வவுனியாவில் கரும்புத் தோட்டம் மற்றும் சீனி தொழிற்சாலையை அமைக்கும் இத்திட்டத்தினை முன்னெடுக்கும் தரப்பினர், இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கென வாராது வந்த வரப்பிரசாதம் என்று இனிப்பாய் சிலாகித்து வருகின்றனர்.
ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் மிகவும் கசப்பானவை. வடக்கில் சீனி தொழிற்சாலை இனிப்பு தடவிய விஷம் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பொ. ஐங்கரநேசன், வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாக உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கென கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்காகவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தரப்பினர், இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கென வாராதுவந்த வரப்பிரசாதம் என்று இனிப்பாய் சிலாகித்து வருகின்றனர். ஆனால், இதன் உண்மைகள் மிகவும் கசப்பானவை. வடக்கில் சீனி தொழிற்சாலை, இனிப்பு தடவிய விஷம்.
அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கும்போது திட்டத்தின் பொருத்தப்பாட்டை அறிந்துகொள்ள நீர் அடிச்சுவடு என்ற நீர்த் தேவையே சூழலியல் குறிகாட்டியாக முதலில் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
கரும்பினதும் சீனியினதும் நீர் அடிச்சுவடு மிகவும் உயர்வானது. ஒரு கிலோ கரும்பை உற்பத்தி செய்வதற்கு 210 லீற்றர் தண்ணீரும் ஒரு கிலோ சுத்திகரிக்கப்பட்ட சீனியை உற்பத்தி செய்வற்கு 1780 லீற்றர் தண்ணீரும் தேவைப்படுகிறது.
கரும்பு வருடம் முழுவதும் நீர் பாய்ச்ச வேண்டிய ஒரு பல்லாண்டுப் பயிராகும். இவற்றின் அடிப்படையில் பேராறுகள் எதுவுமே இல்லாத வறண்ட வலயமான வடக்கில் பெருமளவு நீரை விழுங்கும் சீனி உற்பத்தியை முன்னெடுப்பது பேராபத்தாகும்.
நீர்ச் சமநிலையை குழப்பி அத்தியாவசிய உணவுப் பயிர்களின் உற்பத்தியிலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஈற்றில் அந்த மண்ணை பாலையாக்கிவிடும்.
கரும்பு, மிக அதிகளவில் இரசாயன உரங்களையும், பீடை கொல்லி, களைக்கொல்லி நஞ்சுகளையும் வேண்டி நிற்கும் ஒரு பயிராகும். தொடர்ச்சியாக விவசாய இரசாயனங்களால் குளிப்பாட்டப்படும் மண்ணில் நுண்ணங்கிகள் அழிந்து தொடர்ந்து பயிரிட முடியாதவாறு மண் மலடாகிவிடும்.
கந்தளாய் சீனி தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதற்கு, கரும்பில் இருந்து இனிமேலும் அதிக விளைச்சலை பெறமுடியாதவாறு நிலம் தரம் இழந்துபோனதும் ஒரு காரணம்.
விவசாய இரசாயனங்கள் நீரோடு கலந்து குடிநீரையும் மாசடையச் செய்கிறது. வவுனியா ஏற்கனவே சிறுநீரக நோய்களின் ஆபத்து அதிகமாக உள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய இரசாயனங்கள் கலந்த குடிநீரை அருந்தியதால் ஏராளமானோர் சிறுநீரகங்கள் செயலிழந்து அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், கரும்புச் செய்கை வவுனியாவின் நிலத்தினதும் மக்களினதும் ஆரோக்கியத்துக்கு பெருங்கேடாகவே முடியும்.
கரும்புச் செய்கைக்கும் சீனி தொழிற்சாலைக்கும் ஒதுக்கப்பட்ட காணியின் அளவு, வவுனியாவின் மொத்த பரப்பில் ஆறு விழுக்காடுகளுக்கும் அதிகம். இந்தப் பாரிய இடத்தை காடுகளை அழித்தே பெறமுடியும்.
மக்கள் போரினால் இடம்பெயர்ந்ததன் காரணமாக கைவிடப்பட்ட மேய்ச்சல் தரைகளையெல்லாம் அங்கு மரங்கள் வளர்ந்ததை காரணம் காட்டி, காடுகள் என எல்லைகளை வரையறுத்த வனவிலங்கு திணைக்களம் இப்போது அதே காடுகளை கரும்புச் செய்கைக்கு விடுவிப்பதற்கு இணங்கியுள்ளது.
காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படப்போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்கியுள்ளதை கருத்திற்கொள்ளாமல், காடுகளை அழித்து சீனி தொழிற்சாலையை அமைப்பது குருட்டுத்தனமான முடிவாகும்.
இது தமிழ் மக்களின் பூர்விக நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரால் நிரந்தரமாகவே கையகப்படுத்தும் ஒரு தந்திரமுமாகும். சீனி தொழிற்சாலை சிங்கள குடியேற்றத்துக்கும் வித்திடும் என்ற சந்தேகமும் உள்ளது.
மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கம் விவசாயத்தை மேம்படுத்தல் என்று சொல்லப்பட்டபோதும் அதன் உள்ளார்ந்த நோக்கம் சிங்கள குடியேற்றமாகும். அதுவும், குடியேற்றப்படும் இடத்தின் இன விகிதாசாரப்படி இல்லாமல், இலங்கையின் இன விகிதாசாரத்தின்படியே குடியேற்றங்களை மேற்கொள்வது மகாவலி அதிகார சபையின் எழுதப்படாத அதிகாரம்.
மகாவலியுடன் இணைக்கப்பட்ட கந்தளாய் குளத்தை மையப்படுத்தி நிகழ்ந்த பயிர்ச்செய்கையே தமிழ் நிலமான கந்தளாயை இன்று முற்றுமுழுதாக சிங்களவர்களின் நிலமாக்கியது.
வவுனியாவிலும் 'கரும்புக்கு நீர் பாய்ச்சுகிறோம்' என்று சொல்லி வவுனியாவின் குளங்களோடு மகாவலியை தொடுத்து நிலங்களை மகாவலி அதிகார சபை தன்வசமாக்கலாம். மகாவலியில் நீர்வரத்து இருக்கிறதோ, இல்லையோ... இதனூடாக சிங்கள குடியேற்றம் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட எம் மக்களின் வாழ்வை மேம்படுத்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். ஆனால், வடக்கின் மண்ணுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்கள் எத்தனையோ இருக்கும்போது எவ்விதத்திலும் பொருந்தாத சீனி தொழிற்சாலையை வரவேற்பது அறிவுடையோரினதோ, தமிழ் தேசிய பற்றாளர்களினதோ செயலாக இருக்காது.
நீண்ட நெடிய வலி மிகுந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இனம் நம்முடையது. இப்போராட்டம் எதிர்கால சந்ததியின் வளமான வாழ்வுக்காக மண்ணின் வளங்களை காப்பாற்றி, அவர்களிடம் கையளிப்பதையும் உள்ளடக்கியதே ஆகும். மண் மீட்கப் புறப்பட்ட நாம் அம்மண் பாலையாவதற்கோ மலடாவதற்கோ எதன் பொருட்டும் அனுமதிக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM