(நெவில் அன்தனி)
தென் கொரியாவில் ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனைகளில் சிலர் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த வீரரங்கனைகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் புதன்கிழமை (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
'ஆசிய இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பின்போது வீராங்கனை ஒருவரோ அல்லது வீராங்கனைகள் கொண்ட குழுவினரோ பொறுப்பற்ற வகையில் அல்லது ஒழுங்கீனமாக நடந்துகொண்டிருந்தால் முறையான விசாரணைகளின் பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். அதன் மூலம் இத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறுவது தடுக்கப்படும். அத்துடன் வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கு ஒரு பாடமாகவும் இது அமையும்' என அமைச்சர் குறிப்பிட்டார்.
என்ன வகையான தண்டனை வழங்கப்படும் என அமைச்சரிடம் கேட்டபோது 'வாழ்நாள் தடை விதிக்கப்படும்' என பதிலளித்தார்.
ஆசிய இளையோர் வலைபந்தாட்டப் போட்டியின்போது இரவு வேளையில் சில வீராங்கனைகள் மதுசாரம் அருந்தியதாகவும் கும்மாளத்தில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனமும் இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கமும் விசாரணைகளை நடத்திவருவதாகவும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் விக்டோரியா லக்ஷ்மி தெரிவித்தார்.
ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சில வீராங்கனைகள் ஒரு முக்கிய போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. எவ்வாறயினும் முன்னோடி சுற்றில் 12 வீராங்கனைகளுக்கும் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க, ஆசிய இளையோர் வலைபந்தாட்டப் போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு நியாயமாக இடம்பெறவில்லை எனத் தெரிவித்து பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் பெற்றோர்கள் சிலர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அத்துடன் மீண்டும் தேர்வு நடத்துமாறும் வலியுறுத்தினர். ஆனால், அது குறித்து எவரும் அலட்டிக்கொள்ளவில்லை.
வீராங்கனைகளின் தேர்வு குறித்து இளையோர் வலைபந்தாட்ட அணி பயிற்றுநர் அமல்கா வன்னித்திலக்கவிடம் கேட்டபோது, 'போட்டிகளின்போது மத்திய கள வீராங்கனைகளின் ஆற்றல்களும் பந்து பரிமாற்றங்களும் மிக மோசமாக இருந்தது. தென் கொரியா செல்வதற்கு முன்னர் அது குறித்து நான் அவ்வப்போது சுட்டிக்காட்டி, திறமைசாலிகளைத் தெரிவு செய்யுமாறு வாய்மூலமும் எழுத்துமூலமும் கோரிக்கை விடுத்தேன்' என்றார்.
ஆசிய இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சிங்கப்பூரிடம் முன்னோடி சுற்றிலும் மலேசியாவிடம் அரை இறுதியிலும் தோல்வி அடைந்த இலங்கை இளையோர் அணி, ஹொங் கொங் உடனான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மூன்றாம் இடத்தைப் பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM