கார்வண்ணன்
2024ஆம் ஆண்டு தேர்தல்களின் ஆண்டாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான ருவன் விஜேவர்த்தன கூறியிருக்கும் நிலையில், கொழும்பு அரசியலில் சலசலப்புகள் தோன்றியிருக்கின்றன. ஏற்கெனவே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளது. அதற்குப் பின்னர் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் காலாவதியாகி, அவையும் தேர்தலுக்காக காத்திருக்கின்றன.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆக மூன்று தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
மாகாண சபைகளின் பதவிக்காலம் காலாவதியாகி பல ஆண்டுகளாகியும் தேர்தல் நடத்தப்படாமல் காலம் இழுத்தடிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி சபைகளின் நிலையும் அதுதான். இவற்றுக்கான தேர்தலை அடுத்த ஆண்டு நடத்த முடியாமல் போனாலும் ஆச்சரியமில்லை. ஆனால், ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஆண்டில் நடத்தாமல் இருக்க முடியாது.
கடைசியாக 2019 நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது. எனவே, அடுத்த ஆண்டு ஒக்டோபர் அல்லது அதற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கும்.
எப்படியாவது இன்னும் ஒரு வருட காலமே இருக்கும் நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயத்தங்களை அரசியல் கட்சிகள், கூட்டணிகள் இப்போதே தொடங்கிவிட்டன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதான போட்டியாளராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவிடம் அவர் தோல்வியடைந்தார். அப்போது தமிழ்மக்கள் வாக்களித்திருந்தால் அவர் ஜனாதிபதியாகியிருந்திருப்பார். ஆனால் தமிழ் மக்கள் அவரை ஆதரிக்கத் தயாராக இருக்கவில்லை.
அதற்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூட வாய்ப்பே கிடைக்கவில்லை.
2010இல் மஹிந்தவுக்கு எதிராக சரத் பொன்சேகா பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் நிறுத்தப்பட்டார்.
2015இலும் அதுதான் நடந்தது. மஹிந்தவைத் தோற்கடிப்பதற்காக அப்போது மைத்திரிபால சிறிசேன களத்துக்கு கொண்டு வரப்பட்டார். 2019இல் ரணில் விக்கிரமசிங்கவை பின் தள்ளிக் கொண்டு சஜித் பிரேமதாச முன்னிலைக்கு வந்ததால், வேறு வழியின்றி அவரை வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ரணில் தள்ளப்பட்டிருந்தார். ஆனாலும் ஜனாதிபதி வேட்பாளர் கனவு உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் வீழ்ச்சி அவருக்கு கை கொடுக்க, யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ, அவர்களின் தயவினாலேயே ஜனாதிபதி ஆனார்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவியில் ஒரு வருடத்தை கழித்துவிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு இப்போது சோதனைக்காலம் ஆரம்பித்திருக்கிறது.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கோட்டாவின் ஆட்சிக்கு எதிராக-ராஜபக்ஷவினரின் அதிகாரத்துக்கு எதிராக நாட்டில் தோன்றிய எதிர்ப்பலைகளைச் சமாளிக்க முடியாமல், சிலர் நாட்டை விட்டு ஓடினார்கள். இன்னும் சிலர் படைத்தளங்களுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.
அப்போது, அவர்கள் தங்களின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில், ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.
ரணில் விக்கிரமசிங்க அரசியல் எதிரியாக இருந்தாலும், அவர் நாடாளுமன்றத்தில் ஒற்றை ஆசனத்தை மட்டும் கொண்டிருப்பவர் என்பதால் தங்களுக்கு போட்டியாக வரமாட்டார் என்ற கணிப்பு ராஜபக்ஷவினருக்கு இருந்தது.
அதைவிட, ரணில் விக்கிரமசிங்க தங்களை பாதுகாத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது.
அந்த நம்பிக்கையை ரணில் விக்கிரமசிங்க பெரும்பாலும் காப்பாற்றியிருக்கிறார். அதாவது ராஜபக்ஷவினரை பாதுகாத்திருக்கிறார். ஆனால், தங்களுக்குப் போட்டியாக இருக்கமாட்டார் என்ற கணிப்பை அவர் மெய்யாக்கியிருக்கிறாரா என்பது சந்தேகம்.
ஏனென்றால், கோட்டா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் பொதுஜன பெரமுன கட்சி இப்போது தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது.
மீண்டெழுந்து ஆட்சியைப் பிடிக்க திட்டம் போடுகிறது. ராஜபக்ஷவினரின் தீவிர விசுவாசிகள் பலரும், மீண்டும் மொட்டு ஆட்சி மலரும், ராஜபக்ஷவினர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவார்கள் என்று பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். விரைவில் ராஜபக்ஷவினரின் ஆட்சி மலரும் என்று நாமல் ராஜபக்ஷவும் கூட கூறியிருக்கிறார்.
ஆக, தேர்தல் ஆண்டை எதிர்கொள்வதற்கு மொட்டு அணி தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு முளைத்திருக்கின்ற புதிய சிக்கல் ரணில் விக்கிரமசிங்க தான். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அவரைச் சூழ ஒரு அணி தயாராகி வருகிறது.
ஏற்கனவே ஐ.தே.க.வின் தலைவர் என்ற வகையில் அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் அல்ல அவர்கள். அவர்கள் மொட்டு கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வந்தவர்கள். பொதுஜன பெரமுனவின் ஆரம்பகால உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களாக இருந்தவர்கள் தான், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக திரளத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே ராஜபக் ஷவினரின் தலைமைத்துவத்தை வெறுத்து. மொட்டுக்குள் ஒரு பிரிவு ஏற்பட்டது.
டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள், மொட்டு கூட்டணியில் இருந்து விலகிச் சென்றார்கள்.
இந்தப் பிளவு பொதுஜன பெரமுனவின் கூட்டணி பலத்தை சிதைத்திருந்தாலும், மொட்டுவின் அடிப்படை கட்டமைப்பில் பெரிய சிதைவை ஏற்படுத்தியிருக்கவில்லை.
இப்போது, நிமல் லான்சாவின் தலைமையில் இன்னொரு புதிய கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது.
மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் நடந்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவன்ன, துமிந்த திசாநாயக்க, ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த அணியினர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதற்காக தயாராகி வருகின்றனர்.
ராஜபக்ஷவினருடன் கொண்டுள்ள அதிருப்தி அல்லது அவர்கள் மீது மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தியைக் கருத்தில் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் சாய்வதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் சார்பில் தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற முன்னைய ராஜபக்ஷ விசுவாசிகள் பலரும் கூட, ரணில் விக்கிரமசிங்க தான் அடுத்த ஜனாதிபதி என்று கூறி வருகிறார்கள்.
அவர்கள், ரணில் விக்கிரமசிங்கவைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுன தலைமைக்கு மறைமுக அழுத்தங்களைக் கொடுக்க முனைகின்றனர்.
இவ்வாறான நிலையில் தான், நிமல் லன்சாவின் தலைமையில் மொட்டுக்குள் மற்றொரு பிளவு உருவாகி வருகிறது.
இந்தப் பிளவைத் தடுப்பதற்கு, பசில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன தனக்கு ஆதரவளிப்பதை தவிர்க்க முடியாத ஒரு சூழலை உருவாக்க விரும்புகிறாரா என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன.
ராஜபக்ஷவினரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து, ஒதுக்கி வைக்கவே ரணில் முயற்சிக்கிறார். ராஜபக்ஷவினரும் தங்களை மீளமைத்துக் கொள்ளும் வரை ரணில் அதிகாரத்தில் இருப்பதே பாதுகாப்பானது எனக் கருதுகின்றனர்.
திடீரென ராஜபக்ஷவினர் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுவதை ரணில் விரும்பவும் இல்லை,-எதிர்பார்க்கவுமில்லை. இது தான் அவர்களுக்கிடையில் தற்போது காணப்படும் உரசல்களுக்குக் காரணம்.
ரணில் இப்போது ராஜபக்ஷவினரின் கடிவாளத்துக்கு கட்டுப்படும் குதிரையாக இல்லை.
13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ரணில் கூறிய போது, அதற்கு அவருக்கு மக்களாணை இல்லை என்று கூறியிருந்தார் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்.
ரணில் மொட்டுவுக்கு வழங்கப்பட்ட 69 இலட்சம் மக்களாணையில் ஜனாதிபதியானவர் என்றும், அவர் பெரமுனவின் கொள்கை மற்றும் தீர்மானங்களுக்கு அமையவே செயற்பட வேண்டும் என்றும் ராஜபக்ஷவினர் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறாக ரணிலுக்கும் ராஜபக்ஷவினருக்கும் இடையிலான உறவு மெல்ல மெல்ல கசக்கத் தொடங்கியிருக்கிறது.
இது அடுத்த ஜனாதிபதி தேர்தலிலுக்கிடையில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களும் அவர்களின் வெற்றி தோல்வியும் தீர்மானிக்கப்படும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM