(நெவில் அன்தனி)
கிரிக்கெட் நிருவாகத்தில் இடம்பெற்ற குளறுபடிகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியைக் கோரப்போவதாக 1996 உலக சம்பியன் அணித் தலைவரும் இலங்கை விளையாட்டுத்துறை பேரவைத் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கிரிக்கெட் நிறுவனத்தில் கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் பொருட்டு விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஊடாக உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விரைவில் அனுப்பவுள்ளதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்தினால்தான் கிரிக்கெட் சரியான பாதையில் செல்லும். அல்லது கிரிக்கெட் உருப்படியாகாது என்றார் அர்ஜுன ரணதுங்க.
தொடர்ந்து பேசிய அவர், '2015இல் இருந்து கிரிக்கெட் அழிவுப் பாதையை நோக்கிச் சென்றதற்கான காரணத்தை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும். எதற்காக பணம் செலவிடப்பட்டது என்பதைக் கண்டறிந்தால் யாரெல்லாம் என்ன செய்தார்கள் என்பது வெளிச்சத்திற்கு வரும். எமது நாட்டில் அனுபவசாலிகள், பயிற்றுநர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், எமது பயிற்றுநர்களை விட்டுவிட்டு வெளிநாட்டிலிருந்து பயிற்றுநர்களை அழைத்து பெருந்தொகை சம்பளம் வழங்குகிறார்கள். அவர்கள் யாரும் வரி செலுத்துவதில்லை. நாங்கள் வெளிநாட்டுக்கு சென்று ஏதாவது தொழில் செய்தால் வரி செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் எல்லாம் தங்களுக்கு சார்பாக செய்துகொண்டுள்ளார்கள்.
'நமது நாட்டில் நிதி இல்லை என்கிறார்கள். தற்போது நாட்டில் வரி செலுத்துவதற்கான கோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இங்கு அழைக்கப்படும் வெள்ளையர்களும் இங்கு டொலர்களில் இலாபம் பெறுபவர்களும் வரி செலுத்துவதில்லை. இதனை அனுமதிக்க முடியாது. விளையாட்டுத்துறை சங்கங்களில் பதவி வகித்து இலாபம் ஈட்டியவர்கள் எவ்வளவுபேர் வரி செலுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
'இது குறித்து நான் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் அறிவிப்பேன். இதன் மூலம் ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டவர்கள் விளாயாட்டுத்துறையிலிருந்து ஒதுங்கிப் போய்விடுவார்கள் என நம்புகிறேன். ஜனாதிபதி ஆணைக்குழு மூலமே தண்டனை வழங்க முடியும். எனவே அதைத்தான் நாம் செய்யவேண்டும்' எனக் கூறினார்.
கிரிக்கெட்டுக்கு நேர்ந்தது என்ன?
இலங்கை கிரிக்கெட் விளையாட்டின் தரம் இப்போது எங்கே இருக்கிறது என்பது குறித்தும் அர்ஜுன ரணதுங்க பேசினார்.
'இலங்கை கிரிக்கெட்டின் தரம் இப்போது எங்கே இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். 40 வருடங்களுக்குப் பின்னர் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.
இதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை. தற்போதுதைய இலங்கை அணி, அரவிந்தவை விடுத்து, 1996 அணியைவிட சிறந்த அணியாகும். அப்போதிருந்ததைவிட சிறந்த வீரர்கள் இப்போது இருக்கிறார்கள். ஆனால், 40 வருடங்களின் பின்னர் தகுதிகாண் சுற்றுக்கு செல்வதன் மூலம் கிரிக்கெட்டில் பிரச்சினை இருக்கிறது என்பது புலனாகிறது.
'ஊழல்மோசடியற்ற நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி முயற்சிக்கிறார். களவு, ஊக்க மருந்து அல்லது போதை மருந்து பாவனை இவை அனைத்தும் மோசடிதான். இவை அனைத்தையும் இல்லாதொழிக்கவேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். அமைச்சருக்கும் எங்களுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கவே செய்கிறது. இத்தகைய மோசடிகளை சுத்திகரிக்கும்போது அதனை தடுக்க ஒருசாரார் முயற்சிக்கின்றனர்.
ஏனேனில் கள்வர்கள் பலசாலிகள். ஆனால் நாங்கள் பின்வாங்கமாட்டோம். இந்த நாட்டில் கள்வர்கள் என்பவர்கள் மிகவும் பலசாலிகள் என்பதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.
'நாங்கள் புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிகளைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை நாடியது அதற்கு சிறந்த உதாரணமாகும். நீதிமன்றத்திற்கு சென்ற சங்கத்தினரைப் பார்க்கும்போது யார் 'கேம் காரர்கள்' என்பதை அறிந்துகொள்ளலாம்' எனவும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM