளைவுகளையிட்டு தற்போது சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், ஜனநாயகக் கோரிக்கையாளர்களும் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் சீன அரசின் அடாவடி சர்வாதிகார ஆட்சியை ஹொங்கொங்கில் அமுல்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஹொங்கொங்கில் 2020இல் சீன அரசாங்கம் கொண்டு வந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக அக்காலத்தில் ஹொங்கொங்கில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தப் போராட்டங்களை ஹொங்கொங்– சீன அரசுகள் கடுமையாக அடக்கி ஒடுக்கி வந்தன.
ஹொங்கொங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம்:
2020 ஜுன் 30 முதல் “ஹொங்கொங் சிறப்பு ஆட்சிப் பகுதியில் தேசியப் பாதுகாப்பிற்கான மக்கள் சீனக் குடியரசின் சட்டம்” என்று தலைப்பிடப்பட்ட புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமுலுக்கு வருவதாக, ஹொங்கொங்கின் தலைமைச் செயலரான கேரி லாம் அறிவித்தார்.
சட்டப்படி ஹொங்கொங் சீனாவின் ஒரு பகுதியாகும். ஆனால் ஹொங்கொங்கிற்கு என தனியான அடிப்படை அரசியல் சட்டமும், நீதித்துறையும், தன்னாட்சி கொண்ட நிர்வாக அரசும் நீடிக்கிறது. பல கட்சி ஜனநாயகம், பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவை எல்லாம் ஹொங்கொங்கில் உண்டு.
ஹொங்கொங் – சீனா வரலாறு :
சீனாவின் மன்னராட்சியின் கீழ் இருந்த ஹொங்கொங் தீவை 1842-ஆம் ஆண்டு நடந்த முதல் ஓப்பியம் போரில் பிரிட்டன் கைப்பற்றியது. அதன் பின்னர் 1898ஆம் ஆண்டு சீனாவிடமிருந்து கூடுதல் நிலப்பரப்புகளையும் சேர்த்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது பிரிட்டிஷ் அரசு. பிரிட்டன் ஆட்சியில் ஹொங்கொங் ஒரு பெரும் வர்த்தக நகராக உருவாகியது.
மாவோவின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1949-ஆம் ஆண்டு சீனாவில் புரட்சியை ஏற்படுத்தி மக்கள் சீனக் குடியரசைக் கட்டியமைத்தது. ஆயினும் அப்போதும் ஹொங்கொங் பிரிட்டிஷ் காலனியாகவே இருந்துவந்தது. பிரிட்டிஷ் காலனித்துவ அரசை எதிர்த்து பல்வேறு விடுதலைப் போராட்டங்கள் ஹொங்கொங்கில் நடந்துள்ளன. அவை அத்தனையும் பிரிட்டிஷ் அரசால் ஒடுக்கப்பட்டன.
பின்னர் 1997-இல் ஹொங்கொங்கை சீனாவிடம் கைமாற்றுவதற்கான வேலைகளை இருநாடுகளும் தொடங்கின. ஹொங்கொங்கில் பிரிட்டன் நடைமுறைப்படுத்தி வந்த அதே ஆட்சி முறைகளையும், ஜனநாயக உரிமைகளையும் 2047-வரை (ஐம்பது ஆண்டுகளுக்கு) நீடிக்கும்படியான மற்றும் அங்கு முதலீடு செய்திருக்கும் தமது நாட்டு முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும்படியான நிபந்தனைகளுடன் 1997-ஆம் ஆண்டு ஹொங்கொங் சீனாவிடம் கைமாற்றிக் கொடுக்கப்பட்டது.
பிரிட்டன், ஹொங்கொங்கை சீனாவிற்கு திரும்பக் கொடுத்த வைபவம், 1997 ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவில் நிகழ்ந்தது. அப்போதைய சீன அதிபர் ஜியாங் ஜெமின் ,பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் முன்னிலையில் பிரிட்டிஷ் கொடியை இறக்கி மக்கள் சீனத்தின் கொடியும், கூடவே ஹொங்கொங்கின் தனிக் கொடியும் ஏற்றினார்.
அதன் பின்னர் 1997 ஜூலை 1ஆம் திகதி முதல் ஹொங்கொங்கில் ‘ஒரு தேசம் ஈராட்சி முறை’ (One Country Two Systems) அமு லுக்கு வந்தது. இந்த ஐம்பதாண்டுகளும் சீனாவுக்கும் ஹொங்கொங்கிற்கும் இருக்கும் உறவு – “ஒரே நாடு, இரண்டு அமைப்பு முறை” என்பதாகும். பிரிட்டனின் காலனியாக இருந்த ஹொங்கொங், சீனாவின் காலனியாக இதன் பின்னர் தாரைவார்க்கப்பட்டது.
ஐம்பதாண்டு கால ஒப்பந்தம் முடிந்த பிறகு ஹொங்கொங் அரசு எப்படி இயங்கவேண்டும் என்பதை சீனா தான் முடிவு செய்யும். இதுதான் இந்த ஒப்பந்தத்தின் சாரம். தாய்நாட்டோடு இணைகிற பெருமிதம் சிலருக்கு இருந்தது. என்றாலும், சீனாவின் ஆளுகையில் ஹொங்கொங்கின் சுதந்திரக் காற்றுக்குப் பங்கம் நேருமோ என்கின்ற அச்சம் பலருக்கும் இருந்தது. ஹொங்கொங்கின் சுயாட்சியில் பெய்ஜிங் பெருமளவில் தலையிடவில்லை. முதல் ஐந்து ஆண்டுகளின் முடிவில் அப்படியான அச்சத்திற்கு அவசியமில்லை என்கிற முடிவுக்குப் பலரும் வந்தனர்.
ஹொங்கொங் அரசியல் கட்சிகளின் வரலாறு எண்பதுகளில்தான் தொடங்கியது. ஹொங்கொங் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், பெய்ஜிங் ஆதரவுக் கட்சிகள் என்றும் ஜனநாயக ஆதரவுக் கட்சிகள் என்றும் வகைப்படுத்தப்படும்.
1991இல் பிரிட்டிஷ் அரசு நடத்திய முதல் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக ஆதரவாளர்களால் 1994இல் தொடங்கப்பட்டதுதான் ஜனநாயகக் கட்சி. அதற்கு முன்பாகவே 1992இல் பெய்ஜிங் ஆதரவாளர்களால் தொடங்கப்பட்டது ‘டெமோக்ரட்டிக் எலையன்ஸ் ஃபோர் பெட்டர்மென்ட் ஒஃப் ஹொங்கொங்- டி.ஏ.பி’கட்சி. (Democratic Alliance For Betterment of Hong Kong- DAB). இன்னும் பல ஜனநாயக பெய்ஜிங் ஆதரவுக் கட்சிகள் அரசியல் அரங்கில் உள்ளன.
சீனா மீது பொருளாதாரத் தடை:
சீன சார்பு ஹொங்கொங் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஹொங்கொங் மீதோ, சீனா மீதோ பொருளாதாரத் தடை விதிக்க வெளிநாடுகளுக்கு கோரிக்கை விடுப்பதோ, ஹொங்கொங் சட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்த அந்நிய நாடுகள், நிறுவனங்கள், அல்லது அமைப்புகளிடமிருந்து உத்தரவுகள் பெற்று செயல்படுவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தப் புதிய சட்டத்தில் தடை உள்ளன. அந்நிய நாடுகளுடன் கூட்டுச் சதி என்ற பிரிவின் கீழ் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முடியும்.
சீனாவின் எந்த ஒரு பகுதியின் நிலைமைகளை மாற்றுவது குறித்து அல்லது எந்தப் பகுதியையும் பிரிப்பது குறித்து திட்டமிடுவதும், அதற்கு ஏற்பாடு செய்வதும், அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும், அதற்கு உதவுவதும், அத்தகைய செயல்களைத் தூண்டுவதும் கடுமையான பிரிவினைவாதக் குற்றமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி ஹொங்கொங்கின் சுய நிர்ணய உரிமை குறித்தோ அல்லது திபெத்தின் விடுதலை குறித்தோ யாரேனும் இனி சாதாரணமாகப் பேசினாலும் கூட தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தை தூண்டிய குற்றத்திற்காகக் கைது செய்ய முடியும்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படாது. இதன் காரணமாக, அரசியல் கைதிகள் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதற்கும் கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு.
ஹொங்கொங் போராட்டங்களின் வரலாறு :
ஹொங்கொங்கில் கொண்டுவரப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டம், ஜனநாயக விரோதமாகவும ்ஹொங்கொங் நகரத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு ஜனநாயக உரிமைகளை மறைமுகமாக ரத்து செய்யக் கூடியதாகவும் இருக்கும் என்ற காரணத்தினாலேயே ஹொங்கொங் மக்கள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடி வந்தனர்.
சீனாவில் கைதிகள் முறையாக விசாரிக்கப்படமாட்டார்கள் என ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர்கள் அஞ்சினார்கள். பிற்காலத்தில் போராட்டக் குரல்களை அடக்க இந்த சட்டம் பயன்படலாம் என்கிற அச்சமும் சேர்ந்தது.
2020 ஜூன் 9ஆம் திகதி அன்றும் 16ஆம் திகதி அன்றும் ஹொங்கொங் வீதிகளில் லட்சக்கணக்கானோர் அணிவகுத்தனர். முந்தையது வெண்சட்டைப் பேரணி. பின்னது கருஞ்சட்டைப் பேரணி.
ஹொங்கொங் சுய நிர்ணய உரிமை:
புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், பெருமளவிலான அபராதத் தொகையும், பத்தாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கூட தண்டனை வழங்க முடியும்.
மேலும் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்காக என்று கூறி சீனாவுக்கு நாடு கடத்தவும் முடியும்.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறையும் முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமானதாகவும், ஹொங்கொங்கின் தனிப்பட்ட அடிப்படை சட்டங்களுக்கு முரணானதாகவும் இருக்கிறது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்காக ஹொங்கொங் நீதிமன்றங்களில் தனிப் பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் ஹொங்கொங் நகரத்தின் தலைமைச் செயலருக்கு மட்டுமே உண்டு என்றும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.
ஒருவேளை குறிப்பாக ஒரு வழக்கு மிகவும் ‘இரகசியம்’ வாய்ந்தது என தலைமைச் செயலர் முடிவு செய்தால், அந்த வழக்கு விசாரணை வெளிப்படையான நீதிமன்றத்தில் நடத்தப்படாமல், மூடிய அறைக்குள் நடத்த உத்தரவிடும் அதிகாரமும் அவருக்கு உண்டு. மிகவும் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் முறை முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமானதாகவும், ஹொங்கொங்கின் தனிப்பட்ட அடிப்படை சட்டங்களுக்கு முரணானதாகவும் இருக்கிறது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிப் பதற்காக ஹொங்கொங் நீதிமன்றங்களில் தனிப் பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் ஹொங் கொங் நகரத்தின் தலைமைச் செயலருக்கு மட்டுமே உண்டு என்றும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM