(எம்.மனோசித்ரா)
வரலாற்று முக்கியத்துவம் மிக்க விகாரைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பொது மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது. தேசிய கொள்கைகளை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செயற்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , 'நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? ' என்று அதிகாரிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.
எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை என வடக்கு பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் , 'எனக்கு அதனை விடுவிப்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.' எனக் குறிப்பிட்டார்.
எனினும் அது அமைச்சரவையின் கொள்கை என்றும், அதனை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கடுந்தொனியில் தெரிவித்ததோடு, அடுத்த முறை இவ்வாறு தேசிய கொள்கையை பின்பற்றாமைக்கு காரணங்களை முன்வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.
விகாரையொன்றை அமைப்பதற்கு 275 ஏக்கர் நிலப்பரப்பை எடுத்தால் அது மகா விகாரையை விடவும் பெரியதாகிவிடும். மகா விகாரை, தியதவனாராமய மற்றும் அபய கிரி உள்ளிட்ட அனைத்து விகாரைகளை இணைத்தால் 100 ஏக்கர் காணப்படும்.
அவ்வாறெனில் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக ஒரு விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு உரித்துடையதாகக் காணப்படும் என்று நான் நினைக்கவில்லை. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொது மக்களின் 3000 ஏக்கர் காணியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. பனாமுரே திலகவன்ச என்ற தேரரே தற்போது அந்த காணியை ஆக்கிரமித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன் போது சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்த கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியின் உறுப்பினராக அந்த தேரர் செயற்பட்டதாக அதிகாரிகள் இதன் போது தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி , 'அந்த செயலணி தற்போது செயற்பாட்டில் இல்லையல்லவா? அத்தோடு அந்த செயலணிக்கு அரசாங்கத்தின் காணியையோ அல்லது தனியாரின் காணியையோ ஆக்கிரமிக்க முடியாது. இதில் என்ன சட்ட முறைமை காணப்படுகிறது? வனப்பகுதிகள் உங்களுக்கு உரித்தானதில்லையல்லவா?
திரியாயவுக்கு எதற்காக 3000 ஏக்கர் காணி தேவைப்படுகிறது? திரியாய என்பது விகாரையல்ல. முன்னயை காலங்களில் அது துறைமுக மையமாகும். படகின் மூலம் திரியாயவிலிருந்து ஹொரவபொத்தான வரை செல்ல முடியும். பின் ஹொரவபொத்தானையிலிருந்து அநுராதபுரத்துக்கும், அங்கிருந்து மல்வத்து ஓயாவுக்கும் , அங்கிருந்து மன்னாருக்கும் செல்ல முடியும்.
அந்தப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவிலொன்றும் காணப்பட்டது. எனவே அங்கு தேரர்களால் வைக்கப்பட்டுள்ள கற்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM