எம்.எஸ்.தீன்
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள இன்றைய நிலையில் கூட, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகள் குறித்து நாளாந்தம் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் தரப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்று ஒரு தரப்பினரும், 13இல் உள்ளதை விடவும் கூடிய அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டுமென்று இன்னுமொரு தரப்பினரும், சமஷ்டி முறைமை ஏற்படுத்த வேண்டுமென்று மற்றொரு தரப்பினரும் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
அதே வேளை எல்லாத் தரப்பினரும் வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமென்றே தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இக்கருத்துக்களின் மூலமாக தமிழர்கள் மத்தியில் பல அரசியல் கட்சிகளும், அவற்றிடையே கருத்து முரண்பாடுகளும் உள்ள போதிலும் இனப் பிரச்சினைக்கான தீர்வு முன் வைக்கப்பட வேண்டும்.
அதில் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்தில் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதேவேளை, மலையகத் தமிழ் பிரதிநிதி களும் தங்களின் இருப்பு, குடியிருப்பு மற்றும் காணிப் பிரச்சினைகள், சம்பளப் பிரச்சினைகள் உட்பட அரசியல் அதிகாரங்கள் குறித்தும் பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும், ஆட்சியாளர்களுடனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சிங்களத் தலைவர்களில் பலரும் பௌத்த சிங்கள மக்களின் எதிர்காலம் குறித்தும், ஆட்சியாளர்களின் கொள்கைகள் பற்றியும், இது பௌத்த நாடு. இதனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றும், இலங்கை பௌத்தர்களுக்கு மாத்திரம் உரித்தான நாடு என்றும் பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
இவ்வாறு வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ் பிரதிநிதிகளும், சிங்களப் பிரதிநிதிகளும் தமது உரிமைகள், அரசியல் அதிகாரங்கள் பற்றியெல்லாம் பேசும் இன்றைய நிலையில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, வாழ்விடம், எதிர்காலம் குறித்தோ, இனப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கு எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்பது குறித்தோ எதனையும் பேசாதுள்ளார்கள். இவர்களின் இந்த மௌனநிலை முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாதென்ற அர்த்தத்தை கொடுத்துவிடும்.
ஆதலால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் குரலாக செயற்பட தைரியமில்லாதவர்கள் முஸ்லிம் அரசியலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
தாங்களே முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று வெறுமனே சொல்லிக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை முஸ்லிம்கள் தொடர்ந்தும் அங்கீகரித்துக் கொண்டிருப்பார்களாயின் அரசியல் அதிகாரமற்ற ஓர் இனமாக முஸ்லிம்கள் இருக்க வேண்டியேற்படும்.
எடுப்பார் கைப்பிள்ளை போன்றுள்ள இன்றைய முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்றிருப்பார்களாயின் மேற்சொன்ன நிலையை முஸ்லிம்கள் விரைவில் அடைந்து விடுவார்கள். சமூகத்தின் மீது அக்கறையில்லாதவர்களாகவும், ஆட்சியாளர்களுக்கு மாத்திரம் விசுவாசம் காட்டுகின்றவர்களாகவும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.
இவர்களினால் முஸ்லிம் சமூகம் சகல விதத்திலும் தேய்வடைந்து கொண்டிருக்கின்றது. அதே வேளை, அவர்களும், அவர்களின் குடும்பமும் பொருளாதாரத்திலுள்ள சுக போகங்களிலும் வளர்ந்து கொண்டிருப்பதை முஸ்லிம்கள் அவதானிக்க வேண்டும். இவர்களின் இந்த வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் உரிமைகள் தாரைவார்க்கப்பட்டுள்ளன என்ற உண்மையை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.
முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரங்கள் உள்ளிட்ட ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் உள்ளன. காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றப் பிரச்சினை, காணாமல் போனவர்களின் பிரச்சினை, ஆயுதப் போராட்ட காலங்களில் கொலை செய்யப்பட்டவர்கள், அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் புதை குழிகளை அடையாளங் காண வேண்டிய பிரச்சினை, அரச உயர் பதவிகளில் புறக்கணிப்பு, மதவிழுமியங்களை பின்பற்றுவதில் உள்ள பிரச்சினை என பல பிரச்சினைகள் உள்ள போதிலும் அவை குறித்து அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி ஏனைய துறைத் தலைவர்களும் குருடர், செவிடர் போன்றே உள்ளனர்.
இலங்கை இராணுவத்திற்கும், தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே யுத்தம் நடைபெற்ற காலத்திலும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். பல இழப்புக்களை சந்தித்தார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம்கள் வரலாற்றில் என்றும் அனுபவித்திராத பல துன்பங்களையும், இழப்புக்களையும் சந்தித்துள்ளார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே முஸ்லிம்களின் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள்.
இத்தகையவர்களுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எனக்கூறிக்கொள்பவர்கள் இறுக்கமான இணைப்பைக் கொண்டிருந்தார்கள். அமைச்சுப் பதவிகளையும் பெற்றார்கள்.
இது போதாதென்று ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் இன்னும் மோசமாக நசுக்கப்பட்டார்கள்.
இதன் பின்னர் கூட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுடன் அன்பு செலுத்தி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள். முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டோம் என்று நா கூசாமல் சொல்லிக் கொண்டார்கள்.
ஆயினும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. மறுபுறத்தில் முஸ்லிம்களில் ஒரு சாரார் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களுக்கு வரவேற்பு அளித்தார்கள். அமைச்சர் பதவிகள் மூலமாக இன்பம் காணும் சமூகமாக முஸ்லிம் இருப்பது வெட்கத்துக்குரியதாகும்.
முஸ்லிம் பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் பல்வேறு வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் இடமாற்றங்களின் போது ஆசிரியர் வளம் சரியாக பகிரப்படாமை, கல்வி அதிகாரிகள் பிரதேச ரீதியாக முன்னுரிமை கொடுத்து செயற்படல், தகுதியற்றவர்களுக்கு பதவி உயர்வும், பதவிகளும் வழங்கப்படல், தளபடக் குறைபாடுகள், வகுப்பறைக் கட்டிடக் குறைபாடு என்று பல குறைபாடுகளுடன் இயங்கிக் கொண்டிருப்பதையிட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதேயில்லை.
தங்களின் கொந்தராத்துக்களை செய்வதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் வேண்டுமென்பதற்காக அதிகாரிகளின் பொருத்தமற்ற நடவடிக்கைகளை கண்டும் காணாதும் போன்றுள்ளார்கள்.
இவ்விதமாக முஸ்லிம்களின் கல்வி இருக்கின்ற போது எவ்வாறு முஸ்லிம்களினால் கல்வித்துறையில் சாதிக்க முடியும். அரசாங்கத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற ஆதரவுக்காக பெற்றுக் கொள்ளும் நிதி ஒதுக்கீடுகளை வீதிகளை அமைப்பதற்கே ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளை சூழ கொந்தராத்துக்காரர்களே உள்ளார்கள். பாடசாலைகள் குறைபாடுகளினால் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
மதத் தலைவர்களை எடுத்துக் கொண்டால் இவர்களுக்கு சமூகத்தில் மிகப் பெரிய செல்வாக்கு இருக்கின்ற போதிலும் அவர்கள் மத போதனைகளுடன் மாத்திரம் தமது பணியை சுருக்கிக் கொண்டுள்ளார்கள். அரசியல்வாதிகளை வழி நடத்தும் பொறுப்பும் இவர்களை சார்ந்ததாகும். ஆனால், இவர்களில் பலர் அரசியல்வாதிகளின் பொருத்தமற்ற செயற்பாடுகளை அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் கல்வி, அரசியல், பொருளாதாரம் பின்னடைவுகளைக் கண்டு கொண்டிருப்பதற்கு அரசியல்வாதிகள் கூடிய பொறுப்பைக் கொண்டிருந்தாலும், ஏனைய துறைத் தலைவர்களும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாகின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளின் கொள்கை மற்றும் தலைவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கட்சியை விட்டுப் பிரிந்தவர்கள், விலக்கப்பட்டவர்கள் முஸ்லிம் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மிக மோசமாக விமர்சனம் செய்தார்கள்.
தாங்கள்தான் சமூகத்தின் மீது அக்கறையுடையவர்கள் என்றும் தெரிவித்தார்கள். பொதுக் கூட்டங்களை நடத்தினார்கள், தேர்தல்களில் போட்டியிட்டார்கள். இத்தகையவர்கள் கூட தற்போது முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்று சமூகத்திற்காக குரல் கொடுக்காது ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.
முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து நாம் பேசினால் இனவாதிகளினதும், ஆட்சியாளர்களினதும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள நேரிடும் என்ற அச்சம் முஸ்லிம் அரசியல் மற்றும் மதத் தலைவர்களிடையே காணப்படுகின்றது. அச்சமின்றி செயற்படுவது ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்றாகும்.
முஸ்லிம் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை எடுத்துக் கொண்டால் அவர்களிடம் தலைவர்களுக்குரிய பண்புகள் இல்லை.
பொய்யும், புரட்டும், போலியான உரிமைக் கோஷமும்தான் இவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. இந் நிலை மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் சமூகத்திற்குரிய உண்மையான அரசியல் தலைவர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும், அரசியல் கட்சிகளையும் அடையாளங் காணலாம்.
ஆளுமையுள்ளவர்களை தலைவர்களாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்யும் வல்லமை மக்களிடம்தான் உள்ளது. எந்த சமூகம் இதனை சரியாகச் செய்யுமோ அந்த சமூகம் சிறுபான்மைச் சமுகமாக இருந்தாலும் ஆளும் வர்க்கத்தையே ஆளும் சமூகமாக இருக்கும். இதற்கு உலகில் ஏராளமான சான்றுகள் உள்ளன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM