ஜனாதிபதி சமஷ்டியை எதிர்க்காவிடினும் அதனை தீர்வாக வழங்க அஞ்சுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்

Published By: Vishnu

23 Jul, 2023 | 06:13 PM
image

நேர்காணல் - நா.தனுஜா

“சமஷ்­டிக்கு சிங்­கள அர­சியல் கட்­சிகள் தயா­ரில்லை. சமஷ்டி என்றால் பிரி­வினை என்று அவர்கள் மத்­தி­யிலும், சிங்­கள மக்­க­ளி­டை­யேயும் ஆழ­மாகப் பதிந்­தி­ருக்­கின்­றது. எனவே சமஷ்­டியை எதிர்க்­கா­வி­டினும், வெளிப்­ப­டை­யான முறையில் சமஷ்­டியை ஒரு தீர்­வாகத் தரு­வ­தற்கு ஜனாதிபதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அஞ்­சுவார். சிங்­கள மக்­களின் வாக்­கு­களை இழக்­க­நே­ரிடும், அனைத்து விதங்­க­ளிலும் தோல்­வியைத் தழு­வ ­நே­ரிடும் என்ற எண்ணம் அதற்குக் கார­ண­மாக இருக்­கலாம்” என­தமிழ் மக்கள் தேசியக் கூட்­ட­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

படப்பிடிப்பு: - எஸ்.எம்.சுரேந்திரன்

'வீர­கே­சரி' வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட நேர்­கா­ணலில் இவ்­வாறு தெரி­வித்த அவர், தமிழ்­மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு, தமிழ்த்­தே­சிய கட்­சிகள் ஒற்­று­மைப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம், சமஷ்டி குறித்த ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு, இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வழி­முறை என்­பன உள்­ள­டங்­க­லாகப் பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் பகிர்ந்­து­கொண்டார். அவ­ரு­ட­னான நேர்­கா­ணலின் முழு­மை­யான வடிவம் வரு­மாறு:

கேள்வி : பொலிஸ் அதி­கா­ர­மின்றி 13 ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான ஜனா­தி­ப­தியின் யோச­னைக்கு நீங்கள் இணங்­கி­யி­ருக்­கின்­றீர்கள். அது முழு­மை­யான அதி­கா­ரப்­ப­கிர்­வாக அமை­யுமா?

பதில் : 13 ஆவது திருத்­தத்தின் ஊடாக முழு­மை­யான அதி­கா­ரப்­ப­கிர்வு எக்­கா­லத்­திலும் கிடைக்கமாட்­டாது என்­பதில் மாற்­றுக்­க­ருத்­தில்லை. ஆனால் இப்­போது பொலிஸ் அதி­கா­ரங்­களைத் தர­மு­டி­யாது என்று ஜனா­தி­பதி கூற­வில்லை. மாறாக, அது­பற்றிப் பிறகு பேசிக்­கொள்வோம் என்­றுதான் கூறினார். அவர் அவ்­வாறு கூறி­ய­தற்கு ஒரு காரணம் உண்டு. பொலிஸ் அதி­காரம் குறித்து இப்­போது விவா­திக்க ஆரம்­பித்து, அதனைப் பேசு­பொ­ரு­ளாக்­கினால் பின்னர் 13 ஆவது திருத்­தத்­தையே நடை­மு­றைப்­ப­டுத்­த­மு­டி­யாத நிலை­யேற்­படும். எனவே 13 ஆவது திருத்­தத்தில் பொலிஸ் அதி­கா­ரத்தை விடுத்து, ஏனைய அதி­கா­ரங்­களை மேலும் பலப்­ப­டுத்தி முன்­கொண்டு செல்வோம் என்றும், பொலிஸ் அதி­காரம் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் அங்­கம்­வ­கிக்கும் கட்­சி­க­ளுடன் பேசி ஒரு முடி­வுக்கு வருவோம் என்­றும்தான் ஜனா­தி­பதி கூறு­கின்றார். எனவே அவர் பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­க­மாட்டார் என்று என்னால் கூற­மு­டி­யாது. 

சில விட­யங்­களைப் பொறுத்­த­மட்டில் 'இது கிடைக்கும், இது கிடைக்­காது. இது இப்­ப­டித்தான் நடக்கும், நடக்­காது' என்று நாம் பகி­ரங்­க­மா­கப்­பேசி, விவா­தப்­பொ­ரு­ளாக்­கக்­கூ­டாது. உதா­ர­ண­மாக, பல வரு­ட  ­கா­ல­மாகத் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சியல் கைதிகள் இருவர் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் அமை­தி­யான முறையில், காதோடு காது வைத்­தாற்­போல விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இவ்­வி­ட­யத்தில் 'ஏன் இப்­போது விடு­வித்­தீர்கள்? ஏன் முன்னர் இதைச் செய்­ய­வில்லை?' என்று நாம் பர­வ­லாகப் பேசினால், அது இரு பக்­கமும் விவா­தப்­பொ­ரு­ளா­கி­விடும். எனவே இப்­போது ஜனா­தி­பதி சில விட­யங்­களை அமை­தி­யான முறையில் படிப்­ப­டி­யாகச் செய்­கின்றார். அவ்­வி­ட­யங்­களில் நாமும் குறிப்­ப­றிந்து நடந்­து­கொள்­ள­வேண்டும். முதலில் 13 ஐப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். அதனை மேலும் வலுப்­ப­டுத்­து­வதும், வலு­வி­ழக்­கச்­செய்­வதும் எங்­க­ளு­டைய கைக­ளில்தான் இருக்­கின்­றது.

கேள்வி :  ஆனால், ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களில் கூறப்­ப­டு­வதும், வடக்கு கிழக்கில் அரங்­கேறும் யதார்த்த நிலை­வ­ரமும் வெவ்­வே­றா­ன­வை­யாக இருக்­கின்­றன. எனவே, 13 இற்கு இணங்­கி­விட்டால், பின்னர் சமஷ்டி குறித்த பேச்­சுக்கே இட­மி­ருக்­காது என்ற கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தின் கருத்து நியா­ய­மா­ன­தல்­லவா?

பதில் - ஒரு­போதும் 13 ஆவது திருத்­தச்­சட்டம் எமது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வாக அமை­யாது. இருப்­பினும், அர­சி­ய­ல­மைப்பின் ஓரங்­க­மாக இருக்­கக்­கூ­டிய அச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு கோரு­வதில் எந்தப் பிழையும் இல்லை. இருக்­கின்ற சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதால் எமது வருங்­கால இலக்­குகள் பாதிக்­கப்­படும் என்று கூறு­வது தவறு. மாறாக, சர்­வ­தேச சமூ­கத்­து­டனும், இரா­ஜ­தந்­தி­ரி­க­ளு­டனும் பேச்சு­வார்த்­தை­களை நடத்­து­வதன் ஊடா­கவும், அடுத்­த­கட்ட நகர்­வுகள் பற்­றிய கருத்­த­ரங்­கு­களை நடத்­து­வதன் மூலமும் வருங்­கால இலக்­கான இறு­தித்­தீர்வை அடைந்­து­கொள்­வதை முன்­னி­றுத்­திய போராட்­டத்தைத் தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்டும். அதற்கும், 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கும் இடையில் எவ்­வித தொடர்பும் இல்லை.

எனவே மேற்­கு­றிப்­பிட்­ட­வா­றான கருத்­துக்­களால் எமக்கு இதுவும் கிடைக்­காமல், அதுவும் கிடைக்­காமல் போகப்­போ­கின்­றது. ஏனெனில் 2018 ஆம் ஆண்­டி­லி­ருந்து மாகா­ண­ ச­பைத்­தேர்­தல்கள் நடை­பெ­ற­வில்லை. அவர்கள் அத்­தேர்­தலைத் தொடர்ந்து நடத்­தா­ம­லேயே விட்­டு­வி­டு­வார்கள். எனவே 'எமக்கு சமஷ்டி ஒன்றே தீர்வு. நாம் வேறெ­த­னையும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம்' என்று நாம் கூறிக்­கொண்­டி­ருக்கும் அதே­வேளை, எமது காணிகள் பறி­போ­கின்­றன. வட, கிழக்கு மாகா­ணத்­தொ­டர்ச்சி பறி­போ­கின்­றது. அங்கு சிங்­களக் குடி­யேற்­றங்கள் உரு­வா­கின்­றன. எனவே, இவற்றைத் தடுப்­ப­தற்கு எமது மக்­க­ளுக்கு அதி­காரம் தேவை. ஆகவே, குறைந்­த­பட்சம் தற்­போ­துள்ள சட்­டத்தின் கீழி­ருக்கும் அதி­கா­ரங்­க­ளை­யேனும் மக்­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். அத­னால்தான் நான் 13 ஐ நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு கூறு­கின்­றேனே தவிர, அதுவே தமிழ்­மக்­க­ளுக்­கான இறு­தித்­தீர்­வென்று நான் ஒரு­போதும் கூற­வில்லை.

கேள்வி : மாகா­ண­ ச­பை­களை வலுப்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தும் நீங்கள், மறு­புறம் மாகா­ண­ச­பைகள் தொடர்­பான ஆலோ­சனை சபை முறை­மையைப் பரிந்­து­ரைக்­கின்­றீர்கள். மாகா­ண­சபைத் தேர்­தல்­களைக் காலந்­தாழ்த்­து­வதை முன்­னி­றுத்தி, ஜனா­தி­ப­தியின் யோச­னைக்கு அமை­வா­கவே நீங்கள் இதனைச் செய்­வ­தாக விமர்­ச­ன­மொன்று முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்  : இது மாகா­ண­ச­பைத்­தேர்­தல்­களைப் பிற்­போ­டு­வ­தற்­கான முயற்சி என்று கூறு­கின்­றீர்கள். அவ்­வா­றெனில் 2018 ஆம் ஆண்­டி­லி­ருந்து மாகா­ண­ச­பைத்­தேர்­தல்கள் பிற்­போ­டப்­பட்­ட­மைக்கு நான் தான் கார­ணமா? எனவே இதற்கும் எனக்கும் எவ்­வித தொடர்­பு­மில்லை.

அடுத்­த­தாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க எனக்கு ஒன்­றைக்­கூறி, அவ­ருக்கு ஏற்­ற­வாறு பேச­வேண்­டிய அவ­சியம் எனக்­கில்லை. மாறாக, எல்லா விதத்­திலும் அவ­ருக்கு அறி­வுரை வழங்­கக்­கூ­டிய நிலை­யி­லேயே நான் இருக்­கின்றேன்.

இந்­நி­லையில் அர­சி­ய­ல­மைப்பின் 154 (எல்) மற்றும் 154 (எம்) ஆகிய சரத்­துக்­களின் பிர­காரம் மாகா­ண­ச­பைகள் செய­லற்று இருக்­கும்­போது ஜனா­தி­பதி சில நட­வ­டிக்­கை­களை எடுக்­கலாம் என்று கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே, அத­னைப்­ப­யன்­ப­டுத்தி மாகா­ண­ச­பைகள் செய­லற்று இருக்கும் இவ்­வே­ளையில், அவற்றை மேலும் எவ்­வாறு பலப்­ப­டுத்­தலாம் என்று சிந்­திக்கும் நோக்­கி­லேயே நாம் இந்த முன்­மொ­ழிவைச் செய்­தி­ருக்­கின்றோம். 1987 ஆம் ஆண்­டி­லி­ருந்து தற்­போ­து­வரை மாகா­ண­ச­பைச்­சட்­டத்தில் பல்­வேறு அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்டும், பறிக்­கப்­பட்டும் இருக்­கின்­றன. அவ்­வ­தி­கா­ரங்­களை மீண்டும் மாகா­ண­ ச­பை­க­ளுக்கு வழங்கி, அக்­கட்­ட­மைப்பை எவ்­வாறு பலப்­ப­டுத்­தலாம் என்று ஆராய்­வ­தற்­கான ஆலோ­சனை சபை குறித்த முன்­மொ­ழி­வையே நாம் முன்­வைத்­தி­ருக்­கின்றோம். அதனை ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றார். எனவே, நாம் வழங்­கிய யோச­னையை அவர் பயன்­ப­டுத்­து­கின்­றாரே தவிர, அவர் கூறு­வ­துபோல் நான் எத­னையும் செய்­ய­வில்லை.

கேள்வி : அந்த ஆலோ­சனை சபைக்கு நீங்கள் சில­ரது பெயர்­களை முன்­மொ­ழிந்­தி­ருப்­ப­தாக அறி­ய ­மு­டி­கின்­றது. இது உண்­மையா?

பதில் : ஆம், நான் அந்தப் பெயர்­களை  கடந்த புதன்­கி­ழமை இரவு  அனுப்­பி­வைத்தேன். இருப்­பினும் அவர்­க­ளு­டைய பெயர்கள் அர­சாங்­கத்­தினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை அறிந்­து­கொண்ட பின்னர் தான், என்னால் அப்­பெ­யர்­களை வெளியி­ட­ மு­டியும்.

கேள்வி : எத்­தனை பேரின் பெயர்­களை  முன்­மொ­ழிந்­தி­ருக்­கின்­றீர்கள்? அதற்­கான காரணம் என்ன?

பதில்:- 5 பேரின் பெயர்­களை முன்­மொ­ழிந்­தி­ருக்­கின்றேன். அந்த ஐவரும் வடக்கு,  ­கி­ழக்கு மற்றும் கிழக்கு மாகா­ண ­ச­பைகள் இயங்­கிய காலப்­ப­கு­தியில், அவற்றில் அங்­கம்­வ­கித்து, போதிய அனு­பவம் பெற்­ற­வர்கள். எனவே மாகா­ண­ச­பைச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும்­போது என்­னென்ன பிரச்­சி­னைகள் ஏற்­ப­டக்­கூடும், அவற்றை எவ்­வாறு தவிர்க்­க­மு­டியும் என்­பன பற்றி ஆலோ­சனை வழங்­கக்­கூ­டி­ய­வர்கள் என்­ப­தா­லேயே நான் அவர்­க­ளது பெயர்­களை முன்­மொ­ழிந்­தி­ருக்­கின்றேன். அந்த ஆலோ­சனை சபை கூறு­வ­து­போன்று அர­சாங்கம் செயற்­பட்டால், எமக்கு சில நன்­மைகள் கிடைக்கும். அவற்றைச் செய்­வ­தாக ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

கேள்வி   : ஏற்­க­னவே அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மாகா­ண­சபை முறைமை உரி­ய­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில், மாகா­ண­ச­பைத்­தேர்­தலை நடத்­து­வதன் மூலம் அதனை இயங்­கச்­செய்­வது அல்­லவா முதற்­தேவை?  இயங்­கு­நி­லையில் இல்­லா­த­வொன்றை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை காலத்தை இழுத்­த­டிப்­புச்­செய்­வ­தற்­கான முயற்­சி­யாகக் கரு­தலாம் அல்­லவா?

பதில் : மாகா­ண­சபைத் தேர்­தல்­களை நடத்­தப்­போ­வ­தாக ஜனா­தி­பதி அறி­வித்­தி­ருக்­கின்றார். அவர் முதலில் மாகா­ண­சபைத் தேர்­தல்­களை நடத்­து­வாரா, அல்­லது ஜனா­தி­ப­தித்­தேர்­தலை நடத்­து­வாரா என்­பது பற்றி எனக்குத் தெரி­யாது. ஆனால் மாகா­ண­ச­பைத்­தேர்­தல்­களை நடத்­து­வ­தாக அவர் உத்­த­ர­வாதம் வழங்­கி­யுள்ளார். அவ்­வாறு மாகா­ண­சபைத் தேர்­தல்­களை நடத்தும் பட்­சத்தில், குறைந்­தி­ருக்கும் அவற்றின் அதி­கா­ரங்­களைக் கூட்­டு­வ­தற்­கா­கத்தான் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே எப்­போது தேர்தல் நடத்­தப்­பட்­டாலும், இந்­ந­ட­வ­டிக்கை மூலம் பலப்­ப­டுத்­தப்­பட்ட மாகா­ண­ச­பைகள் எமக்கு நன்­மை­யைத்தான் தரு­மே­யன்றி, தீமையைத் தராது. கடந்த 2018 ஆம் ஆண்­டி­லி­ருந்து மாகா­ண­சபைத் தேர்­தல்கள் தாம­தப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டுதான் இருக்­கின்­றன. அவற்றை மேலும் 6 அல்­லது 7 மாதங்­க­ளுக்குத் தாம­தப்­ப­டுத்­து­வதால் எந்த நட்­டமும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. எனவே ‘ஆக்­கப்­பொ­றுத்­த­வ­னுக்கு ஏன் ஆறப்­பொ­றுக்­க­மு­டி­யாது’ என்­பது தான் கேள்வி.

கேள்வி : மாகா­ண­ச­பை­களைப் பலப்­ப­டுத்­து­வது குறித்து இவ்­வ­ளவு தூரம் அக்­க­றை­கொள்ளும் நீங்கள், வட­ மா­காண முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­வ­கித்த காலப்­ப­கு­தியில் அப்­ப­த­வியை செயற்­தி­ற­னான முறையில் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வில்லை என்ற விமர்­சனம் உண்டு. உங்­கள்­மீது தமிழ்­மக்கள் வைத்­தி­ருந்த நம்­பிக்­கை­யையும், எதிர்­பார்ப்­பையும் நீங்கள் பூர்த்­தி­செய்யத் தவ­றி­விட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றதே?

பதில் :  அது உண்மை. சுமார் 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக சட்ட மற்றும் நீதித்­து­றையில் பணி­யாற்­றிய நான், அர­சி­ய­லுக்குள் புதி­தாகாத்தான் பிர­வே­சித்தேன். எனவே கல்வி, சட்டம் சார்ந்து நான் அறிந்­தி­ருந்த விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் சில சிக்­கல்கள் இருந்­தன. அதனை நான் முழு­மை­யாக அறிந்­தி­ருக்­க­வில்லை. அதற்கும் மேலாக என்­னோடு சேர்ந்­தி­ருந்­த­வர்கள் பற்­றிய போதி­ய­ளவு புரிந்­து­ணர்வும் எனக்கு இருக்­க­வில்லை. எந்தப் புற்­றுக்குள் எந்தப் பாம்பு இருக்­கின்­றது என்­பதை நான் அப்­போது அறிந்­தி­ருக்­க­வில்லை. ஆனால், என்­னுடன் இருந்த பலரே என்னை முன்­னே­ற­வி­டக்­கூ­டாது என்றும், என்னை இப்­ப­ணியில் வெற்­றி­ய­டைய விடக்­கூ­டாது என்றும், மாகா­ண­சபை முறைமை வெற்­றி­ய­டைந்தால் அத­னுடன் நின்­று­விடும். சமஷ்­டியைக் கோர­மு­டி­யாது என்றும் பல­வி­த­மான சிந்­த­னை­க­ளுடன் என்னை பல பிரச்­சி­னை­க­ளுக்குள் தள்­ளி­யி­ருந்­தார்கள். 

அவ்­வா­றி­ருப்­பி­னும்­கூட, முத­ல­மைச்சர் என்ற ரீதியில் என்னால் இயன்ற பல­வற்­றைச்­செய்து, அவற்றில் வெற்­றி­கண்டேன் என்­றுதான் கூற­வேண்டும். 

அப்­போ­தைய சூழ்­நிலை மற்றும் பின்­ன­ணியை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நோக்­கு­கையில், நான் செய்­தவை மிகவும் சிறப்­பாக அமைந்­தன என்­பதே என்­னு­டைய கருத்து. அவை எனக்குப் பெரு­மை­யையும் தன்­னம்­பிக்­கை­யையும் அளித்­தன. இப்­போது நான் போதி­ய­ளவு அனு­பவம் பெற்­றி­ருக்­கின்றேன். எனவே இது­கு­றித்துப் பேசு­கின்றேன்.

கேள்வி : ஆனால், உங்­களை அர­சி­ய­லுக்குள் அழைத்­து­வந்த இரா.சம்­பந்தன் மற்றும் மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோ­ரை­விட்டு நீங்கள் பிரிந்­தமை, தமிழ் மக்கள் உங்­கள்­மீது வைத்­தி­ருந்த நம்­பிக்­கை­யிலும் உங்கள் அர­சியல் பய­ணத்­திலும் சரிவை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக உணர்­கின்­றீர்­களா?

பதில் : நம்­பிக்கை குறித்து எனக்குத் தெரி­ய­வில்லை. அது மக்­க­ளிடம் இருக்­க­வேண்­டிய விடயம். ஆனால் தமிழ் பின்­பு­லத்தில் வளர்ந்த என்னை கம்பன், வள்­ளுவன், ஒள­வை­யாரின் கருத்­துக்கள் மிகவும் பாதித்­தி­ருக்­கின்­றன. அதன்­படி 'மதி­யாதார் முற்றம் மதித்­தொ­ருகால் சென்று மிதி­யாமை கோடி பெறும்' என்று ஒள­வையார் கூறி­ய­தற்கு இணங்க, என்னை மதிக்­கா­த­வர்கள் மத்­தி­யிலே, என்னைக் கைப்­பொம்­மை­யாக மாற்­ற­வேண்டும் என்று நினைப்­ப­வர்கள் மத்­தி­யிலே இருந்­து­கொண்டு என்னால் என்ன செய்­ய­மு­டியும்? எனவே அதி­லி­ருந்து விடு­ப­ட­வேண்­டி­யி­ருந்­தது. அதன்­படி என்னை மதிக்­கா­த­வர்கள் மற்றும் நம்­பா­த­வர்­க­ளி­ட­மி­ருந்து விலகி, இப்­போது என்­னு­டைய தனிப்­பட்ட கட்­சியை நான் திறம்­பட நடத்­திச்­செல்­கின்றேன்.

கேள்வி : உங்­களை நம்­பா­த­வர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­ட­மு­டி­யாது என்று கூறும் நீங்கள், 'பிள­வு­பட்டும் நிற்கும் தமிழ்த்­த­லை­மைகள் எமக்கு அர­சியல் தீர்வைப் பெற்­றுத்­த­ரு­வார்கள்' என தமிழ்­மக்கள் நம்ப வேண்­டு­மென எதிர்­பார்ப்­பது எந்த விதத்தில் நியாயம்?

பதில் : எங்­கி­ருந்­தாலும் தமி­ழர்கள் கெட்­டிக்­கா­ரர்கள். எனவே அவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தமக்­கேற்­ற­வாறு 'இதுதான் சரி' என்ற நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருப்­பார்கள். ஆனால் 'நான் கூறு­வது மட்டும் தான் சரி. மற்­ற­வர்கள் கூறு­வது, செய்­வது எல்­லாமே பிழை' என்று நிலைப்­பாட்டை எடுக்­கும்­போ­துதான் எமக்குள் முரண்­பா­டுகள் வரு­கின்­றன. தமிழ்த்­தே­சிய கட்­சிகள் அனைத்தும் அடிப்­ப­டை­யிலே சமஷ்­டி­யைத்தான் கோரு­கின்­றன. 

ஆனால், அவற்றைக் கோரு­கின்ற, செயற்­ப­டுத்­து­கின்ற விதத்­தில்தான் வேறு­பா­டுகள் உள்­ளன. ஆனால் இந்த முரண்­பா­டு­களைத் தாண்டி, அடிப்­படைத் தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்­வதை முன்­னி­றுத்தி அனைத்துத் தமிழ்த்­த­ரப்­புக்­களும் ஒரு­மித்துச் செயற்­ப­டு­கின்ற காலம் விரைவில் வரும். அவ்­வாறு வந்­தே­யாக வேண்டும். நாம் தொடர்ந்து இவ்­வாறு பிரிந்­தி­ருந்து பேசிக்­கொண்­டி­ருக்க முடி­யாது. ஆகவே, எம்­மத்­தியில் அடிப்­ப­டை­யிலே எவ்­வித வேறு­பா­டு­களும், முரண்­பா­டு­களும் இல்லை. அதன்­படி வெகு­வி­ரைவில் தமிழ்­மக்­களின் பிரச்­சி­னை­களை நாம­னை­வரும் ஒன்­று­சேர்ந்து அர­சாங்­கங்­க­ளிடம் தெரி­விக்க வேண்­டிய கடப்­பாடு எங்­களை வந்­த­டையும் என்­ப­துதான் எனது எதிர்­பார்ப்பு.

கேள்வி : ஜனா­தி­ப­தி­யிடம் இந்­தி­யப்­பி­ர­தமர் சமஷ்­டியை வலி­யு­றுத்­த­வேண்டும் என்­பதே ஏனைய தமிழ்த்­த­லை­மை­களின் வேண்­டு­கோ­ளாக இருக்­கின்­றது. இந்­திய நிர்­வா­கக்­கட்­ட­மைப்பு முழு­மை­யான சமஷ்­டியைக் கொண்­டி­ராத பின்­ன­ணியில், இந்­தியா இலங்­கையில் சமஷ்­டிக்கு அழுத்தம் வழங்­கு­மென எதிர்­பார்க்­க­மு­டி­யுமா? (இந்த நேர்­காணல் ஜனா­தி­ப­திக்கும் இந்­தி­யப்­பி­ர­த­ம­ருக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைக்கு முன்னர் எடுக்­கப்­பட்­டது)

பதில் : இல்லை, எதிர்­பார்க்­க­மு­டி­யாது. ஏனெனில், சமஷ்டி குறித்து இந்­தி­யப்­பி­ர­தமர் மோடி பேசினால், 'தய­வு­செய்து அது­பற்றிப் பேச­வேண்டாம். அது எமது உள்­நாட்டு விடயம்' என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் உட­ன­டி­யாகக் கூற­மு­டியும். இந்த நாட்­டிலே எதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று இந்­தி­யாவால் கூற­மு­டி­யாது. ஆனால், 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் அமு­லாக்கம் குறித்து இந்­தி­யாவால் பேச­மு­டியும்.

கேள்வி  : சமஷ்டி குறித்து வலி­யு­றுத்­தினால் அதனை ஜனா­தி­பதி உட­ன­டி­யாக மறு­த­லிக்­க­மு­டியும் என்­கி­றீர்கள். அவ்­வா­றெனில், ரணில் விக்­கி­ர­ம­சிங்க சமஷ்­டிக்குத் தயா­ரில்லை என்று கூறு­கின்­றீர்­களா?

பதில் - சமஷ்­டிக்கு சிங்­கள அர­சியல் கட்­சிகள் தயா­ரில்லை. சமஷ்டி என்றால் பிரி­வினை என்று அவர்கள் மத்­தி­யிலும், சிங்­கள மக்­க­ளி­டை­யேயும் ஆழ­மாகப் பதிந்­தி­ருக்­கின்­றது. 

இதற்கு போதி­ய­ளவு புரி­த­லின்மை உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்கள் உள்­ளன. சமஷ்டி என்றால் என்­ன­வென்று ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்குத் தெரிந்­தா­லும்­கூட, இவ்­வி­ட­யத்தில் மக்­க­ளு­டைய எண்­ணங்­க­ளையும் அவர் கருத்திற் கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. எனவே சமஷ்­டியை எதிர்க்­கா­வி­டினும், வெளிப்­ப­டை­யான முறையில் சமஷ்­டியை ஒரு தீர்­வாகத் தரு­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க அஞ்­சுவார். சிங்­கள மக்­களின் வாக்­கு­களை இழக்­க­நே­ரிடும், அனைத்து விதங்­க­ளிலும் தோல்­வியைத் தழு­வ­நே­ரிடும் என்ற எண்ணம் அதற்குக் கார­ண­மாக இருக்­கலாம்.

கேள்வி - 'கோட்சூட்' அணிந்த ஜன­நா­ய­க­வா­தி­யாக நோக்­கப்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அண்­மை­ய­கால நட­வ­டிக்­கைகள் ('அர­க­லய' போராட்டம் மீதான அடக்­கு­மு­றைகள், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டப் பிர­யோகம் உள்­ளிட்­டவை) அவ­ருக்குள் சர்­வா­தி­காரம் குடி­கொண்­டி­ருக்­கி­றதா என்ற சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது அல்­லவா?

பதில்  : ஒருவர் நல்­ல­வ­ராக இருக்­கும்­போது அவர் அடுத்­த­டுத்த கட்­டங்­களில் எவ்­வாறு செயற்­ப­டுவார் என்­பதை அனை­வ­ராலும் புரிந்­து­கொள்­ள­மு­டியும். எனவே, அவர் நல்­லவர் என்ற முறை­யிலே சில நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­போது, அடுத்­த­கட்டம் குறித்து எதி­ரிகள் தெரிந்­து­கொண்டு, அதற்கு முட்­டுக்­கட்­டை­யாக செயற்­ப­டு­கையில் அவ­ரது முன்­னேற்றம் தடைப்­ப­டு­கின்­றது. சில நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்டால், அவற்றை எடுத்­துத்தான் ஆக­வேண்டும். ஜனா­தி­பதி செய்­த­வற்றை நான் சரி­யென்று கூற­வில்லை. ஆனால், அவர் அழு­வ­து­போன்று கூறிய விட­யங்கள் எனக்கு நினை­வி­ருக்­கின்­றன. 'எங்கும் இல்­லாத பத்­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட புத்­த­கங்­களை நான் வைத்­தி­ருந்தேன். அவ்­வ­ளவு புத்­த­கங்­க­ளையும் எரித்­து­விட்­டார்­களே' என்று கூறினார். அது அவரை மிகுந்த அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­விட்­டது. நல்­ல­வர்­களும் சில­ச­ம­யங்­க­ளிலே கெடு­தி­யான செயல்­களில் ஈடு­ப­ட­நேர்­கின்­றது. எனவே, ரணில் விக்கி­ர­ம­சிங்­கவின் கல்வி, அவ­ரது பின்­னணி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நோக்­கு­கையில், அவர் ஒரு ஜன­நா­ய­க­வா­தி­யா­கத்தான் தென்­ப­டு­கின்றார். 'பட்­ட­லந்த முகாமை' நினைத்தால் எமக்குப் பெரும் மன­வ­ருத்­த­மா­கத்தான் இருக்கும். ஆனால், அந்தக் கால­கட்­டத்­தையும் நாம் பார்க்­க­வேண்டும். ஒருவர் எல்லா சூழ்­நி­லை­க­ளிலும் ஒரே­வி­த­மாக இருக்­க­வேண்டும் என்று எதிர்­பார்க்­க­ மு­டி­யாது. எதிர்­பார்க்­கவும் கூடாது.

கேள்வி  : அப்­ப­டிப்­பார்த்தால் ஹிட்­ல­ரையும், அவ­ரது செயற்­பா­டு­க­ளை­யும்­கூட நியா­யப்­ப­டுத்­தி­வி­டலாம் அல்­லவா?

பதில் : நிச்­ச­ய­மாக. ஆனால், ஹிட்லர் ஜன­நா­ய­க­மு­றையில் தெரி­வாகி, பின்னர் தனது தனிப்­பட்ட குரோ­தங்­களை வெளிக்­காட்டத் தொடங்­கினார். ஹிட்­லரின் பக்­கத்­தி­லி­ருந்து பார்த்தால் அவை சரி­யாக இருக்­கக்­கூடும். ஆனால், நாம் எக்­கா­லத்­திலும் அவற்றைச் சரியென்று கூறமுடியாது. ஜனாதிபதியின் விடயத்திலும், அவர் செய்த பிழைகளை நான் சரியென்று கூறவில்லை. மாறாக இத்தகைய சூழ்நிலைகளில் நாம் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் என்னவென்றுதான் கூறினேன்.

கேள்வி   : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் மிகுந்த முக்கியத்துவம்  பெறும் மனிதப் புதைகுழிகளை எவ்வாறு கையாள வேண்டும்?

பதில் : இம்­ம­னி­தப்­பு­தை­கு­ழி­களை அகழ்­வ­தற்கு போதிய நிதி இல்லை என்று கூறப்­பட்­டி­ருக்கும் நிலையில், ஜனா­தி­ப­தி­யுடன் நடை­பெற்ற சந்­திப்­பின்­போது இது­பற்றிப் பேசப்­பட்­டது. எனவே மனி­தப்­பு­தை­குழி அகழ்­வுக்கு அவ­சி­ய­மான நிதியை வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி உத்­த­ர­வாதம் அளித்­தி­ருக்­கின்றார். அதே­போன்று இந்­ந­ட­வ­டிக்­கை­களை ஐக்­கிய நாடுகள் சபையின் நிபு­ணர்­களின் பங்­கேற்­புடன் முன்­னெ­டுக்­கலாம் என்ற யோச­னையை முன்­வைத்தேன். இருப்­பினும் அதற்குப் பதில் வழங்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

எது எவ்­வா­றெ­னினும், இவற்றைச் செய்­த­வர்கள் யார் என்ற உண்மை வெளியே வரு­வது ஜனா­தி­ப­திக்கு நன்­மையைத் தரும் என்று நான் கரு­து­கின்றேன். இம்­ம­னி­தப்­பு­தை­கு­ழிகள் பற்­றிய விசா­ர­ணைகள் உரி­ய­வாறு மேற்­கொள்­ளப்­பட்டு, அவற்றின் முடி­வுகள் வெளி­யா­கும்­போது அதில் ஜனா­தி­ப­திக்குத் தொடர்­பில்லை என்­பதும், வேறு யாருக்குத் தொடர்­புண்டு என்­பதும் வெளியானால், அதன் தாக்கம் அடுத்துவரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது.

கேள்வி : இந்த நேர்­காணல் வெளி­யாகும் தினத்­தன்று, 'கறுப்பு ஜுலை' கல­வ­ரங்கள் அரங்­கேறி 40 ஆண்­டுகள் பூர்த்­தி­ய­டை­கின்­றன. இன்­னமும் இனங்­க­ளுக்கு இடை­யி­லான நம்­பிக்­கை­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் அடை­யப்­பட்­டுள்ள தோல்விக்குக் காரணம் என்ன?

பதில் : எங்­க­ளு­டைய வர­லாறு சிங்­கள மக்­க­ளுக்கு சரி­யாகப் புகட்­டப்­ப­ட­வில்லை. எப்­போது எங்­க­ளு­டைய வர­லாறு அவர்­க­ளுக்கு சரி­யாகப் புகட்­டப்­ப­டு­கின்­றதோ, எப்­போது அவர்கள் அதனைச் சரி­யாகத் தெரிந்­து­கொள்­கின்­றார்­களோ, எப்­போது அவர்­க­ளுக்குத் தமிழ்­மக்­கள்­மீது இருக்கும் அசூயை அகழ்­கின்­றதோ, அப்­போது சிங்­கள, - தமிழ் மக்­க­ளி­டையே சுமு­க­மான முறையில் நல்­லு­றவு கட்­டி­யெ­ழுப்­பப்­படும். 

ஆனால், அதற்கு எம்­மு­டைய வர­லாறு மீண்டும் எழு­தப்­ப­ட­வேண்டும். இதனை நான் ஜனா­தி­ப­தி­யி­டமும் கூறி­யி­ருக்­கின்றேன். சரித்­திர ஆசி­ரி­யர்கள் அடங்­கிய குழு­வொன்றை நிய­மித்து, அதனைச் செய்வோம் என்று அவரும் கூறி­யி­ருக்­கின்றார். அது சாத்­தி­ய­மானால், தமிழ்­மக்­களின் உண்­மை­யான வர­லாற்றை சிங்கள மக்கள் சரியாக அறிந்தால், அவர்களது மனங்களிலே மாற்றம் ஏற்படக்கூடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த வீடுகள் சந்தேகநபர்களை சட்டவிரோதமாக தடுத்துவைப்பதற்கும்...

2025-03-15 09:52:48
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு...

2025-03-14 20:24:33
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தின் வீடுகளை களனிபொலிஸின்...

2025-03-14 12:22:27
news-image

தொந்தரவு தரும் மீனவர் தகராறுக்கு தீர்வு...

2025-03-14 08:57:28
news-image

அரசாங்கம் அதன் மந்தவேகத்துக்கு விளக்கம் தரவேண்டியது...

2025-03-13 14:14:51
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவை 58...

2025-03-12 13:39:38
news-image

யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே?-

2025-03-11 16:44:44
news-image

அட்லாண்டிக்கில் ஏற்படும் பிளவு

2025-03-11 12:02:06
news-image

அண்ணாவையும் எம்.ஜி. ஆரையும் போன்று தன்னாலும்...

2025-03-11 09:26:14
news-image

தடைகள் தகர்க்கப்படுகின்றனவா அல்லது சுவர்கள் எழுப்பப்படுகின்றனவா?

2025-03-10 19:13:31
news-image

கிழக்கில் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் மருத்துவர் தன்மீதான...

2025-03-10 13:35:49
news-image

வனவளத் திணைக்கள அதிகாரிகள் வாகரையில் பற்றவைத்த...

2025-03-09 16:15:23