எம்.எஸ்.தீன்
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதிலும், அதில் தான் வெற்றி பெற வேண்டும் என்பதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார். அதற்கமைய தமது வழக்கமான பிரித்தாளும் தந்திரத்தை கையிலெடுத்துள்ளார்.
தமிழர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக 13ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கு தயாரென்ற சமிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் கட்சிகளும் அது குறித்து கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.
இதேவேளை வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. 'தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு, கிழக்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டுமென கோர வேண்டும். அதன் மூலமாகவே தமிழர்களின் இறையாண்மையை பாதுகாக்க முடியும்' என அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கும் அத்துரலிய ரத்ன தேரர் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையீடு செய்ய வேண்டுமென்றும், ரணில் விக்கிரமசிங்க தமிழ், சிங்கள இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வடக்கு, கிழக்கு இணைப்பு, 13ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய அரசியல் சூழலில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் எதுவித கருத்துக்களையும் முன்வைக்காதிருப்பது கண்டிக்கத்தக்கது.
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதும், வடக்கும், கிழக்கும் இணைக்கப்படுவதும் ஒரு போதும் நடைபெறாதென்று வழக்கமாக இருப்பது போன்று இனியும் இருக்க முடியாது. அவ்வாறு இருப்பது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளையும், எதிர்காலத்தையும் குழி தோண்டி புதைப்பதற்கு அத்திவாரமிடும் ஒன்றாகவே அமைந்துவிடும்.
13ஆவது திருத்த அமுலாக்கத்தை முஸ்லிம்களும் வரவேற்க வேண்டும். ஆனால், வடக்கும், கிழக்கும் இணைக்கப்படுவது என்பது முஸ்லிம்களின் அபிலாஷைகளையும், அரசியல் அதிகாரத்தையும் இல்லாமல் செய்துவிடும். இந்நாட்டில் அரசியல் அதிகாரமற்றதொரு சமூகமாக முஸ்லிம்கள் மாறிவிடுவார்கள்.
ஆதலால், 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் அமுலாக்கம் செய்யப்பட்டு, வடக்கும், கிழக்கும் இணைக்கப்படுமாயின் அது கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சுமார் 38 வீதமாக உள்ளார்கள். அதனால், கிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரத்தை தேர்தல் ஒன்றின் மூலமாக பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், கிழக்கு வடக்குடன் இணைக்கப்படுமாயின் முஸ்லிம்களின் இனவிகிதாசாரம் சுமார் 17 வீதமாக வீழ்ச்சியடையும். இந்த விகிதத்தால் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களினால் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது.
ஆகவே, மாகாண ரீதியாக ஏனைய இனங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் போது முஸ்லிம்களும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குரியவாறு ஏற்பாடுகளைக் கொண்டதாக இனப் பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும். முஸ்லிம்களும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்கும் அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்று நிபந்தனை விதித்தார்.
வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமாயின் முஸ்லிம்களும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குரிய அதிகார அலகு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும் மர்ஹும் அஷ்ரப் தெரிவித்திருந்தார்.
ஆகவே, வடக்கும், கிழக்கும் இணைவதா அல்லது பிரிவதா என்பது முஸ்லிம்களின் பிரச்சினையல்ல. இதில் எது நடந்தாலும் முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்பதே முஸ்லிம்களின் விருப்பமாகும்.
கிழக்கு மாகாணத்தில் மாத்திரம்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையுடன் உள்ளார்கள். ஏனைய மாகாணங்களில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவே உள்ளார்கள். கிழக்கு மாகாணத்துக்கு வெளியே ஒரு உள்ளூராட்சி சபையின் அதிகாரத்தைக் கூட தனியே முஸ்லிம்களின் வாக்குகளினால் பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு சிறுபான்மையினராக இருக்கின்றார்கள். வடக்கும் கிழக்கும் இணையும்போது முஸ்லிம்கள் எல்லா மாகாணங்களிலும் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய 3 தொகுதிகளையும் இணைத்து கரையோர மாவட்டமொன்றை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் 1979ஆம் ஆண்டிலிருந்து முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் இந்த கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால், அதனை அமைப்பதற்கு அப்போது அமைச்சராக இருந்த பீ.தயாரட்னவும், தமிழ் அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்புக்களை காட்டினார்கள். வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்று கூறிக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளும், அமைப்புக்களும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட கரையோர மாவட்டத்திற்கு இன்றுவரை எதிர்ப்புக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கரையோர மாவட்டம் உருவாக்கப்பட்டால் தமிழர்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள். முஸ்லிம்களினால் ஆளப்படுவார்கள் என்றெல்லாம் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் இன்றும் தமிழர்கள் சிறுபான்மையினராகவே இருக்கிறார்கள். வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்று தெரிவிப்பவர்கள் அப்படி இணைந்தால் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக மாற்றப்படுவார்கள் என்பதை பற்றியும் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட கரையோர மாவட்டம் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிராக அமையும் என்றால், தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இணைந்த வடக்கு, கிழக்கில் சிறுபான்மையினராகிவிடும் முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யாமல் வெறுமனே வடக்குடன், கிழக்கை இணைக்க கோரிக்கைகளை முன் வைப்பதை முஸ்லிம்கள் தங்களுக்கு எதிரான கோரிக்கையாகவே பார்க்கின்றார்கள்.
முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றியோ, கரையோர மாவட்டத்தைப் பற்றியோ, இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்றோ எந்தக் கோரிக்கைகளையும் முன் வைக்காது வழமைபோல் மெளனம் காக்கின்றனர். இன்று முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ரகசியமாக நெருக்கமான உறவை வைத்துள்ளார்கள். இதனால் ரணில் விக்கிரமசிங்க வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்று தெரிவித்தாலும், முஸ்லிம்களுக்கு மாகாண ரீதியில் அரசியல் அதிகாரம் தேவையில்லை, முஸ்லிம்களை மத்திய அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றாலும் கூட அதற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்கள்.
13ஆவது திருத்தம் , வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி பேசப்படும் இன்றைய நிலையில், பாராளுமன்ற தேர்தல் 2024 ஜனவரியில் நடக்குமென்று தெரிவிக்கப்படுமாயின் முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும், முஸ்லிம்களை ஒரு போதும் நாங்கள் கைவிடமாட்டோம் என்றும் கருத்துக்களை தெரிவிப்பார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் தலைவர்களாகவும், பாதுகாவலர்களாகவும் போலியான போர்வையை போர்த்திக் கொள்வார்கள். முஸ்லிம் வாக்காளர்களும் உணர்ச்சிவசப்பட்டு வாக்குகளை வழங்குவார்கள். தேர்தல் வாக்கெடுப்பு முடிந்த கையுடன் முஸ்லிம்களை முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வழமைபோல் கைவிட்டுவிடுவார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அதிகாரம், இருப்பு, பாதுகாப்பு, இனப் பிரச்சினைக்கான தீர்வு, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது போன்றவற்றில் கொள்கை இருக்க வேண்டும். அதனை யாருக்காகவும் மாற்றக் கூடாது. அக்கொள்கைகள் முஸ்லிம் சமூகத்திற்கானதாக இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்படி விடயங்களில் எந்தவொரு கொள்கையுமில்லாது இருக்கின்றார்கள். காலத்திற்கு காலம் அமையும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது, அமைச்சர் பதவிகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்வது, தங்களையும் தங்களைச் சூழ்ந்திருக்கும் ஆமாம் சாமி கும்பல்களையும் செல்வந்தர்களாக்குவதனையே உறுதியான கொள்கையாகக் கொண்டுள்ளார்கள். இத்தகையவர்கள் உள்ளவரை முஸ்லிம்கள் தமது அபிலாஷைகளை அடைய முடியாது.
ஒரு சமூகம் தமது அபிலாஷைகளை அடைய வேண்டுமாயின் நல்ல தலைவர்கள் தலைமை வகிக்க வேண்டும். தலைவர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் இருந்தால் மாத்திரமே ஒரு சமூகத்தினால் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இன்று முஸ்லிம்களுக்கு தலைவர்கள் உள்ளார்கள். ஆனால், அவர்களை நல்லவர்கள், வல்லவர்கள் என்று அழைக்க முடியாதவாறே அவர்களின் கொள்கைகள் உள்ளன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM