ஹரிகரன்
சீனாவின் சினோபெக் நிறுவனம் வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி எரிபொருள் விற்பனையை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த மாதமே, சினோபெக் நிறுவனம், இலங்கையில் எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைக்கும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டது.
எரிபொருள் சந்தையில், சுமார் 100 மில்லியன் டொலரை முதலீடு செய்யும் சினோபெக் நிறுவனத்துக்கு, ஏற்கனவே பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள 150 எரிபொருள் விற்பனை நிலையங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மேலும் 50 எரிபொருள் விற்பனை நிலையங்களை புதிதாக அமைப்பதற்கும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் ஊடாக இலங்கையின் எரிபொருள் சந்தையில் சில்லறை விற்பனையில் கால் வைக்கப் போகிறது சீனா.
ஏற்கெனவே உள்நாட்டு எரிபொருள் சந்தையில் இந்தியாவின் ஐ.ஓ.சி. நிறுவனம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
அதுவும் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் தான் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
2001 – 2004 காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பதவியில் இருந்த போது, எரிபொருள் சந்தையில் இந்தியாவின் ஐ.ஓ.சி. நிறுவனத்தை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளும், 35 வருட குத்தகைக்கு ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இலங்கையில் 211 எரிபொருள் விற்பனை நிலையங்களைக் கொண்டிருக்கிறது லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம்.
இப்போது, இரண்டாவதாக இலங்கையில் காலடி எடுத்து வைத்திருக்கிறது சீனாவின் சினோபெக்.
அவுஸ்ரேலியாவின் யுனைட்டெட் பெற்றோலியம் மற்றும் அமெரிக்காவின் ஷெல் நிறுவனத்துடன் இணைந்த ஆர். எம் .பார்க் ஆகிய நிறுவனங்களும் உள்நாட்டு எரிபொருள் சந்தையில் காலடி வைக்கவுள்ளன.
இந்தியாவின் ஐ.ஓ.சி. நிறுவனம் ஒரு எரிபொருள் விற்பனை நிறுவனமாக இலங்கையில் காலடி வைத்திருந்தாலும், அது ஒரு மூலோபாயத் திட்ட நடவடிக்கையாகவே காணப்பட்டது.
திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தாங்கிகளை வேறெந்த நாடும் கைப்பற்றி விடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்தது.
1987 இந்திய – இலங்கை உடன்பாட்டின் மூலம், திருகோணமலை துறைமுகம் வெளியாரின் கைக்குச் செல்ல முடியாதபடி கட்டுப் போட்டது புதுடெல்லி.
அதற்குப் பின்னர், 2000ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் பலம்வாய்ந்த இராணுவக் கட்டமைப்பாக மாறியிருந்த போது, திருகோணமலையின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
இந்தச் சூழலில் ரணில் விக்கிரமசிங்க, மிகத் தந்திரமாக, இந்தியாவிடம் எண்ணெய் தாங்கிகளைக் குத்தகைக்கு கொடுத்தார்.
இதன் மூலம், விடுதலைப் புலிகள் அவற்றின் மீது தாக்குதல் தொடுக்க முடியாத நிலையை உருவாக்கினார்.
அவற்றின் மீது கை வைத்தால், இந்திய நலன்களின் மீதான நடவடிக்கையாக அது கருதப்படும் என்பதால், 2006இல் திருகோணமலையில் தாக்குதல்களை நடத்திய போது கூட, விடுதலைப் புலிகள், சீனக்குடா எண்ணெய் தாங்கிகளை தவிர்க்க வேண்டிய நிலை காணப்பட்டது.
இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு மூலோபாய நடவடிக்கையாகவே, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், இலங்கையின் எரிபொருள் சந்தையில் காலடி வைத்தது.
இந்த நிறுவனம் செயற்படத் தொடங்கிய காலத்தில் இருந்தே, கணிசமான இலாபத்தையும் பெற்று வந்திருக்கிறது.
அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மோசமான நிர்வாகத்தினால், கடந்த காலங்களில் பாரிய நட்டத்தை சந்தித்து வந்திருக்கிறது.
அண்மையில் பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றியிருந்தார்.
அண்மையில் அந்தப் பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போது, நட்டத்தில் இயங்கி வந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இந்த ஆண்டில், ஜூலை 28ஆம் திகதி வரை, 73 பில்லியன் ரூபாவை இலாபமாகப் பெற்றிருப்பதாக கூறியிருந்தார்.
இது கடந்த 5 தசாப்தங்களில் சாதனை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இன்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டும் நிறுவனமாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம், அதிக விலைக்கு எரிபொருள் விற்கப்படுவதும் ஒன்று.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கே இந்த வருமானம் என்றால், லங்கா ஐ.ஓ.சி.யின் வருமானம் இன்னும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
பொருளாதார நெருக்கடியின் போது கூட லங்கா ஐ.ஓ.சி. வரையறுக்கப்பட்ட அளவிலேயே செயற்பட்டது. லங்கா ஐ.ஓ.சி.யினால் கூடுதல் எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டிருக்க முடியும்.
ஆனால் அது தனது எல்லையைத் தாண்டி விநியோகத்தை விரிவாக்கவில்லை.
அதுபோலவே, எரிபொருள் விலையை குறைத்து விற்கவும், அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
ஆனால், சீனாவின் சினோபெக் நிறுவனத்துக்கு அவ்வாறான எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
செப்டெம்பர் 20ஆம் திகதி சினோபெக் நிறுவனம் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கும் என அறிவித்த அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு குறைவாகவும், எரிபொருளை விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
200 எரிபொருள் விற்பனை நிலையங்களைக் கொண்டிருக்கும் சினோபெக் குறைந்த விலையில் எரிபொருளை விற்கத் தொடங்கும் போது, வாகனங்கள் அவற்றை முற்றுகையிடும்.
அந்தக் கட்டத்தில், லங்கா ஐ.ஓ.சி.நிறுவனமும் போட்டிக்கு விலைக்குறைப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும்.
ஏனென்றால் இப்போது உள்நாட்டு எரிபொருள் சந்தை, இந்தியா- –சீனாவுக்கு இடையிலான போட்டியாக மாற்றப்படுகிறது.
இந்தப் போட்டி ஆரோக்கியமானதாக இருக்குமா என்ற கேள்வி உள்ளது.
ஏனென்றால், இந்திய, சீன நிறுவனங்கள் போட்டி போட்டு, விலை குறைப்பை மேற்கொண்டால், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலைக்குறைப்பை மேற்கொள்ள வேண்டும்.
அந்த இடத்தில் எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திடம் இல்லாமல் போய் விடும்.
அவ்வாறு விலைக்குறைப்பை மேற்கொள்ளாது போனால், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்கள் சோபையிழக்கும்.அது அரச நிறுவனத்தின் வருமானத்தை பாதிக்கும்.
போட்டி போட்டாலும் சரி போட்டி போடாவிட்டாலும் சரி, இழப்பு அரசாங்கத்துக்குத் தான்.
அப்படியானால் எதற்காக எரிபொருள் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களை அரசாங்கம் அனுமதித்தது?
இது பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் எடுக்கப்பட்ட ஒரு முடிவு.
பொருளாதார நெருக்கடியின் போது, நாடு ஒரு கட்டத்தில் முற்றாக முடங்கியது. அதற்குக் காரணம், எரிபொருள் விநியோகம் முடங்கியது தான்.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் டொலர் இருக்கவில்லை. எண்ணெய் கப்பல்கள், கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் வாரக்கணக்கில் கூட காத்திருந்தன. ஆனால், நாடு இருளில் மூழ்கிக் கிடந்தது.
டொலர் நெருக்கடியினால் ஒட்டுமொத்த நாடே செயலிழந்தது.
எரிபொருள் இறக்குமதிக்காக டொலரைப் புரட்ட முடியாத நிலை ஏற்பட்டதால், அதற்கு மாற்று உபாயமாகவே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கதவு திறக்கப்பட்டது.
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் சந்தையில் கால் வைக்கும் போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோகம் பாதிக்கப்படும்.
சினோபெக் விநியோகத்தை தொடங்கும் வரை, எரிபொருள் சந்தையில் 80 வீத உரிமையை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே கொண்டிருந்தது.
இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பை,- இழப்பை அரசாங்கம் எவ்வாறு ஈடு செய்யும்?
அதற்கும் ஒரு வழி இருக்கிறது. சீன நிறுவனம், 100 மில்லியன் டொலர் முதலீட்டை கொண்டு வந்திருக்கிறது. அடுத்து தொடர் விநியோகத்தில் ஈடுபடும் போது, உள்நாட்டில் இருந்து, எரிபொருள் கொள்வனவுக்காக முன்கூட்டியே டொலரை திரட்ட வேண்டியதில்லை.
பிற்கொடுப்பனவாகவே டொலரை மாற்றிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு மத்திய வங்கி அல்லது வர்த்தக வங்கிகளின் ஊடாக டொலரை மாற்றி கொண்டு செல்லும் போது நாணய மாற்று வீத வருமானத்தை அரசாங்கம் பெற்றுக் கொள்ளும்.
அதேவேளை, அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை சுமக்கும் நிலை வராது. சீனாவோ, இந்தியாவோ சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விலைகளை தீர்மானிக்கும். அந்தப் போட்டியின் சாதகங்களை நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்கவும் முடியும்.
சினோபெக் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார்.
2019 நவம்பரில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் செய்து கொண்ட உடன்பாட்டு இப்போது ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.
அம்பாந்தோட்டையில் நாளொன்றுக்கு 42 ஆயிரம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரித்து, ஏற்றுமதி செய்யும் 4 பில்லியன் டொலர் திட்டத்துக்கு, 1200 ஏக்கர் காணிகளை வழங்கும் ஒப்பந்தமே ரத்துச் செய்யப்பட்டது.
இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாக அது அப்போது கொண்டாடப்பட்டது.
குறித்த திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சிங்கப்பூர் நிறுவனம், நிலத்தை பொறுப்பேற்கவுமில்லை, திட்டத்தை செயற்படுத்த தொடங்கவுமில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர், இந்திய, ஜப்பானிய முதலீட்டுத் திட்டங்களில் கைவைத்ததாலும், அதற்குப் பின்னரான ஆரோக்கியமற்ற பொருளாதார சூழல் மற்றும் நெருக்கடிகளாலும் சிங்கப்பூர் நிறுவனம் அந்த முதலீட்டைத் தொடருவதில் அக்கறையின்றி இருந்திருக்கலாம்.
இப்போது அரசாங்கம் அந்த திட்டத்தை ரத்துச் செய்திருக்கிறது, இது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் முக்கியமான தோல்விகளில் ஒன்று.
சீனாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணம் மேற்கொள்ளும் போது, அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதற்காகவே சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் மீளப் பெறப்பட்டதா என்ற கேள்விகளும் உள்ளன.
எவ்வாறாயினும், ஒரு பக்கத்தில் திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக்க இந்தியா முயற்சிக்கின்ற நிலையில் அரசாங்கம் இன்னொரு பக்கத்தில் சீனாவுக்கான கதவுகளை திறக்கிறது.
இது பிராந்தியத்தில் போட்டியை ஏற்படுத்துமா? பூசல்களை விரிவுபடுத்துமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM