(நெவில் அன்தனி)
நான்காவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்திற்கான இறுதிச் சுற்று வியாழக்கிழமை (17) நடைபெறவுள்ள முதலாவது தகுதிகாண் மற்றும் நீக்கல் போட்டிகளுடன் ஆரம்பமாகிறது.
ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ள முதலாவது தகுதிகாண் போட்டியில் தம்புள்ள ஒளரா, கோல் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடவுள்ளன.
அதனைத் தொடர்ந்து இரவு நடைபெறவுள்ள நீக்கல் போட்டியில் பி லவ் கண்டி அணியை முதல் 3 அத்தியாயங்களில் தொடர்ந்து சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் அணி சந்திக்கவுள்ளது.
இந்த இரண்டு போட்டிகளிலும் தத்தமது அணிகள் வெற்றிபெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு விளையாடவுள்ளதாக அவிஷ்க குணவர்தன (தம்புள்ள ஒளரா), சாமர கப்புகெதர (கோல் டைட்டன்ஸ்), முஸ்தாக் அஹ்மத் (பி லவ் கண்டி), திலின கண்டம்பி (ஜெவ்னா கிங்ஸ்) ஆகிய நான்கு பயிற்றுநர்களும் புதன்கிழமை (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.
இந்த வருட லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 6 வெற்றிகள், 2 தோல்விகள் என்ற பெறுபேறுகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் முதலிடத்தில் தம்புள்ள ஒளரா இருக்கிறது.
இந் நிலையில் இந்த வருடம் மிகத் திறமையாக விளையாடிவந்தள்ள தம்புள்ள ஒளராவுக்கு தகுதிகாண் போட்டியில் வெற்றிவாய்ப்பு எந்தளவு இருக்கிறது என அவிஷ்க குணவர்தனவிடம் கேட்டபோது,
'எமது அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் சகலதுறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்தியதாலேயே சிறந்த பேறுபேறுகளை ஈட்டியுள்ளோம். அதே திறமையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி முதலாவது தகுதிகாணில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற முயற்சிப்போம். எமது அணியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பை வழங்கியுள்ளோம். அவர்கள் அதனை நிறைவேற்றிவருகின்றனர்.' என அவிஷ்க குணவர்தன தெரிவித்தார்.
'எமது அணியில் மிகச் சிறந்த துடப்பாட்ட வீரர்களும் பந்துவீச்சாளர்களும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இறுதிச் சுற்றில் போராடும் குணத்துடன் விளையாடி அணியை வெற்றிபெறச் செய்வார்கள்' எனவும் அவர் கூறினார்.
இந்த சுற்றுப் போட்டியில் கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே இறுதிச் சுற்றில் விளையாட முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெற்ற போட்டியில் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸை துவம்சம் செய்து கோல் டைட்டன்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இம்முறை 4 வெற்றிகள், 4 தோல்விகள் என்ற பெறுபேறுகளுடன் 8 புள்ளிகளைப் பெற்ற கோல் டைட்டன்ஸ் நிகர ஓட்ட வேக அடிப்படையில் அணிகள் நிலையில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது.
இந் நிலையில் தமது அணியின் வெற்றிவாய்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட சாமர கப்புகெதர, 'நாங்கள் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் நுழைவோம் என நம்புகிறேன். எமது அணியில் திறமைவாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். நீக்கல் போட்டியில் விளையாடவுள்ள சகல வீரர்களும் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி அணியை வெற்றி அடையச் செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைய வைப்பர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்றார்.
நீக்கல் போட்டியில் ஜெவ்னா கிங்ஸை வெற்றிகொள்ள முடியுமா? என முஷ்தாக் அஹ்மதிடம் வினவியபோது,
'வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை அவசியம். எல்லா பயிற்றுநர்களும் வெற்றிபெறுவதை குறிக்கோளகாகக் கொண்டே விளையாடுகின்றனர். கிண்ணத்தை வெல்ல முடியும் என்பதே எனது நம்பிக்கை ஆகும். அத்துடன் எந்த அணியை எடுத்தக்கொண்டாலும் அணித் தலைவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தலைவர் சிறப்பாக விளையாடி எல்லா திட்டங்களையும் வியூகங்களையும் மிகச் சரியாக செய்வது அவசியம். அதனை எமது அணித் தலைவரும் ஆடுகளத்தில் நிறைவேற்றி எங்களது அணியை வெற்றிபெறச் செய்வார் என நம்புகிறோம்' என்றார்.
லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் இந்த வருடம் சிறப்பாக விளையாடவில்லை. இதற்கு என்ன காரணம் எனவும் நீக்கல் போட்டியில் வெற்றிபெற முடியுமா எனவும் திலின கண்டம்பியிடம் கேட்டபோது,
'நடப்பு லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் எமது அணி தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்தத் தவறியதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால். நாங்கள் 3 போட்டிகளில் பெரிய வித்தியாசங்களுடன் வெற்றிபெற்றதால் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதற்கான தகுதி எங்களுக்கு கிடைத்தது. எமது அணியில் உலகத் தரம்வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் சரியான வேளையில் பிரகாசிப்பார்கள். நீக்கல் போட்டியில் எமது வீரர்கள் வெற்றியை குறிவைத்து விளையாடுவார்கள்' என பதிலளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM